PUBLISHED ON : பிப் 20, 2021

முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவப் பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை மும்பையில் சந்தித்தது பற்றி விவரித்தார் உறவினர் செல்வானந்தம். அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் லட்சுமி. இனி -
தொடர்ந்து பேசினார், செல்வானந்தம்!
''அது, என்ன சூழ்நிலைன்னு, நான் கேட்டுக்கல... போனதெல்லாம் போகட்டும்; அதை மாத்த முடியாதுன்னு மட்டும் அறிவுரை சொன்னேன்...''
''ம்...''
''மிச்சம் இருக்குற காலத்துலயாவது அம்மா நிம்மதியாக இருக்கணும்! அந்த புண்ணியத்தை தேடிக்கோ! தனியா விட்டுடாதன்னு சொன்னேன்...''
''சரியா தான் சொல்லிருக்கே...''
''அவனும் வருந்தி, 'நான் வந்து அம்மாவை பாக்குறேன்; அழைச்சுட்டு வந்து என் கூடவே வெச்சுகிறேன்...'ன்னு பதில் சொன்னான்...''
''ஏதோ என் கடைசி காலத்துலயாச்சும் கடவுள் கண்ணைத் தொறந்தாரே...''
''இனி உங்களுக்கு நல்ல காலம் தான்! பட்டதெல்லாம் போதும்...''
''மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி... ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துரு! இதோ... கடைக்கு போய் ஒரு காபி வாங்கியாந்துடுறேன்...''
''காபி, டீ எதுவும் எனக்கு வேணாங்கா... உங்களுக்கு வாங்கி தரவா...''
''எனக்கு எதுவுமே வேணாம்பா... என் வயிறு இப்ப ரொம்பி கெடக்குது; நல்ல செய்தி சொல்லி, நீ தான் என் வயித்துல பால் வார்த்துட்டியே; 100 வருஷத்துக்கு நல்லா இருக்கணும்யா...''
''ஆனாலும் ரொம்ப தான் பேராசை...'' என்று சிரித்தார் செல்வானந்தம்.
''வாழ்த்துறதுல தப்பேயில்ல... என் புள்ளை இந்த பூமியில இருக்கானா இல்ல ஏதாவது ஆயிடுச்சோன்னு தான் மனசே துடிச்சுட்டு இருந்தது! இப்ப நீ சொன்னதை கேட்டு என் மனசு குளிர்ந்து போச்சு...''
அப்போது யாரோ வருவது போல் நிழலாடியது.
எட்டிப்பார்த்த செல்வானந்தம், ''அக்கா... யாரோ ஒருவன் வாசலில் நிற்கிறான்...'' என்றார்.
வாசலுக்கு சென்ற லட்சுமி, ''வாப்பா பன்னீரு... நல்லா இருக்கியா கண்ணு... என்ன... இப்பவெல்லாம், வாத்தியாரிடம் டியுஷனுக்கே வர மாட்டேங்குற... உன்னை பார்த்தே பல நாளாயிடுச்சு...'' என்றார்.
''பிளஸ் 2 முடிச்சுட்டேனே பாட்டி... இனிமே காலேஜ்ல தான் படிக்கணும்! அது விஷயமாக தான் வாத்தியாரை பார்த்து ஆலோசனை கேட்க வந்தேன்; வீடு பூட்டியிருக்கே...''
''அவரு வெளியூர் போயிருக்கிறார். நாளை தான் வீடு திரும்புவார்...'' என கூறி திரும்பி, மீண்டும் ஆவலுடன் செல்வரத்தினம் முகத்தை பார்த்தார் லட்சுமி.
''என் முகவரியும், வீட்டருகே இருக்குற மளிகை கடை போன் நம்பரையும், சூரியராஜா கிட்ட கொடுத்துட்டு வந்தேன்...''
''ம்... அவனோட முகவரிய வாங்கினியா...''
''அடடா... அவனும் கொடுக்கல... நானும் கேட்காம விட்டுட்டேன் பாருங்க... வேலை செய்றது ஓட்டல் தாரகைன்னு சொன்னான்...''
''சரி... இருக்கட்டும்... பரவாயில்லை...''
''அட... அப்பதான் கேட்காம விட்டுட்டே, இப்ப காலையில போன்ல பேசனானே...''
''போன்ல பேசிட்டானா... ''
''ஆமா... மும்பையிலிருந்து அதிகாலையில வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். நல்ல அசதி... படுத்து துாங்கிட்டு, 9:00 மணிக்கு தான் எழுந்தேன்...''
''ஓகோ...''
''அந்த நேரம் பார்த்து மளிகை கடையிலே இருந்து குரல் கொடுத்தாங்க... மும்பையிலிருந்து சூரியராஜா போன் பண்றான்னு சொன்னாங்க...''
இதைக் கேட்டதும் லட்சுமி முகம் பூரித்தது!
''ஓடிப்போய் பேசினேன்... ரயில்ல இடம் கிடைச்சிருக்கு, மனைவி, குழந்தையோட வர்ற ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் வந்து சேர்ந்துடுவோம் என்றான்...''
''சந்தோஷம்பா...''
''திங்கள் கிழமை சாயங்காலமே திரும்பணுமாம். அதுக்கு தகுந்த மாதிரி, அம்மாவை கிளம்பி தயாரா இருக்க சொல்லுங்கன்னான்...''
''தயாராயிருக்கேன்... இத விட வேற என்ன வேணும்பா...''
''எல்லாத்தையும் மறக்காம மூட்டை கட்டி வெச்சுக்க சொல்லுங்க! அப்புறம் நேரம் பத்தாது! தேவையில்லாததை எல்லாம் ஒழிச்சிக்கட்ட சொல்லுங்கன்னு பேசினான்...''
''இது எல்லாமே தெய்வச்செயல்... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு... உன்னோட சிநேகிதர் பொண்ணு கல்யாணத்துக்கு மும்பைக்கு போனதுனால தானே என் மகனைக் கண்டுபிடிக்க முடிஞ்சது...''
''ஆமாங்கா...''
''அவ்வளவு கூட்டத்துலயும் அவனை அடையாளம் கண்டு வந்து செய்தி சொல்ற நீ... இந்த நிமிஷம் நீதான் எனக்கு கடவுள்...''
''நான் என்னாக்கா செய்துட்டேன்... எல்லாம் அவன் செயல்... நான் கிளம்பறேன்; அப்புறம் வந்து பார்க்குறேன்...''
''ஒன்னுமே சாப்பிடாம போறியப்பா...''
'' சூரியராஜா வந்ததும் உடன் சேர்ந்து, வடை, பாயாசம் விருந்தே சாப்பிடுறேன்...''
எழுந்தார் செல்வானந்தம்.
''கண்டிப்பா சாப்பிடணும்... சாக்கு போக்கு சொல்ல கூடாது...''
வாசல் வரை வந்து, வழி அனுப்பி வைத்தார் லட்சுமி.
- தொடரும்...
- நெய்வேலி ராமன்ஜி

