PUBLISHED ON : மே 23, 2020

வெயில் கொளுத்த துவங்கிவிட்டது.
வெப்ப அதிகரிப்பால், உடலில் நீர்சத்தை ஈடு செய்ய, அரிய கொடைகளை வழங்கியுள்ளது இயற்கை.
முக்கியமாக கனிவான பழங்கள். நீர்சத்து மிக்க, முலாம், கிர்னி, தர்பூசணி போன்றவை, வெப்பத்தை சமாளிக்க உதவுகின்றன. இவை, கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். இவற்றை உணவாக கொள்வதால் நீர் சத்தை ஈடு செய்யலாம்.
இளநீர் கலப்படமற்றது; ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது; எல்லா வயதினருக்கும் ஏற்றது.
பந்து போன்ற உருவம் உள்ளது இளநீர். மூன்று வகை, கடின சுவர்களைக் கொண்டது. கடின ஓடு, மென்நாரால் பொதியப்பட்டு பாதுகாப்பாக உள்ளது இளநீர்.
முதிராத தேங்காய் தான், இளநீர். இளம்பச்சை நிறத்திலானது. சிவப்பு, செம்பழுப்பு நிற ரகங்களும் உண்டு. தென்னையில் காய்பிடித்த, ஆறாம் மாதம் அறுவடை செய்தால் இளநீர். இது, 95 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. ஒரு வருடத்தில் அறுவடை செய்தால், தேங்காய்.
இளநீரில் புரோடீன், நார்ச்சத்து, இயற்கை இனிப்புகள் அதிகம் உள்ளன. வழக்கமாக உண்ணும் உணவில் அதிக சோடியமும், குறைவாக பொட்டாஷியமும் உள்ளன. சிறுநீரக கழிவை தேக்கும் தன்மையுள்ளது சோடியம். சிறுநீரை வெளியேற்றும் தன்மையுள்ளது பொட்டாஷியம்.
இளநீரில், சோடியம் குறைவாகவும், பொட்டாஷியம் அதிகமாகவும் உள்ளது; இதை குடித்தால், சிறுநீரக செயல்பாடு சீரடையும்; கற்கள் உருவாகுவதை தடுக்கும்.
வெயிலில் அலைந்து திரும்பியதும் இளநீர் குடித்தால், புத்துணர்வு ஏற்படும். இழந்த தாது உப்புக்கள், வைட்டமின் சத்துக்கள் திரும்ப கிடைப்பதால் தான் இந்த புத்துணர்வு.
மனித ரத்த பிளாஸ்மாவை போல், இளநீர் உள்ளது. இதனால், இரண்டாம் உலகப்போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு குளுக்கோசுக்கு பதிலாக, நரம்பில் இளநீர் நேரடியாக ஏற்றப்பட்டது. தற்போது, இந்த நடைமுறை இல்லை.
தென்னையின் எல்லா பாகங்களும் மனிதனுக்கு பயன் தருகிறது; இதை, கற்பகத்தரு, நித்திய மரம் என்றும் அழைப்பர். கற்பக தரு என்றால், அனைத்து தேவையையும் பூர்த்தி செய்ய வல்லது என பொருள்.
தென்னையின் தாயகம் ஆசியா கண்டம். தாவரவியல் பெயர், கோக்கஸ் நியூசிபெரா. எரிக்கேசியோ என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. 15ம் நுாற்றாண்டில் ஆப்ரிக்கா கண்ட பகுதிக்கு பரவியதாக கூறப்படுகிறது. வெப்ப மண்டலப் பகுதியில் செழித்து வளரும்.
* 'சைட்டோகைனின்' என்ற தாவர ஹார்மோன், இளநீரில் உள்ளது. வளர்சிதை மாற்றத்தால், தோல் சுருங்குவதை இது தடுக்கும். தோலில் எண்ணெய் படியவிடாமல் தடுக்கும்
* கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்திலிருந்து ஆற்றலை பெறுவதால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் நடக்கிறது. இதை துாண்ட, மாங்கனீசு என்ற தாது உப்பு தேவை. இது, இளநீரில் தாராளமாக உள்ளது
* இளநீரில் உள்ள, 'அர்ஜினைன்' என்ற அமினோ அமிலம், ரத்த நாளங்களை சீர்படுத்தும். இதனால் ரத்த ஓட்டம் தடங்கலின்றி நடக்கும். ரத்த அழுத்த நோய் ஏற்படாது
* இளநீரில் உள்ள நார்ச்சத்து, செரிமானக் கோளாறை சரி செய்யும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இளநீர் தாராளம் அருந்தலாம்
* மக்னீஷியம் என்ற தாது சத்து, நரம்பு மண்டல அழுத்தத்தை தளர்த்துகிறது. இது, 'செரோடோனின்' என்ற ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகிறது
* கால்ஷியம் சத்து நிறைந்த உணவு சாப்பிட்டால், இதய தசைகள் நெகிழ்ந்து, தசைப் பிடிப்பு நீங்கும். இதற்கு, சீராக இளநீர் அருந்தலாம். தசைப் பிடிப்பு தளர்வதால் மனம் அமைதி பெறும்
* கல்லீரலை பாதுகாக்கும் ஊட்டச்சத்து இளநீரில் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிஜென்டு, கல்லீரலில் தங்கும் நச்சுக்கழிவை வெளியேற்றும்
* உடலை குளிர்வித்து, இளமை பொலிவை தரும்; முதுமையைத் தடுக்கும். உடல் எடையை குறைக்கும்
* முகத்தில் பரு, புள்ளிகள், சுருக்கம் மற்றும் படை ஏற்பட்டால், இரவில் துாங்கப்போகும் முன், முகத்தில் இளநீரை தடவி, காலையில் கழுவ வேண்டும். தொடர்ச்சியாக, மூன்று வாரம் செய்தால் தீர்வு கிடைக்கும்.
***
கவனம் தேவை...
இளநீரை நேரடியாக பருகலாம்; சர்பத் போன்று பானம் தயாரித்தும் குடிக்கலாம்; பழச்சாறுடன் சேர்த்தும் அருந்தலாம். கடையில் புதிதாக, கனமுள்ளதாக பார்த்து வாங்க வேண்டும்; குலுங்கினால் தவிர்க்க வேண்டும்.
இளநீர் பருகிய உடன், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும்; சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்று அருந்தவும்.
