PUBLISHED ON : ஏப் 11, 2014

ஓர் அறைக்குள் சென்ற அவள் மோதிரம் ஒன்றுடன் வந்தாள்.
''அன்பரே! இது சாலமனின் மந்திர மோதிரம். இந்த மோதிரத்தை நான் யாரிடமும் காட்டியது இல்லை. இதன் ஆற்றலுக்கு எல்லையே இல்லை,'' என்றாள்.
''இது மந்திர மோதிரமா? என்ன கதை விடுகிறாய்?'' என்று ஏதும் அறியாதவன் போலக் கேட்டான் இளவரசன்.
''அன்பரே! இதை இடது கை சுண்டு விரலில் அணிந்தால் போதும். விரும்பும் இடத்திற்குப் பறந்து செல்லலாம். மோதிர விரலில் மாட்டினால் யார் கண்ணிற் கும் தெரிய மாட்டார்கள். நடு விரலில் மாட்டினால் நெருப்பு எரிக்காது; தண்ணீர் மூழ்கடிக்காது; படைக் கருவிகள் வெட்டாது. சுட்டு விரலில் அணிந்தால் எந்தப் பொருளை விரும்பினாலும் அது கிடைக்கும்.
கட்டை விரலில் அணிந்தால் பேராற்றல் உண்டாகும். பெரிய மலையைக் குத்தினால் அந்த மலை தூள் தூளாகிப் பறக்கும். பூமியில் குத்தினால் நில நடுக்கம் ஏற்படும். அது மட்டும் அல்ல... இந்த மோதிரத்தைத் திறந்து பார்த்தால் எந்த மந்திரவாதியையும் வெல்ல வழி காட்டும்,'' என்றாள் அவள்.
''இந்த மோதிரத்திற்கு இவ்வளவு ஆற்றலா? என்னால் நம்ப முடியவில்லையே,'' என்றான் இளவரசன்.
காதல் மயக்கத்தில் இருந்த அவள், ''நீங்கள் இந்த மோதிரத்தைச் சோதித்துப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும்,'' என்று அவனிடம் தந்தாள்.
அந்த மோதிரத்தைக் தன் நடுவிரலில் மாட்டினான் இளவரசன். ஒரு வாளை எடுத்த அவள் அவனை வெட்டினாள். வாளின் முனை மழுங்கியதே தவிர அவனுக்குச் சிறு காயமும் ஏற்படவில்லை.
அந்த வாளை வாங்கித் தன்னையே குத்திக் கொண்டான் அவன். அப்போதும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
''நான் இந்த மோதிரத்தைக் கட்டை விரலில் அணிந்து கொள்கிறேன். நீ சொன்னது போல மலை தூளாகுமா? நிலம் பிளக்குமா?''
''சோதனை செய்து பார்க்கலாம், வாருங்கள்!'' என்றாள் அவள், அவனை அரண்மனைக்கு வெளியே அழைத்துச் சென்றாள். அங்கே பெரிய பாறை ஒன்று இருந்தது.
''கட்டை விரலில் மோதிரத்தை அணியுங்கள். இந்தப் பாறையைக் குத்துங்கள்,'' என்றாள் அவள்.
அவனும் அப்படியே செய்தான். என்ன வியப்பு. அந்தப் பாறை மண் கட்டி போல உடைந்து நொறுங்கியது.
''ஆ! இந்த மோதிரத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை,'' என்று சிரித்தாள்.
''இப்போது உங்கள் மோதிர விரலில் அந்த மோதிரத்தை அணிந்து கொள்ளுங்கள். யார் கண்ணிற் கும் நீங்கள் தெரிய மாட்டீர்கள். அருகில் இருக்கும் என்னாலும் உங்களைப் பார்க்க முடியாது,'' என்றாள் அவள்.
மோதிரத்துடன் தப்பிக்க இதுதான் நல்ல வாய்ப்பு என்று நினைத்தான் இளவரசன்.
அதை மோதிர விரலில் மாட்டினான். அவள் கண் பார்வை படாத இடத்திற்குச் சென்றான். அந்த மோதிரத்தைக் கழற்றிச் சுண்டு விரலில் மாட்டினான்.
''நான் என் நாட்டில் இருக்க வேண்டும்,'' என்றான். அடுத்த நொடியே அவன் தன் நாட்டில் இருந்தான்.
நீண்ட நேரமாகியும் அவன் பார்வையில் படாதது கண்டு எரிச்சல் அடைந்தாள் அவள்.
''விளையாடியது போதும். மோதிரத்தைக் கழற்றி என்னிடம் கொடுங்கள்,'' என்று கோபத்துடன் சொன்னாள்.
பதில் ஏதும் வரவில்லை. மீண்டும், மீண்டும் குரல் கொடுத்தாள். தான் ஏமாந்தது அவளுக்குப் புரிந்தது.
''ஐயோ! மந்திர மோதிரத்தை இழந்து விட்டேனே. இனி என்ன செய்வேன்?'' என்று அழுது புலம்பினாள்.
அங்கே இளவரசன் அந்த மோதிரத்தின் தலைப்பகுதியைக் கழற்றினான். பூதத்தைக் கொல்வதற்கான வழிமுறைகளைப் படித்து இளவரசன் திகைத்தான்.
'பூதத்தைக் கொல்வது இவ்வளவு கடினமா? எப்படியும் இதில் வெற்றி பெறுவேன்,'' என்று துணிவு கொண்டான்.
செவ்வந்தி அரண்மனைக்கு வந்தான் இளவரசன்.
''அரசே! கொடிய பூதத்தைக் கொல்ல வந்துள்ளேன். நான் கேட்கிற பொருள்களை நீங்கள் செய்து தர வேண்டும். அப்போதுதான் என்னால் பூதத்தைக் கொல்ல முடியும்,'' என்றான்.
''நீ என்ன கேட்டாலும் இங்கே உள்ளவர்கள் செய்து தருவார்கள். என் கருவூலமே காலி யானாலும் எனக்குக் கவலை இல்லை,'' என்றான் அரசன்.
அந்த நாட்டுக் கொல்லர்களை எல்லாம் அழைத்தான் இளவரசன்.
''நீங்கள் வலிமையும், உறுதியும் வாய்ந்த இரும்புக் குதிரை ஒன்றை செய்ய வேண்டும். அது ஆறடி நீளம், ஆறடி அகலம், ஆறடி உயரம் உள்ளதாக இருக்க வேண்டும்.
''அதன் கால்களில் சக்கரங்கள் பொருத்தப் பட வேண்டும். அந்தச் சக்கரங்கள் எந்தப் பக்கமும் திருப்பும் வகையில் அமைய வேண்டும். வலிமை வாய்ந்த ஈட்டி ஒன்று செய்ய வேண்டும். யாராலும் தூக்க முடியாத எடை உடையதாக அது இருக்க வேண்டும். நீண்ட இரும்புச் சங்கிலிகள் நிறைய வேண்டும். அவற்றின் இரு முனைகளிலும் இரும்பு முளைகள் இருக்க வேண்டும்,'' என்றான் இளவரசன்.
அவர்கள் இரவு பகல் பாராது பல நாட்கள் உழைத்தனர். அவன் கேட்ட பொருள்களை எல்லாம் செய்து முடித்தனர்.
அவற்றை எல்லாம் பார்த்தான் இளவரசன், சிறு குச்சியைத் தூக்குவது போல அந்த ஈட்டியைத் தூக்கினான். சங்கிலிகள் இணைக்கப்பட்ட இரும்பு முளைகளின் குவியலை இன்னொரு கையில் எடுத்தான்.
மகிழ்ச்சி அடைந்த இளவரசன், ''நான் சொன்னது போலவே செய்துள்ளீர்கள்,'' என்று அவர்களைப் பாராட்டினான்.
அரசனிடம் சென்ற அவன், ''பூதத்தைக் கொல்வதற்காகக் செல்கிறேன். எனக்குத் துணையாக நூறு வீரர்கள் வேண்டும்,'' என்றான்.
அரசனும் நூறு வீரர்களைத் தந்தான். அவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்ட இளவரசன் கொல்லர்களிடம் வந்தான்.
ஒருகையில் ஈட்டியை எடுத்துக் கொண்டான். இன்னொரு கையில் இரும்பு முளைச் சங்கிலிக் குவியலை எடுத்துக் கொண்டான். இரும்புக் குதிரையில் ஏறி அமர்ந்தான்.
அவன் வலிமையைப் பார்த்துத் திகைப்பு அடைந்து நின்றனர் வீரர்கள்.
''வீரர்களே! நான் இந்தக் குதிரையில் அமர்ந்து பூதம் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். காட்டை நோக்கி இந்தக் குதிரையைத் தள்ளுங்கள்,'' என்றான்.
நூறு வீரர்களும் குதிரையைத் தள்ள முயன்றனர். குதிரை சிறிதும் அசையவில்லை.
வேறு வழியில்லாத அவன் கீழே இறங்கி னான். அவனின் ஒரு கையில் ஈட்டியும் இன்னொரு கையில் இரும்பு முளைச் சங்கிலி களும் இருந்தன. தன் உடலால் குதிரையைத் தள்ளத் தொடங்கினான். குதிரையும் நகர்ந்தது. காட்டிற்குள் நுழைந்தது.
காட்டிற்குள் இருந்த பூதம் இரும்புக் குதிரை ஒன்று வருவதைப் பார்த்தது. கோபம் கொண்ட அது, அந்தக் காடே அதிருமாறு கத்தியது. குதிரையை நோக்கி வரத் தொடங்கியது. அதைப் பார்த்து நடுங்கிய வீரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அருகே இருந்த மரத்தில் இரண்டு பறவை கள் அமர்ந்து இருந்தன. அவற்றில் ஒன்று, ''இந்த இளவரசனுக்கு அறிவே இல்லையே... இவன் எப்படி பூதத்தைக் கொல்லப் போகிறான்?'' என்றது.
இன்னொரு பறவை, ''இவனால் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டது.
''இரும்பு முளைகளைக் குதிரையின் இடுப்புப் பட்டையில் செருக வேண்டும். பிறகு குதிரையில் அமர்ந்து ஈட்டியைத் தரையில் ஊன்றித் தள்ள வேண்டும். குதிரை வேகமாகச் செல்லும். இது இவனுக்குத் தெரியாதா?'' என்றது இன்னொரு பறவை.
அவற்றை நன்றியுடன் பார்த்தான் இளவரசன். மந்திர மோதிரத்தைக் கட்டை விரலில் அணிந்து கொண்டான். இரும்பு முனைகளைக் குதிரையின் இடுப்புப் பட்டை யில் செருகினான். சங்கிலிகள் தரையில் புரண்டன.
குதிரையில் ஏறி அமர்ந்தான் இளவரசன், கையிலிருந்த ஈட்டியை வலிமையாகத் தரையில் ஊன்றித் தள்ளினான். குதிரை வேகமாக முன்னால் சென்றது.
அருகே வந்த பூதம் குதிரையுடன் சேர்த்து அவனையும் விழுங்க நினைத்தது. தன் பெரிய வாயை அகலமாகத் திறந்தது.
துணிவை இழக்காத அவன் ஈட்டியால் அதன் கழுத்தில் ஓங்கிக் குத்தினான். வலி தாங்காமல் அலறிய அது அவனையும் குதிரையையும் விழுங்கியது.
கவனமாக இருந்த இளவரசன் குதிரையி லிருந்து கீழே குதித்தான். அப்படிக் குதிக்கும் போது இரும்பு முளைகளையும் கையில் எடுத்துக் கொண்டான்.
பூதத்தின் பற்களுக்குள் சிக்கி இரும்புக் குதிரை நொறுங்கும் ஓசை எங்கும் கேட்டது.
விரைந்து செயல்பட்டான் இளவரசன், இரும்பு முளைகள் இணைக்கப்பட்டு இருந்த சங்கிலிகளை பூதத்தின் மேல் வீசினான். ஈட்டியைப் பயன்படுத்தி இரும்பு முளை களைத் தரையில் ஒவ்வொன்றாக அடித்தான்.
சங்கிலிகளால் கட்டப்பட்டது போலப் பூதம் காட்சி தந்தது. இரும்புக் குதிரையை உண்ட தாலும், ஈட்டி குத்தியதாலும் அது களைப்பு அடைந்தது.
சங்கிலிகளிலிருந்து விடுபட பூதம் தன்னாலான முயற்சி செய்தது.
இப்படியே அவனுக்கும் பூதத்திற்கும் மூன்று நாட்கள் போராட்டம் வந்தது.
பூதத்தின் வலிமை குறைந்து கொண்டே வந்தது. சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்த அது ஆடாமல் அசையாமல் கிடந்தது.
இனி அதைக் கொல்வது எளிது என்பதை அறிந்த இளவரசன், ஈட்டியால் அதன் மார்பில் ஓங்கி குத்தினான். துடிதுடித்து இறந்தது பூதம்.
வெற்றி வீரனாக வந்த அவனை நாட்டு மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். இளவரசனுக்கும், இளவரசி யோகிக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.
முற்றும்.
