PUBLISHED ON : மார் 21, 2026

கோவை, ராம்நகர், சபர்பன் உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 8ம் வகுப்பு படித்தேன். கணித ஆசிரியையாக பணிபுரிய வேண்டும் என்று, எனக்கு சிறு வயதில் இருந்தே ஆசை இருந்தது.
அதற்கேற்ப, 8ம் வகுப்பு கணித ஆசிரியர் ராமச்சந்திர ராவ், சிரித்த முகத்துடன், எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்தினார். அடுத்தாண்டு, 9ம் வகுப்பின் கணக்கு ஆசிரியர் ராமச்சந்திரன், புதிதாக பணியில் சேர்ந்தார். அவர், மாணவர்களை நன்றாக ஊக்குவிப்பார். கணக்கை கரும்பலகையில் எழுதி, அதற்கு சரியான விடை கண்டுபிடிக்க சொல்வார். முதலில் சரியான விடையை கண்டுபிடித்தோருக்கு, 'எக்ஸலன்ட்' என, எழுதி கையெழுத்து போடுவார். அடுத்த ஐந்து பேருக்கு, 'வெரிகுட்' என்றும், அடுத்த ஐந்து பேருக்கு, 'குட்' என்றும் எழுதி, கையெழுத்திடுவார். அதற்காக, மாணவர்களிடம் போட்டியே நடக்கும். இதனால், கணக்குகளுக்கு வேகமாக தீர்வு கண்டுபிடிக்கும் பழக்கமும் ஏற்பட்டது.
நான் விரும்பிய படியே, ஒரு பள்ளியில் கணித ஆசிரியை ஆனேன். பின், கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் முதுநிலை கணித ஆசிரியையாக, 20 ஆண்டுகள் பணிபுரிந்தேன். தொடர்ந்து, பள்ளியின் முதல்வராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
கடந்த, 1995ல், சிங்கப்பூர் சென்று, அந்நாட்டு கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிகளில், கணித ஆசிரியையாக பணிபுரிந்து, 2011ல், மூத்த கல்வி அதிகாரியாக ஓய்வு பெற்றேன்.
தற்போது என் வயது, 74. எனக்கு கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி, கணித ஆசியராகவும், பேராசிரியராகவும் உயர்வதற்கு, பள்ளி நாட்களில் கணிதம் மீது ஆர்வத்தை விதைத்த ஆசிரியர்கள் ராமச்சந்திர ராவ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரே காரணம். அவர்களை என் நினைவில் நிறுத்தி, நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
- அமிர்தம், கோவை. தொடர்புக்கு: 96292 31088
