PUBLISHED ON : ஏப் 18, 2014

ஓர் ஊரில் துணி வெளுப்பவன் ஒருவன் இருந்தான். அவனிடம் கழுதை ஒன்று இருந்தது. தனக்கு இனிமையான குரல் இருப்பதாக அந்தக் கழுதை நினைத்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், காள், காள் என்று கத்தியது. ஆனால், அதை யாரும் கவனிக்கவில்லை.
'தன் குரலை யாரும் பாராட்டவில்லையே...' என்ற குறை அதற்கு இருந்தது.
முதுமை அடைந்த அதனால் துணி மூட்டைகளைச் சுமக்க முடியவில்லை.
மனைவியிடம் துணி வெளுப்பவன், ''நம் கழுதை கிழடாகி விட்டது. இனி அதனால், எந்த வேலையும் செய்ய முடியாது. அதைக் கொன்றால் அதன் தோல் நல்ல விலைக்குப் போகும். கையில் உள்ள பணத்தையும் சேர்த்து, நல்ல கழுதை வாங்கலாம்,'' என்றான்.
''அப்படியே செய்யுங்கள்,'' என்றாள் அவள்.
அவர்கள் பேசியதைக் கேட்ட கழுதை திடுக்கிட்டது.
'இவர்களுக்கு எவ்வளவு காலம் உழைத்து இருக்கிறேன். சிறிதும் நன்றி இல்லாமல் நடந்து கொள்கிறார்களே... இனி இங்கே இருந்தால் உயிருக்கு ஆபத்து. காட்டைக் கடந்து நகரத்தை அடைய வேண்டும். என் குரல் இனிமையை அங்கே எல்லாரும் பாராட்டுவர். புகழ் பெற்ற பாடகனாக விளங்குவேன்' என்று நினைத்தது.
அதன்படியே அந்த ஊரை விட்டுப் புறப்பட்டது. எதிரில் நாய் ஒன்று அழுது புலம்பியபடியே வருவதைப் பார்த்தது.
''நாயே! நான்தான் உயிருக்கு அஞ்சி காட்டைக் கடந்து போகப் போகிறேன். உனக்கு என்ன கவலை? நீ ஏன் அழுதுக் கொண்டே வருகிறாய்?'' என்று கேட்டது.
''கழுதையே! நான் எவ்வளவு காலம் நன்றியுடன் என் முதலாளிக்கு <உழைத்தேன். இப்போது நான் கிழடாகி விட்டேனாம். என்னால் வேட்டையாட முடியவில்லையாம். முதலாளி என்னை அடித்து விரட்டி விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,'' என்று புலம்பியது நாய்.
''என் முதலாளி என்னைக் கொல்லவே முடிவு செய்து விட்டார். அவரிடம் தப்பித்து வருகிறேன். காட்டைக் கடந்து நகரத்திற்கு செல்லப் போகிறேன். அங்கே நான் பெரிய பாடகனாக ஆவேன்.
''நீயும் என்னுடன் வா... என் பாட்டிற்கு ஏற்ப நீ இசைக் கருவிகளை இசைக்கலாம். நாம் அங்கே வளமாக வாழலாம்,'' என்றது கழுதை.
அதற்கு ஒப்புக் கொண்டது நாய். இரண்டும் ஒன்றாக நடந்தன. அவற்றின் எதிரில் பூனை ஒன்று அழுது புலம்பிக் கொண்டே வந்தது.
''பூனையே! ஏன் அழுகிறாய்? நாங்கள்தான் உயிருக்கு அஞ்சி இன்னொரு ஊர் போகிறோம். உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது?'' என்று அன்புடன் கேட்டது கழுதை.
''எனக்கு வயதாகி விட்டதாம். என்னால் எலிகளைப் பிடிக்க முடியவில்லையாம். முதலாளியம்மா என்னைக் கொன்றுவிட நினைத்தார். தப்பித்து ஓடி வந்தேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,'' என்று அழுதது பூனை.
''நீயும் எங்களுடன் சேர்ந்து கொள். என்னைப் போன்று உனக்கும் இனிமையான குரல் உள்ளது. எங்கள் இசை குழுவில் நீயும் பாடலாம். காட்டைக் கடந்து நகரம் செல்வோம். அங்கே நாம் மகிழ்ச்சியாக இருப்போம்,'' என்றது கழுதை.
பூனையும் அவற்றுடன் சேர்ந்து கொண்டது. மூன்றும் ஒன்றாக நடந்தன. எதிரில் சேவல் ஒன்று அழுதபடியே வந்தது.
''சேவலே! ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன துன்பம் ஏற்பட்டது?'' என்று கேட்டது கழுதை.
''என் முதலாளி வீட்டில் நாளை விருந்து நடைபெற உள்ளது. என்னைக் கொன்று கறி சமைத்து சாப்பிடப் போவதாக அவர் சொன்னார். தப்பித்து ஓடி வந்தேன்,'' என்றது சேவல்.
''நாங்களும் உன்னைப் போலத்தான் முதலாளியிடம் இருந்து தப்பித்துச் செல் கிறோம். காட்டைக் கடந்து நகரம் செல்வதாக உள்ளோம். நீயும் எங்களுடன் சேர்ந்து விடு. அங்கே இசைக் குழு ஒன்று அமைக்கப் போகிறோம். உனக்கும் நல்ல குரல் வளம் உள்ளது. நீயும் எங்களுடன் சேர்ந்து பாடலாம். நம் இசைக் குழு அங்கே பேரும் புகழும் பெறும்,'' என்றது கழுதை.
சேவலும், அவற்றுடன் சேர்ந்து கொண்டது. நான்கும் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டே நடந்தன.
வெகு தொலைவு நடந்ததால் அவை களைப்பு அடைந்தன. எங்கும் இருட்டத் தொடங்கியது.
''இனி நாம் பயணம் செய்ய முடியாது. இருட்டி விட்டது. இங்கேயே எங்காவது தங்குவோம். பொழுது விடிந்ததும் புறப் படுவோம்,'' என்றது கழுதை.
நாலா பக்கமும் பார்த்த சேவல், ''அங்கே பெரிய மரம் உள்ளது. நாம் நால்வரும் அங்கே தங்கலாம்,'' என்றது.
நான்கும் அந்த மரத்தின் அருகே சென்றன.
கழுதையும், நாயும் அந்த மரத்தடியில் படுத்துக் கொண்டன. மரத்தில் ஏறிய பூனை அதன் கிளையில் படுத்துக் கொண்டது. இறக்கைகளை அடித்துப் பறந்த சேவல் அந்த மரத்தின் உச்சியில் அமர்ந்தது.
பசியால் தூக்கம் வராமல் நான்கும் தவித்தன.
எங்காவது உணவு கிடைக்குமா என்று நாலா பக்கமும் பார்த்தது சேவல். சிறிது தொலைவில் வெளிச்சம் வருவது தெரிந்தது.
''நண்பர்களே! அங்கே வெளிச்சம் தெரிகிறது. கண்டிப்பாக, அங்கே வீடு இருக்க வேண்டும். அங்கே சென்றால் நம் பசிக்கு உணவு கிடைக்கும்,'' என்றது.
''பசி உயிர் போகிறது. நாம் அங்கே போவோம்,'' என்றது நாய்.
நான்கும் வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்தன. அங்கே வீடு ஒன்று இருப்பது அவற்றிற்குத் தெரிந்தன. வீட்டின் அருகே நான்கும் வந்தன. ஜன்னல் திறந்து இருப்பதைப் பார்த்தன.
''நாம் உடனே வீட்டினுள் செல்ல வேண்டாம். உள்ளே என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக பார்ப்போம். ஆபத்து இல்லை என்றால் உள்ளே செல்வோம்,'' என்றது நாய்.
உயரமாக இருந்த கழுதை, கழுத்தை உயர்த்தி ஜன்னல் வழியாகப் பார்த்தது. அங்கே மேசையின் மேல் பாத்திரங்களில் உணவுப் பொருட்கள் இருந்தன.
மேசையைச் சுற்றிப் பத்துப் பேர் அமர்ந்து இருந்தனர். சிரித்துப் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
''நண்பர்களே! உள்ளே உணவுப் பொருட் கள் நிறைய உள்ளன. பத்துத் திருடர்கள் அமர்ந்து சாப்பிடுகின்றனர். உள்ளே சென்றால் நம்மை அவர்கள் கொன்று விடுவர். என்ன செய்வது?'' என்று மெல்லிய குரலில் கேட்டது கழுதை.
''பசி உயிர் போகிறது. அவர்கள் நம்மைக் கொன்றாலும் கவலை இல்லை. உள்ளே சென்று சாப்பிடுவோம்,'' என்றது நாய்.
''நாம் ஏதேனும் சூழ்ச்சி செய்து அவர்களை இங்கிருந்து விரட்ட வேண்டும். அதற்கு நான் நல்ல வழி சொல்கிறேன். நாம் ஒன்றாகச் சேர்ந்து உரத்த குரலில் பாடுவோம். அவர்கள் அஞ்சி ஓடி விடுவர். பிறகு உள்ளே நுழைந்து மகிழ்ச்சியாக உண்ணலாம்,'' என்றது பூனை.
''நல்ல திட்டத்தைச் சொன்னாய். அப்படியே செய்வோம்,'' என்றது சேவல்.
ஜன்னலுக்கு அருகே இருந்த கழுதையின் முதுகின் மேல் ஏறி நின்றது நாய். நாயின் மேல் பூனையும், பூனையின் மேல் சேவலும் நின்றன.
நான்கும் ஒரே நேரத்தில் உரத்த குரலில் பாடத் தொடங்கின.
கழுதை காள் காள் என்று குத்தியது. நாய் லொள், லொள் என்று குரைத்தது. பூனை மியாவ், மியாவ் என்று கத்தியது. சேவல் கொக்கரக்கோ என்று கூவியது.
நான்கும் தொண்டை கிழியக் கத்தின. அவற்றின் குரல் எங்கும் பயங்கரமாகக் கேட்டது. ஜன்னல் கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன.
''ஐயோ! பேய்கள் கூட்டமாக வருகின்றன. அவை எழுப்பும் ஓசைதான் இது. இப்படிப் பட்ட பயங்கரமான ஓசையை என் வாழ் நாளிலேயே கேட்டது இல்லை. ஓடினால் பிழைத்தோம். இல்லையேல் அவை நம்மை கொன்று விடும்,'' என்று அலறியபடியே ஓடினான் திருடர்களின் தலைவன்.
மற்ற திருடர்களும் அலறியபடியே அவனைத் தொடர்ந்து ஓடினர்.
''நம் திட்டம் வெற்றி பெற்றுவிட்டது. அவர்கள் அஞ்சி ஓடிவிட்டனர். நாம் உள்ளே நுழைந்து வயிறார உண்போம்,'' என்றது பூனை. அதன்படியே நான்கும் வீட்டிற்குள் நுழைந்தன.
- தொடரும்.
