தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தேங்க்யூ சார்!

தேங்க்யூ சார்!

தேங்க்யூ சார்!


PUBLISHED ON : ஜூலை 10, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு நரி, ஒரு ஓநாயைச் சந்தித்தது. அவை இரண்டும் உரையாடத் தொடங்கின.

ஓநாய், நரியிடம் கேட்டது.

'நரித் தம்பி, நீ எதுவரை படித்திருக்கிறாய்?''

'உண்மையைச் சொன்னால், நான் பாதி படித்திருக்கிறேன்!'' என்றது நரி.

'அப்படியென்றால், உன்னை விட நான் இரண்டு மடங்கு படித்திருக்கிறேன். அதனால் நீ இன்று முதல் என்னை, 'சார்' என்று அழைக்க வேண்டும்!'' என்று கட்டளையிட்டது ஓநாய்.

அப்படிப் பேசிக்கொண்டிருந்த போது, பின்னால் இருந்த புதரிலிருந்து தாவி வந்தது ஒரு பெரிய புலி.

ஓநாயிடம், ''இப்போது நாம் என்ன செய்வது சார்?'' என்று கேட்டது நரி.

ஆனால், அந்தப் புலியைப் பார்த்து, பேசக் கூட முடியாமல் பயந்து போயிருந்தது ஓநாய். தாவுதற்கு ஆயத்தமாகியபடியே புலி கேட்டது.

'நீங்கள் எங்கே போகிறீர்கள்?''

உடனடியாகச் சிந்தித்து ஒரு முடிவெடுத்த நரி, ''உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்க வேண்டும் என்று தான் உங்களைத் தேடி வந்து கொண்டிருந்தோம் ஐயா. ஒரு விஷயம் குறித்து எங்களுக்குள் ஒரு விவாதம் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் அறிவால்தான் எங்கள் பிரச்சனையைத் தீர்க்க முடியும்!''

அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தது புலி.

'என்ன பிரச்னை? முதலில் அதை என்னிடம் சொல்லுங்கள்!'' என்றது.

'நான் வேட்டையாடி இரண்டு பெரிய காட்டுக் கோழிகளைப் பிடித்தேன். ஆனால், இந்த ஓநாய் நண்பர் என்னை விட அதிகம் படித்திருப்பதால் தனக்கும் ஒரு கோழியைத் தர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். நீங்களே சொல்லுங்கள் இது நியாயமா?'' என்றது நரி.

ஓநாயைக் கூர்மையாகப் பார்த்தபடி, 'நீ எதுவரை படித்திருக்கிறாய்?'' என்று கேட்டது புலி.

பயத்தால் ஓநாயின் பற்கள் கடகடவென்று அடித்துக் கொண்டன.

புலிக்கு ஒன்றும் புரியவில்லை.

அதைக் கண்ட நரி, அதற்கு விளக்கம் சொன்னது.

'தன் வாயில் எத்தனைப் பற்கள் உள்ளனவோ அத்தனைத் தகுதிகள் தனக்கு உண்டு என்றுதான் இவர் சொல்ல வருகிறார்,'' என்றது.

'அப்படியா? அப்படியென்றால் உன்னை விட எனக்குத்தான் அதிகமான தகுதிகள் உள்ளன! பார்க்கிறாயா?'' புலி, வாயைத் திறந்து தன் பயங்கரமான பற்கள் முழுவதும் வெளியே தெரியும்படிக் காட்டியது.

அந்தக் காட்சியைப் பார்த்து பேரதிர்ச்சி அடைந்த ஓநாய், உடனே மயங்கி விழுந்தது. ஓநாயின் அந்தச் செயலுக்கும் நரி விளக்கம் சொன்னது.

'நீங்கள் பெரிய படிப்பாளி என்று ஏற்றுக்கொண்டு இவர் உங்கள் பற்களை விழுந்து வணங்குகிறார்! எங்கள் பிரச்னையைத் தீர்த்த உங்கள் அறிவுத் திறனுக்கு, நானும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!'' என்று நரியும் புலியின் காலில் விழுந்து வணங்கியது.

'நான் உங்கள் பிரச்சனையைத் தீர்த்து விட்டேனா?'' என்று புலி வியப்புடன் கேட்டது.

'இரண்டு கோழிகளும் இப்போது உங்களுக்கே சொந்தமாகிவிட்டன. அதில் எனக்கோ, ஓநாய் நண்பருக்கோ கருத்து வேறுபாடு ஏதுமில்லை. நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள். வந்து இரண்டு கோழிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்!'' என்று நரி மிகவும் பணிவுடன் சொன்னது.

அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தது புலி, 'கோழிக்கறி என்பது அரிதாகக் கிடைக்கும் அபூர்வ உணவு! அது மட்டுமல்ல, முதலில் கோழிகளைத் தின்று, பிறகு நரியையும், ஓநாயையும் தின்றுவிடலாம்' என்று புலி மனதிற்குள் திட்டமிட்டது.

'சரி, நீ முன்னால் நடந்து வழிகாட்டு, நான் பின்னால் வருகிறேன்!'' என்று புறப்பட்டது புலி.

நரி அதை மலையின் ஒரு பக்கத்தில் உள்ள சுரங்கத்திற்கு அழைத்துச் சென்றது.

'முதலில் என் ஓநாய் நண்பர் சுரங்கத்திற்கு உள்ளே சென்று கோழிகளைப் பிடித்து வந்து உங்களிடம் கொடுப்பார்,'' என்றது நரி.

அந்தச் சுரங்கத்தின் நுழைவாயில், ஓநாய் நுழைய முடியாத அளவுக்கு மிகவும் இடுக்கமாக இருந்தது. ஆனால், அதற்குள் நுழைந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற ஆசையால் ஓநாய் கஷ்டப்பட்டு அதன் உள்ளே நுழைந்துவிட்டது.

நீண்ட நேரம் ஆன பின்பும் ஓநாய் வெளியில் வரவில்லை. அது உள்ளே என்ன செய்கிறது என்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி நரியும் சுரங்கத்திற்குள் சென்றது. பிறகு அதுவும் வரவே இல்லை.

பல மணி நேரத்திற்குப் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று புலி புரிந்து கொண்டது. தான் பெரிய படிப்பாளி என்பதையும் மறந்து, தன்னால் நுழைய முடியாத சுரங்கத்திற்குள் எட்டிப் பார்த்து நரியைச் சபித்து, திட்டியது.

புலி அங்கிருந்து சென்றவுடன், நரியின் உதவியுடன் சுரங்கத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தது ஓநாய்.

பிறகு அது உரத்த குரலில் நரியைப் பாராட்டியது.

'நீ படிக்காதவனாக இருக்கலாம், ஆனால், உன் அறிவும், திறமையும் அபாரம்தான்!'' என்றது ஓநாய்.

'தேங்க்யு சார்!'' என்றது நரி.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us