PUBLISHED ON : மே 31, 2013

மிகச் சூடான தகடுகளின் மீது நீரைத் தெளித்தால், அவை துள்ளிக் குதிப்பதற்கு நீர்த் துளிகளின் அடிப்பாகத்தில் உருவாகும் நீராவியே காரணமாகும். இந்த நீராவிப் படலம் மெத்தைபோல செயல்படுகிறது.
சூடான தகடுகளில் நீர்த்துளி பட்டவுடன் அவை ஆவியாகி நீராவி உண்டாகிறது. நீராவி குறைந்த வெப்பக் கடத்தியாகும். எனவே, அடுத்த சில நொடிகளில் தகட்டின் வெப்பத்தை விட நீர்த்துளிகளின் வெப்ப நிலை குறைந்து விடுகிறது.
நீராவிப் படலத்தின் மேல்பாகம் கொதிநிலையில் இருப்பதால், மீண்டும் நீர்த்துளியின் கீழ்ப்பாகம் அதிக வெப்ப மடைகிறது. அங்கு மேலும் நீராவி உண்டாகிறது. அந்த நீராவிப் படலம் நீர்த்துளியை மேலே உயர்த்துகிறது. இருப்பினும் புவியீர்ப்பு விசையின் காரணமாக, நீர்த் துளிகள் தகட்டை நோக்கியே விழுகிறது. இவை அனைத்தும் கண நேரத்தில் நிகழ்ந்துவிடுகிறது.
நீர்த்துளி கீழே விழுவதும், நீராவிப் படலம் அவற்றை மேலே உயர்த்துவதுமாக இருப்பதால் நமக்கு நீர்த்துளி துள்ளிக் குதிப்பதுபோல தோற்றமளிக்கின்றன.
