தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விடாக்கண்டன்!

விடாக்கண்டன்!

விடாக்கண்டன்!


PUBLISHED ON : பிப் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் சுதன் என்பவன் இருந்தான். அவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.

''நாள்தோறும் பத்துப் பேருக்கு அன்ன தானம் அளிக்கிறேன். உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்,'' என்று பலரிடம் வேண்டுவான் சுதன்.

அதை உண்மை என்று நம்பி சிலர் அவனுக்கு உதவி செய்தனர். ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறும் போட மாட்டான்.

அன்னதானம் அளிப்பதை அறிந்து அவன் வீட்டிற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ''ஐயா! சற்று முன்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள். வயிறார சாப்பிடலாம்,'' என்று இனிமையாகப் பேசி அனுப்பி வைப்பான்.

திரும்பவும் அவர்கள் வந்தாலும் அதே பதிலைத்தான் சொல்வான். யாருக்கும் எதையும் ஈயாத கொடாக் கண்டனாக இருந்தான் சுதன்.

பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். விடாக் கண்டனாகிய அவன் யாரையும் ஏமாற்றி விடுவான். கொடாக் கண்டனான சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன்.

சுதன் வீட்டில் விருந்து சாப்பிடுவது என்று முடிவு செய்தான்.

நண்பகல் நேரம், சுதன் வீட்டிற்கு வந்தான் மகேன்.

''ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி பலரும் புகழ்ந்து பேசுகின்றனர். அதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன்,'' என்றான்.

''நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நாள்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர்.

''பக்கத்து ஊரில் இருந்து வருகிறீர்கள். உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை. நாளை வாருங்கள். இங்கே விருந்து சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாக செல்லலாம்,'' என்று இனிமையாகப் பேசினான் சுதன்.

''நாளை வருகிறேன்,'' என்று புறப்பட்டான் மகேன்.

''வீட்டிற்குள் வந்த சுதனிடம், யார் வந்தது?'' என்று கேட்டாள் மனைவி.

''நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். 'நாளை வா!' என்று அவனை அனுப்பி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான்,'' என்று சொல்லிச் சிரித்தான் சுதன்.

மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன்.

தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், ''இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது?'' என்று எரிச்சலுடன் கதவைத் திறந்தான்.

''ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள்,'' என்ற மகேன், அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டான்.

உள்ளே வந்த சுதன், மனைவியிடம், ''நேற்று வெளியூரில் இருந்து வந்தானே. அவன் இன்று விடிகாலையிலேயே வந்து விட்டான். நம் வீட்டுத் திண்ணையில் படுத்து இருக்கிறான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது,'' என்று கவலையுடன் சொன்னான்.

''இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்? காய்ச்சல் வந்தவள் போல நான் படுத்துக் கொள்கிறேன். அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, விருந்து சாப்பிடலாம் என்று அனுப்பி வையுங்கள்,'' என்றாள் அவள்.

''நல்ல வழி சொன்னாய்,'' என்று மனைவியைப் பாராட்டினான் சுதன்.

பொழுது விடிந்தது. திண்ணையில் படுத்திருந்த மகேனிடம் சோகமான முகத்துடன் வந்தான் சுதன்.

''என் மனைவிக்குக் காய்ச்சல். படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் எப்படிச் சமைக்க முடியும்? நாளை வாருங்கள். கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம்,'' என்றான்.

''மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன்,'' என்றான் மகேன்.

சுதனின் பதிலுக்குக் காத்திராமல் சமையல் அறைக்குச் சென்றான். சமைக்கத் தொடங்கினான்.

இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர்.

சிறிது நேரம் சென்றது. சுதன் காதில் மெதுவாக ஏதோ சொன்னாள் அவள். அவன் முகம் மலர்ந்தது.

''சமையலை முடித்து, வாருங்கள். சாப்பிடலாம்,'' என்று அவர்களை அழைத்தான் மகேன்.

''அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழைத் தோப்பில் இலைகளை அரிந்து எடுத்து வாரும்,'' என்றான் சுதன்.

அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான்.

அவன் வருவதை இருவரும் பார்த்தனர்.

உரத்த குரலில் அவள், ''வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது?'' என்று கோபத்துடன் கத்தினாள்.

''நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன்,'' என்று பதிலுக்குக் கத்தினான் சுதன்.

இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே வாயிலைப் பார்த்தனர்.

இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை.

''நீங்கள் இப்படி மிரட்டினால் நான் என் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவேன்,'' என்று கத்தினாள் அவள்.

''என்னை எதிர்த்தா பேசுகிறாய்? எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை,'' என்று அவளை அடித்தான் சுதன்.

''ஐயோ! என்னை இப்படி அடித்துக் கொல்கிறாரே... கேட்பார் இல்லையா?'' என்று ஒப்பாரி வைத்து அழுதாள்.

அவளை அடிப்பதை அவன் நிறுத்தவில்லை.

அவர்கள் இருவரும் வாயிலைப் பார்த்தனர்.

அங்கே அவனைக் காணவில்லை.

அவளை அடிப்பதை நிறுத்தினான் சுதன்.

''அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம்,'' என்றாள் சுதனின் மனைவி.

இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

''அடியே! எப்படி என் திறமை? உனக்கு வலிக்காமல் அடித்தேனே,'' என்று பெருமையுடன் சொன்னான் சுதன்.

''நான் மட்டும் உங்களுக்குச் சளைத்தவளா? நோகாமல் எப்படி அழுது ஒப்பாரி வைத்தேன் பார்த்தீர்களா?'' என்று பெருமையுடன் சொன்னாள் அவள்.

பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், ''நான் மட்டும் உங்களுக்குச் சளைத்தவனா? போகாமல் வந்தேனே,'' என்று அவர்கள் முன் குதித்தான்.

தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்தனர். அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us