PUBLISHED ON : ஜூன் 11, 2022

மதுரை, காமராஜர் சாலை, சவுராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 6ம் வகுப்பு படித்தேன்.
ஆங்கில ஆசிரியர் பாலசுப்ரமணியன், அன்று இலக்கண பாடத்தில், 'யூஸ் இன் சென்டன்ஸ்' என்ற பகுதியை நடத்தினார். அப்போது, 'பியூட்டிபுல்' என்ற சொல்லை பயன்படுத்தி வாக்கியம் அமைக்க கேட்டார்.
அனைவரும் அமைதி காத்தனர். சட்டென எழுந்து, 'எம்.ஜி.ஆர்., இஸ் ய பியூட்டி புல் ஆக்டர்...' என்று கூறினேன். சக மாணவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
புன்னகைத்த ஆசிரியர், 'அவர் ஸ்கூல் கார்டன் இஸ் பியூட்டிபுல்... ஹிஸ் ஹேன்ட் ரைட்டிங் இஸ் பியூட்டி புல்... என்பது போல் சொல்லலாமே...' என விளக்கியபடி, 'நீ சொன்னதும் சரி தான்...' என, என்னை பாராட்டினார்.
வகுப்பு முடிந்ததும் தனியாக அழைத்து, 'படிக்கும் வயதில் பாட சம்பந்தமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்து...' என அறிவுரைத்தார்.
என் வயது, 62; யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில், அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அந்த சம்பவம் நடந்து, 50 ஆண்டுகளுக்கு பின்னும், பசுமையாக நினைவில் பதிந்துள்ளது.
- பி.என்.சுந்தரேசன், மதுரை.
தொடர்புக்கு: 98654 40326
