PUBLISHED ON : ஜூன் 05, 2015

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் பூண்டோடு அழிந்தது போல், உலகம் முழுவதுமே பல அழிவுகள் ஏற்பட்டன. போரின் கோரத்தாண்டவத்தைப் பார்த்த பின்புதான், உலகில் சமாதானம் ஏற்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என்று ஐ.நா., சபை எல்லாம் உருவாக்கப்பட்டது.
சரி... இதுவல்ல விஷயம். போரின் போது தத்தம் நாட்டு செல்வங்கள் எதிரியின் கைக்கு கிடைக்கக் கூடாது என்று ஒவ்வொரு நாடும் பயங்கர முயற்சிகள் எடுத்தன. ஜெர்மனியும் அவற்றில் ஒன்று. ஆனால், பரிதாபம், அது அனைத்தையும் இழந்து, செய்வதறியாது நின்றது.
இதோ அந்த விவரம்.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில், 1945ல் போரின் உச்ச கட்டம் நடந்து கொண்டிருந்த ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை. நம் நாட்டுக்கு ரிசர்வ் வங்கி எப்படியோ, அதுபோன்று, ஜெர்மனியில், 'டாய்ஷ் வங்கி' இருந்தது. நாட்டின் செல்வம் அனைத்தும் இந்த வங்கியின் கஜானாவில்தான் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.
அச்சமயத்தில், வங்கியில் இருந்த மொத்த சொத்து. நூறு டன் தங்கக் கட்டிகள், ஆயிரம் மூட்டை மார்க் (ஜெர்மனிய கரன்ஸி) கட்டுகள், வெள்ளி மற்றும் ஏராளமான அரிய கலைப் படைப்புகள், மன்னர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த கிரீடம் வாள் போன்றவை.
ஜெர்மனியை அழிப்பதில் தீவிரமாக இருந்த அமெரிக்க ராணுவம், இந்த வங்கியை எப்படியும் தாக்கும் என்று யூகித்த வங்கியின் சேர்மன், அங்கிருந்த பொக்கிஷங்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார். ஜெர்மனியின் நாஜி ராணுவமும் சம்மதித்தது. அதன்படி வங்கிக்கு நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு நிலக்கரி சுரங்கத்தில் அவற்றைப் பதுக்கி வைப்பதென முடிவெடுத்தனர்.
யாருக்கும் தெரியாமல், இரவோடு இரவாக, பதின்மூன்று ரயில் பெட்டிகளில், வங்கியிலிருந்த செல்வங்கள் அனைத்தையும் ஏற்றி, சுரங்கத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட இருபது அறைகளில் செல்வங்களை பதுக்கி வைத்து, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இவர்களது நிம்மதி நீண்டகாலம் நீடிக்க வில்லை. அமெரிக்க ராணுவம், ஜெர்மனியின் முக்கிய இடங்களை குண்டு வீசி தாக்கத் துவங்கியது. நிலக்கரி சுரங்கங்களை நோக்கி அமெரிக்க படை வருவதை அறிந்து ஜெர்மனி ராணுவத்தினரும், வங்கியின் சேர்மனும் அதிர்ச்சி அடைந்தனர்
நாட்டின் செல்வம் அனைத்தும் அங்கிருப்பதை அறிந்துதான் வருகின்றனரோ என்று பயந்த ராணுவத்தினர், அங்கிருக்கும் செல்வத்தை வங்கிக்கே மாற்ற முயன்றனர். மீண்டும் அவற்றை ரயில் பெட்டிகளில் ஏற்றி வங்கிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இச்சமயத்தில் அமெரிக்க விமானப்படை வீசிய குண்டு ஒன்று வங்கியைத் தாக்கியது. வங்கியின் ஒரு பகுதி சீர்குலைந்து, தீக்கிரையானது. யாராலும் எதையும் செய்ய இயலாத நிலை. இனி வங்கிக்குச் சென்று காவலை பலப்படுத்துவதோ, சீர்குலைவை சரிசெய்வதோ ஆபத்தில் முடியும் என்று விட்டுவிட்டனர்.
சிறிது நாளில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போரினால் ஏற்பட்ட அழிவை சீராக்கவும், மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும், அரசும், ராணுவமும் ஈடுபட்டன. அப்போதுதான் வங்கியிலிருந்த செல்வம் பற்றி அவர்களுக்கு ஞாபகம் வந்தது.
செல்வம் இருந்ததற்கான அடையாளமே அங்கு இல்லை. சரியான பாதுகாப்பு இல்லாமல் ரயிலில் கொண்டு வரும் போதே அவை காணாமல் போயிருக்கலாம் என்கின்றனர் சிலர். சிலரோ, குண்டு வீச்சில் அழிந்து போயிருக்கலாம் என்கின்றனர். எப்படியோ நாட்டின் 97.17 சதவிகித பொக்கிஷம் யாருக்கும் உபயோகமில்லாமல் எங்கோ மர்மமாக மறைந்துவிட்டது என்பது நிதர்சன உண்மை.
இதெல்லாம் நடந்து ஓய்ந்தபின், 1990-ல் ஒரு விவசாயி தன் நிலத்தை உழுத போது கிடைத்ததாகக் கூறி, ஒரு அரிய ஓவியத்தை அரசிடம் ஒப்படைந்தார். அந்த ஓவியம் ஜெர்மனிய வங்கி கஜானாவில் இருந்த கலைப் பொருட்களில் ஒன்று என்று தெரிந்து, அந்த விவசாயியை தூண்டி துருவி விசாரித்தனர். அவரது நிலத்தை தோண்டிப் பார்த்தனர். எதுவும் கிடைக்கவில்லை.
கஜானா பொக்கிஷம் நாடு முழுவதும் சிதறி விட்டதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டு யாருக்கும் பயனில்லாமல் போய் விட்டதா என்பது இதுவரை தெரியாத மர்மம்.
***
