தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய விழிகள்! (19)

மாய விழிகள்! (19)

மாய விழிகள்! (19)


PUBLISHED ON : நவ 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்ததால் சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். காட்டில் வேனை துப்பறிந்து அதில் இருந்த மாணவியரை காப்பாற்றும் வகையில் செயல்பட்ட போது, கும்பலிடம் சிக்கிக் கொண்டனர். இனி -



கல்திட்டு பகுதியை அடைந்ததும், அனுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவள் வியப்புடன் தியாவை திரும்பி பார்த்தாள். தியாவும் அதிர்ந்து போயிருந்தாள்.

கல்திட்டு அருகே இருந்த மரங்கள், அடர்ந்த தோப்பு போன்ற பகுதி காணாமல் போயிருந்தன.

'கல்திட்டின் மறுபுறத்திற்கு வந்து விட்டோமோ' என்று அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சுற்றிலும் பார்த்தாள் அனு. அதே பகுதி தான். தியாவை திரும்பி பார்த்தாள்.

'அந்த மரங்கள் அடர்ந்த பகுதியை தியா உற்றுப் பார்த்து மறைய செய்திருப்பாள்' என்று நினைத்தாள் அனு.

''சூப்பர் அக்கா... சரியான சந்தர்ப்பம் பார்த்து செமையா செய்திருக்கிற...''

''என்ன சொல்ற அனு...''

''உன் வேலை தானே இது...''

''இல்லை... நான் இல்லை. என் முகத்தை நன்றாக பார்...'' என்றாள் தியா. அவள் முகத்திலும் வியப்பு பரவி கிடந்தது. அவள் கண்கள் அந்த பகுதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை; வியப்புடன் அங்குமிங்கும் பார்த்து கொண்டிருந்தாள்.

''என்ன நடக்கிறது இங்கே... என்ன நின்னுட்டீங்க... நகருங்கள்...'' என்று அவசரப்படுத்தினான் செல்வா.

அந்த இடத்தை கடந்தனர்.

'மரங்கள் அடர்ந்த அந்த பகுதி எப்படி காணாமல் போனது'

அனுவுக்கும், தியாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அவர்கள் காட்டுப்பகுதியில் நடந்தபடி, வார்டனையும் மற்ற மாணவியரையும் தேடினர்.

செல்வாவுக்கு, சின்னவரிடம் இருந்து மீண்டும் போன் வந்தது.

'வார்டனும், அந்த மாணவியரும் கிடைத்தனரா...' என்று கேட்டிருக்க வேண்டும்.

''இன்னும் இல்லை சார்...'' என்றான் பவ்வியமாக.

எதிர்முனை பேசுவதை கவனமாக கேட்டு, ''சரி சார்... சரி சார்... அப்படியே செஞ்சிடுறேன் சார்...'' என்றான்.

பேசி முடித்ததும், மற்றவர்களைப் பார்த்து, ''வாங்க போகலாம்... சின்னவர் நம்மை கோவிலுக்கு வர சொல்றாரு...'' என்றான்.

அவர்கள் திரும்பவும் வேனுக்கு வந்தனர். அதில் ஏறி கோவிலுக்கு சென்றனர்.

அனுவையும், தியாவையும் வேனிலே இருக்க செய்து, செல்வமும், வீராவும் இறங்கினர்.

அங்கே பூசாரி, இலக்கியன், ஆகியோரோடு, ஒரு சாமியாரும் இருந்தார்.

''நாலு பேரை ஒழுங்கா அழைச்சுட்டு வர தெரியல... தண்டம் தண்டம்...''

குரலை உயர்த்தி, செல்வாவை திட்டினார் இலக்கியன்.

''சாரி சார்... நாங்க கவனமாகத்தான் வந்தோம். இயற்கை உபாதை கழிக்க போன சமயத்துல, அவங்க கீழே இறங்கி இருக்காங்க. இப்ப இந்த காட்டுக்குள்ள அவங்கள தேடி கண்டுபிடிக்க முடியல...''

''நீ பேசாத... ஒரு வேலையை ஒழுங்கா செய்ய துப்பில்லை. பேசுறான் பேச்சு...''

கோபமாய் கத்திய இலக்கியன், கை கடிகாரத்தை பார்த்தார்.

''இன்னும் ஐந்து மணிநேரம் தான் இருக்குது. அதற்குள்ள அவங்கள பிடிச்சாகணும். காட்டை விட்டு அவங்க வெளியேறிட கூடாது...''

கோபத்துடன் உலாவினர்.

பூசாரி பணிவாக அவரைப் பார்த்தபடியே நின்றார்.

''ஆமா... நீ ஏதோ ரெண்டு புள்ளைங்களைப் பிடித்ததா சொன்னாயே... அவங்க எங்கே...''

''வேன்ல தான் இருக்காங்க சார்...''

பதில் அளித்தான் செல்வா.

பூசாரியிடம் திரும்பினார் இலக்கியன்.

''சரி இந்த ஊரில் இருந்து ஒரு பொண்ணு, நம்ம பள்ளில எட்டாவது படிக்குது அவங்க வீடு தெரியுமா...''

''வெளியூர்ல படிக்கிற பொண்ணு தானே தெரியும் ஐயா. அவ பேரு அனு...''

''அவ நல்லா படிக்கிற பொண்ணு தானே...''

''ஆமா ஐயா... நல்லா படிப்பா...''

''அவளையும் அழைத்து வா. இவங்க பிடித்து வைத்திருக்கிற ரெண்டு பொண்ணுங்களோட, அந்த பொண்ணையும் வைத்து பூஜையை ஆரம்பித்து விடலாம்...''

''சரி ஐயா... அந்த பொண்ணை அழைத்து வரேன்...''

ஒரு கும்பிடு போட்டு, பூசாரி கிளம்பினார்.

''தாமதிக்காமல் உடனே வந்துரு...'' என்றார் இலக்கியன்.

வேனுக்கு உள்ளே இருந்தபடி இதை கவனித்த அனுவுக்கும், தியாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விபரம் புரிய ஆரம்பித்தது.

வேனில் அனு இருப்பது தெரியாததால், அவள் வீட்டுக்கு பூசாரியை, இலக்கியன் அனுப்புகிறார் என்பது தெரிந்தது.

''இந்த கோவிலில் ஏதோ பூஜை செய்யப் போறாங்க அக்கா... அதற்கு அவங்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் வேண்டும் போல...''

''பொதுவாக, இங்கே நாங்க பயிரிட, பயிரோட விளைச்சல் நல்லா இருக்கணும். காடு சுபிட்சமாக இருக்கணும்ன்னு ஆசிர்வாதத்துக்காக பூஜை செய்வாங்க...

''அப்புறம் ஏதாவது நோய் நொடி வந்தா அது சாமி குத்தம்ன்னு நினைச்சு, சாமியை சாந்தப்படுத்த பூஜை செய்வாங்க...''

''வேற...''

''அமாவாசை, பவுர்ணமி, கிரகண நாட்கள் எல்லாம் பூஜை செய்வாங்க. எனக்கு தெரிஞ்சு அவ்வளவு தான் அக்கா...''

''இதற்கு ஏன் மாணவியரை கடத்திட்டு வந்தாங்க...''

''தெரியலையே...''

''அதிலும், குறிப்பாக, நல்ல படிக்கிற மாணவியர் வேணும்ன்னு கேக்குறாங்களே...''

''ஆமாக்கா... அது தான் எனக்கும் குழப்பமா இருக்கு...''

''கொஞ்சம் யோசி அனு... நானும் யோசிக்கிறேன். இதன் சூட்சமம் என்னன்னு தெரிஞ்சாகணும்...''

அவர்கள் யோசிக்க துவங்கினர்.

''வணக்கம் சார்... இவங்க எங்களை...'' என்று வார்டன் பேச ஆரம்பிக்க, ஒரு புன்னகையுடன், கையசைத்து பேச்சை நிறுத்த செய்தார் இலக்கியன்.

''பதறாதீங்க வார்டன் மேடம்... இங்கே ஒரு சின்ன பூஜை இருக்கு. அதுல நம்ம பள்ளி மாணவியர் மூணு பேரும் பங்கேற்க போறாங்க...'' என்றார் புன்னகை மாறாமல்.

வார்டனும், மாணவியரும் குழப்பத்துடன் பார்த்தனர்.

''இவங்க மூணு பேரும் பள்ளியில் முதல் இடம் வாங்கினவங்க தானே...''

''ஆமாம் சார்...''

''மகிழ்ச்சி... வாங்க நம்ம பூஜை நடக்கிற இடத்துக்கு போகலாம். எல்லாம் நான் விபரமாக சொல்கிறேன்...'' என்று அழைத்தார்.

புரியாமல் பார்த்தார் வார்டன்.

அதேசமயம், அனுவும், தியாவும் இருந்த வேனுக்கு பக்கவாட்டில் ஒரு அசைவு தெரிந்தது. அந்த திசையில் திரும்பிய தியா கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தாள்.

அங்கே -

- தொடரும்...

- ஜே.டி.ஆர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us