PUBLISHED ON : ஜன 30, 2021

என் வயது, 90; தமிழ்நாடு மின்சார வாரியத்தில், போர்மேனாக பதவி உயர்ந்து ஓய்வு பெற்றேன். மின்சாரமே இல்லாத கிராமங்களுக்கு, மின் கம்பங்கள் அமைத்து, மின் ஒளி கொடுப்போம்.
அச்சமயங்களில், எடுத்து சென்ற உணவை, டீ கடைகளில் தான் சாப்பிடுவோம். அப்போது, சிறுவர்மலர் இதழைப் படிப்போம். அதில் வரும் சிறுகதைகள், எப்படி வாழ வேண்டும், துன்பம் கண்டு அஞ்சக்கூடாது, துணிந்து போராட வேண்டும் போன்ற கருத்துக்களை கொண்டிருக்கும்.
நல்லொழுக்கம் வளர்ப்பது, வாழ்க்கையில் ஏணியாக உயர்த்திய குருக்களை நன்றியுடன் நினைவில் வைப்பது போன்ற செய்திகளை கொண்டுள்ளன. சுயம்பாக மலர்கிறது சிறுவர்மலர்!
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல், 'அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே' என்ற கருத்தில் அமைந்த கதைகள் என் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் உதவின. அரசில் பணிபுரிந்த காலத்தில் காலணா கூட லஞ்சம் வாங்கியதில்லை. அதற்கு உதவிய சிறுவர்மலர் இதழுக்கு நன்றி!
- எம்.அருணாசலம், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 99440 08978
