PUBLISHED ON : செப் 09, 2023

என் வயது, 62; ஓய்வு பெற்ற சிறை அலுவலர். பொள்ளாச்சியில் சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, இளம் வயது சிறைவாசிகள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். அவர்களிடம் வித்தியாசமாக அணுகி அறிவு புகட்ட வேண்டும்.
ஒரு உத்தியாக, சிறுவர்மலர் புத்தகத்தை படிக்க கொடுப்பேன். அதை வாசிப்பவர் மனநிலை பக்குவப்படுவதை அறிந்தேன். தொடர்ந்து, சிறுவர்மலர் இதழ்களை ஐந்து, ஐந்தாக சேர்த்து, பைன்ட் செய்து படிக்க கொடுப்பதை வழக்கமாக செய்து வந்தேன்.
இந்த முயற்சியை பாராட்டிய சிறைத்துறை ஐ.ஜி., ஒரு உத்தரவை பிறப்பித்தார். உள்ளூர் நுாலகத்தில் புத்தகம் பெற்று, சிறை வாசிகளுக்கு படிக்க கொடுக்க அதில் கூறப்பட்டிருந்தது. கைதிகள் மனதிலும் சிறுவர்மலர் நற்சிந்தனை விதைப்பதை அதிலிருந்து அறிந்தேன்.
ஆங்கிலம் வழி பள்ளியில் படிக்கின்றனர் என் பேரக்குழந்தையர். அவர்களுக்கும் சிறுவர்மலர் இதழை அறிமுகம் செய்து, ஓவியம் வரைதல், புள்ளிகளை இணைத்து படம் வரைதல், விடுபட்டதை கண்டுபிடித்தலில் பயிற்சி தந்து மகிழ்வித்து வருகிறேன்.
- சு.ஜெயராமன், சென்னை.
தொடர்புக்கு: 94866 18556
