PUBLISHED ON : செப் 14, 2018

கடந்த, 30 ஆண்டுகளாக கரும்புச்சாறு கடை நடத்தி வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு மேலாக, தினமலர் நாளிதழ் வாங்குகிறேன். இணைப்பிதழ்களில், சிறுவர்மலர் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுஅறிவுச் செய்திகள் மற்றும் நல்ல சிந்தனையை வளர்க்கும் சிறுகதைகள் நிறைய இருக்கும்.
ஜனவரி 9, 2015 அன்று வெளிவந்த சிறுவர்மலர் இதழில், 'இன்ச்... இன்ச்சாக இனிக்குது' என்ற கட்டுரையில், கரும்பின் வரலாறு பற்றியும், 'மருத்துவர் கரும்பு' என்ற தலைப்பில், கரும்புச்சாறு குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் மிக அழகாக எழுதப்பட்டிருந்தது. அந்த விஷயங்களை பெரிய எழுத்துக்களில், 'பிரின்ட்' செய்து, 'ப்ளக்ஸ் போர்டு' தயார் செய்து, கடைக்கு முன் வைத்து விட்டேன். இதை படித்து பார்த்து, ஆர்வமாக கரும்புச்சாறு குடிக்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாயினர்.
ஒரு நாள், அரசு உயர் அதிகாரி ஒருவர் என் கடைக்கு வந்து, கரும்புச்சாறின் நன்மைகளை போர்டில் படித்து, சற்று மிரட்டலாக, 'நீ எழுதி வைத்திருப்பதை எப்படி நம்புவது...' என்று கேட்டார்.
உடனே, நான் பத்திரப் படுத்தி வைத்திருந்த சிறுவர் மலர் இதழை எடுத்து, காட்டினேன். அவர் படித்து விட்டு, 'இப்போது முழுமையாக நம்புகிறேன்...' என்று கூறி, கரும்புச்சாறை வாங்கி, உற்சாகமாக அருந்தினார். என் கரும்புச்சாறு வியாபாரம், சிறப்பாக நடக்க, சிறுவர்மலர் இதழ் உதவி புரிந்ததை நன்றியுடன் இன்றும் நினைத்துக் கொள்கிறேன்.
- மா.வேணு, திருக்கோவிலுார்.
