PUBLISHED ON : மே 07, 2022

தங்கம் போல் மஞ்சள் நிறத்தில் பூக்கும் தாவரம், ஆவாரை. இதை ஆவிரை, மேகாரி என்றும் அழைப்பர். இதன் அறிவியல் பெயர் கேசியா ஆரிகுலேடா. மருத்துவ பயன்பாடுள்ளது. சங்க காலத்திலே இதன் பலனை அறிந்திருந்தனர், தமிழர்.
உலந்த ஆவாரை பூ, 100 கிராம், வெந்தயம், 100 கிராம் மற்றும் பாசிப் பருப்பு, 100 கிராம் கலந்து, நன்கு பொடியாக்கவும். இதில் சிறிதளவு வெந்நீரில் கலந்து, ஷாம்பூக்கு பதிலாக வாரம் இருமுறை தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் அடர்த்தியாக இருக்கும். கொத்து கொத்தாக உதிர்வதையும் தடுக்கும்.
வெயிலில் பயணம் செய்யும் போது, வெம்மையை தடுக்க ஆவாரை இலையை தலையில் கட்டிக்கொள்ளலாம். ஆவாரை பூவுடன், பருப்பு, வெங்காயம் சேர்த்து, கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், உடல் பளபளப்பு கூடும். ஒன்றிரண்டு ஆவாரை பூக்களை, தண்ணீரில் ஊற வைத்து குடிக்க, அதீத தாகத்தை நீக்கும்; சிறுநீரை பெருக்கும்; உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
- எம்.ஏ.நிவேதா
