PUBLISHED ON : ஆக 17, 2018

கடந்த, 1972ல் நான், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது ஏற்பட்ட நிகழ்ச்சி!
அன்று, பள்ளிக்கு தாமதமாக சென்றேன். 'ஏன் தாமதம்...' என்று ஆசிரியர் கேட்டார்.
'மருத்துவமனைக்கு சென்று வருகிறேன் சார்...' என்றேன்.
'உடம்பு சரியில்லையா...'
'இல்லை சார்... ரத்ததானம் செய்துவிட்டு வருகிறேன்...'
'வெரிகுட்... வெரிகுட்... உனக்கு யாரு இது பற்றி எல்லாம் கூறியது...'
'எங்க ஊருல, ஒரு அண்ணன் தான் சொன்னாங்க, 'ரத்த தானம் கொடுத்தா, நாமளும் நல்லா இருக்கலாம்; நம்மால ஒரு உயிரும் நல்லாயிருக்கும்ன்னு சொன்னார் சார்...' என்றேன்.
'இது பத்தின விழிப்புணர்வு எல்லாருக்கும் தேவை, அந்த அண்ணன் போல, நீயும் மத்தவங்களை ரத்ததானம் செய்ய வைக்கணும். அது பத்தி, சில நிமிடங்கள் நீ பேசு...' என்றார் ஆசிரியர்.
நான், சக மாணவர்களை பார்த்து பேசினேன்.
'ஹாய் பிரெண்ட்ஸ்... ரத்ததானம் அப்படிங்கிறது, நாம ஒரு உயிரை காப்பாத்துறோம்ங்கறது மட்டுமல்ல; நம் ஆரோக்கியமும் கூடுகிறது. நம்ம உடம்புல, ஐந்தரை லிட்டர் ரத்தம் இருக்கு. நாம, தானமா கொடுக்கிறதோ, சில மில்லி லிட்டர் தான்; அதுவும், தானம் கொடுத்த சில மணி நேரங்கள்ல, அந்த ரத்தம் திரும்பவும் ஊறிடும்; அப்படி, புது ரத்தம் பாய துவங்குவதால், நம்ம உடலும் ஆரோக்கியமாக இருக்கும்; நோய் எதுவும் வராது.
'ஒவ்வொரு மனிதரும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ரத்ததானம் செய்தா, உடம்புல, புது ரத்தம் பாய்ந்து, ஆரோக்கியமாக இருப்பதோடு, ஏதோ ஒரு உயிரும் ரத்தம் பெற்று, புத்துயிர் அடையும்.
'இவ்வளவு நல்ல விஷயமான ரத்த தானத்தை, நீங்களும் செய்வீங்கன்னு நம்புறேன். உடல் ஆரோக்கியமாக இருக்கிற எல்லாரும், ரத்த தானம் செய்யலாம் பிரெண்ட்ஸ்... நீங்க எல்லாம் ரத்த தானம் செய்வீங்க தானே...' என்று கூறினேன்.
எல்லாரும், 'நாங்களும் ரத்ததானம் செய்வோம்...' என்று கூறினர்.
வகுப்பு ஆசிரியர், என்னை தட்டி கொடுத்து, 'சபாஷ் ராபர்ட்! படிப்பு தவிர, பயனுள்ள விஷயங்களையும் புரிஞ்சு வெச்சிருக்கிறே...' வெரி குட் !ஐயம் பிரவ்டு ஆப் யூ'... இன்று நீ பேசியது தான் பாடம்...' என்று கூறி, என்னை மனதார வாழ்த்தினார்.
தற்போது என் வயது; 65. பல ஆண்டுகளுக்குப் பின், அந்த நாளை இன்றும் நினைத்துப் பார்த்து பெருமிதம் அடைகிறேன்.
- வி.ஜே.ராபர்ட், சென்னை.
