தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பழம் தின்னாத குரங்கு...

பழம் தின்னாத குரங்கு...

பழம் தின்னாத குரங்கு...


PUBLISHED ON : செப் 14, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னர் கிருஷ்ணதேவராயர் அவையில், விகடகவியாக இருந்த தெனாலிராமனின் கோமாளித் தனத்தால், அரச சபை எப்போதும் குதுாகலமாக இருக்கும்.

ஒரு நாள் -

சபையில், காரசாரமாக விவதாம் நடந்துக் கொண்டிருந்தது.

''பால் வேண்டாத பூனையும், பழம் தொடாத குரங்கும் உண்டோ... அதுபோல, பணத்தை விரும்பாத மனிதனும் கிடையாது...'' என்று, சபையில் ஒருவர் கூறினார்.

அவர் சொல்வது தான் சரியென்று, மற்றவர்கள் தலையசைத்தனர்.

அப்போது, தெனாலிராமன், ''உலகில் தேடிப் பார்த்தால், பால் குடிக்காத பூனையும், பழம் விரும்பாத குரங்கும், பணம் வேண்டாத மனிதரும் நிச்சயம் கிடைப்பர்...'' என்று கூறினான்.

அரசர் எரிச்சலுடன், ''ராமா... மறுத்துப் பேச வேண்டும் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசாதே...'' என்று, கொஞ்சம் அதட்டலாகவே கூறினார்.

''அரசே... இவற்றை நிரூபித்து விட்டால், எனக்கு என்ன பரிசு தருவீர்...'' என்றான்.

''அப்படி நிரூபித்து விட்டால், ஆயிரம் பொன் தருகிறேன்; நிரூபிக்க முடியவில்லையென்றால், பதவியில் இருந்து நீக்கப்படுவாய்...'' என, கூறினார்.

சவாலை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டான், தெனாலிராமன்.

ஒரு பூனைக் குட்டியை வளர்த்தான். பாலை கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி, அதன் முன் வைத்தான். ஆவலாக வாயை வைத்த பூனை, வாயைச் சுட்டுக் கொண்டு ஓடியது; அதன்பின், வெள்ளை நிறத்தில் எதைப் பார்த்தாலும், பயந்து ஓடியது.

அடுத்து, ஒரு குரங்கை வாங்கினான்; அதை, நன்கு பழக்கினான்; அந்தக் குட்டி குரங்கு, அவனையே வட்டமிட ஆரம்பித்தது.

ஒரு நாள்-

வாழைப்பழத்துக்குள், ஒரு நீளமான இஞ்சியை வைத்து, குட்டிக் குரங்குக்குக் கொடுத்தான்; ஆசையாகச் சாப்பிட்டது. ஆனால், சற்று நேரத்திற்கெல்லாம் தொண்டை எரிய ஆரம்பிக்கவே, அது தரையில் புரண்டு அலறியது; காறி உமிழ்ந்தது.

பச்சை வாழை, செவ்வாழை, மொந்தன் வாழை என, பல வகைப் பழங்களையும் இஞ்சி சொருகிக் கொடுத்தான். அது வாழைப்பழத்தைக் கண்டாலே, அலறி ஓட ஆரம்பித்தது.

அடுத்து, ஒரு ஊருக்குச் சென்றான். அந்த ஊரில், பரம ஏழை ஒருவன் இருந்தான்; அவனை, சினேகம் பிடித்தான்.

அந்தப் பரம ஏழையிடம், ''நீ, 24 மணி நேரமும், என்னுடனே இருக்க வேண்டும்; ஒருவேளை, சோற்றைக் கண்ணால் பார்க்காமல் இருந்தால், 10 பொன்; நாள் பூராவும் பட்டினி கிடந்தால், 30 பொன்; பட்டினி கிடப்பதாய் வெளியில் சொன்னால், பொன் தர மாட்டேன்; அப்படி நீ சொல்லி விட்டால், எனக்கு, 30 பொன், நீ தர வேண்டும் அல்லது உழைக்க வேண்டும்...

''இப்படி உன்னால் எவ்வளவு நாள் முடியுமோ, அவ்வளவு நாள் இருக்கலாம். முடியவில்லையென்றால், சொல்லி விடு, அதுவரை உள்ள வெகுமதியை வாங்கிக் கொள்ளலாம்; திருட்டுத்தனமாக ஒரு பருக்கையை சாப்பிட்டாலும், பரிசு கிடையாது...

''நீ உயிரோடு இருக்க, குளிகைகள் தருவேன். உன்னால் முடியாது என்று சொன்ன பின், உன்னை மன்னரிடம் அழைத்துச் செல்வேன். அரசர் உனக்குப் பணம் தருவார். அதை நீ பெற்றுக் கொண்டால், நான் தந்ததை போல, மூன்று மடங்காக திருப்பி தர வேண்டும்; அரசரிடமிருந்து பணத்தை வாங்க மறுத்தால், நீ பெற்றிருக்கும் வெகுமதியோடு, 100 பொற்காசுகள் சேர்த்து தருவேன்; என்ன சொல்கிறாய்...'' என்றான் ராமன்.

நன்கு யோசித்தான் பரம ஏழை.

'வருமானம் இல்லாமல், தினமும் பட்டினி கிடக்கிறோம்; இங்கே ஒரு நாளைக்கு, 30 பொன்; 10 நாள் பட்டினி கிடந்தால், 300 பொன். மேலும் கூடுதலாக, 100 பொன் கிடைக்கும். கண்ணியமாக வியாபாரம் செய்து பிழைக்கலாம்.

'எதற்காகவோ அரசரிடம் அழைத்துப் போகிறேன் என்கிறானே! இவனில்லாமல் அரசரிடம் செல்வதால் என்ன பயன்... 10, 20 பொன் தருவார்; ராமன் சொன்னபடியே செய்யலாம்' என்ற முடிவுக்கு வந்தான்.

குறிப்பிட்ட நாளில், அந்த ஏழை, பூனைக் குட்டி, குரங்குக் குட்டியுடன் அரச சபைக்குச் சென்றான், தெனாலிராமன்.

''அரசே... இவரே பணம் வேண்டாத மனிதர்...'' என்று கூறி, ஏழையை அரசர் முன் நிறுத்தினான்.

ஒரு தட்டு நிறையப் பொற்காசுகளும், ஆபரணங்களும் எடுத்து வரச் சொல்லி, அந்த ஏழையின் எதிரே வைத்து, ''தேவையானதை எடுத்துக் கொள்...'' என்று கூறினார் அரசர்.

'இதில் ஏதோ சூது இருக்கிறது' என்று நினைத்த ஏழை, ''அரசே... இந்தப் பொற்காசுகள் எனக்கு வேண்டாம்...'' என்று மறுத்து விட்டான்.

''என்னப்பா அதிசயமாக இருக்கிறது; எல்லாரும் பணத்துக்கு ஆவலாய் பறக்க, நீ மட்டும் ஏன் பெற்றுக் கொள்ள மறுக்கிறாய்...'' என்று கேட்டார் அரசர்.

''அரசே... பணத்தை தின்ன முடியுமா... பசி வந்தால் சோறு தானே வேண்டும். பணத்தை பார்த்தால், அதில் குழந்தையை, மனைவியை, அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா... என்னை சீக்கிரம் விடுங்கள்; நான் போக வேண்டும்...'' என்று கூறியபடியே அங்கிருந்து ஓடி விட்டான் ஏழை.

''தெனாலிராமா... ஏன், இவன் இப்படிப் பேசுகிறான்...'' என்று கேட்டார் அரசர்.

''அதை அப்புறம் சொல்கிறேன்... பால் குடிக்காத பூனை, பழம் தின்னாத குரங்கை பார்க்க வேண்டாமா...'' என்று கேட்டான்.

பூனைக்குட்டியையும், குரங்குக் குட்டியையும் அவையோர் முன் காண்பித்தான், தெனாலிராமன்.

ஒரு அகலமான பாத்திரத்தில், சுவையான பசுவின் பாலை எடுத்து வரக் கட்டளையிட்டார், அரசர்; பால் வந்தது. தெனாலிராமனின் பூனையோ, பாலைப் பார்த்தது தான் தாமதம், நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்து, ஓடியது.

குரங்கை ஒருவர் தடவிக் கொடுத்து, மலை வாழைப்பழத்தை உரித்து, அதன் வாய்க்கு முன் நீட்டினார். அவரைப் பிராண்டி விட்டு, அங்கிருந்து ஓடியது குரங்கு. போட்டியில் வெற்றி பெற்ற தெனாலிராமன், ஆயிரம் பொன்களைப் பெற்று, வீட்டுக்குச் சென்றான்.

குட்டீஸ்... புத்திசாலித்தனம் இருந்தால், செல்வம் உங்களைத்தேடி வரும் என்பது புரிகிறதா... எப்பவும் செல் போனில், வீடியோ, கேம்ஸ் என பார்த்து பார்த்து, மூளை மழுங்க இடம் கொடுக்காமல், நல்ல புத்தகங்களை வாசித்து புத்தியை வளர்த்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us