PUBLISHED ON : ஜன 04, 2020

கண்ணனும், பாலுவும் ஒரே வகுப்பில் படித்தனர். வசதியான குடும்பத்தில் பிறந்தவன் கண்ணன். படிப்பிலோ, விளையாட்டிலோ அக்கறை காட்ட மாட்டான்; பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை உள்ளவன்.
பாலுவோ, ஏழைத் தொழிலாளியின் மகன்; பெற்றோர் படும் கஷ்டங்களை உணர்ந்தவன். நன்கு படித்து, நல்ல பணியில்
அமர்ந்து, வயதான காலத்தில் பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவன். படிப்பு, விளையாட்டு என, பலகலைகளிலும் முதல் மாணவனாக விளங்கினான்.
இதைக்கண்டு, கடும் வெறுப்பை உமிழ்ந்தான் கண்ணன். பாலுவின் ஏழ்மையை சுட்டிக்காட்டியதுடன், மட்டம் தட்டி பேசி மகிழ்ச்சி அடைந்தான். அதை எல்லாம் பொருட்டாக எடுக்காமல் சகித்துக் கொண்டான் பாலு.
பள்ளியில், விளையாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; கண்ணனுக்கு அதில் ஆர்வம் இல்லை என்றாலும், சூழ்ச்சியால் பாலுவை தோற்கடிக்க, ஓட்ட பந்தயத்தில் சேர்ந்தான். அதில், ஆறு பேர் இடம் பெற்றிருந்தனர்.
போட்டியின் முதல் நாள், ஓடு பாதையை அடையாளப் படுத்தும் விதமாக, சுண்ணாம்பு பொடியால் கோடுகள் போட்டு, தயார் படுத்தினர்; உரிய வரிசை எண்களையும் எழுதினர். பாலுவின் ஓடுதள எண் ஐந்து; கண்ணனுக்கு ஆறு.
அன்று பள்ளி முடிந்து, அனைவரும் சென்றுவிட்டனர். யாரும் பார்க்காத வேளையில் விளையாட்டு மைதானத்திற்கு சென்றான் கண்ணன். ஓடுதள பாதையை கவனித்தான். பாலு ஓட வேண்டிய பாதையில், சில இடங்களில் குழி பறித்து, முட்களை புதைத்தான். அதன் மீது மண்ணை துாவி, அடையாளம் தெரியாதபடி செய்தான்.
'எப்படியும், பாலுவின் காலில் முள்குத்தி காயம் ஏற்படுத்தும். அந்த வலியால் ஓட முடியாமல் போட்டியில் தோற்பது உறுதி' என, எண்ணி வீட்டிற்குச் சென்றான் கண்ணன்.
மறுநாள் -
விளையாட்டு போட்டிகள் துவங்கின. மிகவும் உற்சாகமாக காணப்பட்டான் கண்ணன். பந்தயத்தில் கலந்து கொள்ளவிருந்த, ஆறு பேரில் ஒருவன், உடல் நலமின்மையால் பங்கேற்க வரவில்லை. எனவே, 'ஐந்து ஓடுதளங்களை மட்டும் தயார் செய்தால் போதும்...' என, கூறினார் ஆசிரியர்.
அதன்படி, பாலு நான்காவது தளத்திலும், கண்ணன், ஐந்தாவது தளத்திலும் ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த திடீர் மாற்றத்தால், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான் கண்ணன்.
'பாலுவை தோற்கடிக்க செய்த சூழ்ச்சியில், தானே மாட்டிக் கொள்வோம்' என்று, அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முட்களைப் புதைத்த இடங்களைக் கண்டுபிடிக்க முயன்றான். பதட்டத்தால் எதுவும் சரியாக புலப்படவில்லை. செய்வதறியாது திணறி நின்றான்.
பந்தயம் ஆரம்பமானது; வேறு வழியின்றி ஓடினான் கண்ணன். ஓடு தளத்தில் முள் புதைந்திருந்த பகுதியில் காலை ஊன்றியவுடன், 'ஐயோ அம்மா...' என்று கத்தியபடியே விழுந்தான். பாதத்தில் முள் குத்தியதால், ரத்தம் வழிந்தது; முட்டியில் அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, உள்ளங்காலில் தைத்திருந்த முள்ளை அகற்றியதுடன், பெரிய கட்டும் போட்டனர்; வலியால் துடித்து அலறினான் கண்ணன்.
போட்டியில், முதலாவதாக வந்து பரிசு பெற்ற பாலு, அன்று மாலை மருத்துவமனைக்குச் சென்றான். கண்ணனை சந்தித்து ஆறுதல் கூறினான்.
'நல்ல குணம் படைத்த பாலுவுக்கு, பெரிய தீங்கு செய்ய இருந்தோம்' என்று புலம்பி வருந்தினான் கண்ணன். தான் செய்த கேடு, தனக்கே வந்ததை எண்ணி அழுதான். தவறை உணர்ந்து மனம் திருந்தினான்.
தளிர்களே... திறமையை வளர்த்து முன்னேற முயற்சி செய்ய வேண்டும். பிறர் திறமை மீது பொறாமைப்பட்டால், தீய எண்ணம் தான் மனதில் குடியேறும்.
வி. கற்பகவல்லி
