
என் வயது 47; சினிமாதுறையில் பணியாற்றி வருகிறேன். சிறுவர்மலர் இதழை, 12ம் வயதில் துவங்கி படித்து வருகிறேன். உறவினர் வீட்டில் சிறுவர்மலர் இதழை கண்டதும் விளையாட்டாக படிக்க ஆரம்பித்தேன். அதில் படக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. அந்த வயதில் எல்லா பகுதிகளையும் முழுதுமாக படித்து அறிய முடியவில்லை.
அதனால் ஆர்வம் மிகுதியால் என் தாத்தாவை வாசித்துக் காட்ட சொன்னேன். தட்டிக்கழிக்காமல் வாசித்து விளக்கினார். அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின், ஒவ்வொரு வாரமும் சிறுவர்மலர் இதழை படித்துக் காட்டி ஆர்வமூட்டினார். என்னை வாசிக்கவும் துாண்டினார். அந்த நாட்கள் மிகவும் பசுமையானது; என்றும் மறக்க முடியாதது. இப்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் தாத்தா நினைவாக தவறாது சிறுவர்மலர் இதழை படித்துவருகிறேன்.
சிறுவர்மலர் படிக்கும்போது பள்ளிக்கால நினைவுகளையும், என் தாத்தாவோடு இருந்த நெருக்கத்தையும் உணர்கிறேன். என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துவிட்டது. என் இரு மகன்களும், சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகர்களாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
- அ.பேச்சியப்பன், சென்னை.