PUBLISHED ON : செப் 21, 2018

மூர்த்தியும், மதனும் நண்பர்கள். வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தனர்; எல்லா இடங்களுக்கும் ஒன்றாகவே சென்றனர்; சுற்றினர்; தங்கினர்.
பயணம் முடித்து, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மூர்த்தி காதில் கடுக்கன் டாலடித்தது.
'இத்தனை நாள் இவனுடன் தான் இருந்தேன்; இந்த கடுக்கன் என் கண்ணை உறுத்தவில்லை; இன்று, என்னைப் பார்த்து கண்ணடிக்கிதே' என்று நினைத்த மதனுக்கு, கடுக்கன் மீது, ஆசை வந்தது.
''மூர்த்தி... உன் கடுக்கனைக் கொஞ்சம் கொடு; நான் போட்டுப் பாக்குறேன்...'' என்றான்.
கடுக்கனைக் கழட்டி, கொடுத்தான்.
காதில் மாட்டிக் கொண்டான் மதன்.
''உன் காதுல கடுக்கனைப் போட்டதும் இன்னும் அழகா இருக்கு...'' என்றான் மூர்த்தி.
''நிஜமாவா சொல்ற...''
''உண்மையத்தான் சொல்றேன்; உனக்கே செஞ்சது போல இருக்கு...''
இரண்டு நாள் பயணத்திற்கு பின், ஊரை அடைந்தனர்.
''வீட்டிற்கு செல்ல வேண்டும்; என் கடுக்கனை கழற்றிக் கொடு...'' என்றான் மூர்த்தி.
அவனை, ஏற, இறங்கப் பார்த்த மதன், ''என்ன கேட்ட... கடுக்கன் வேணுமா... இது என்னோடது...'' என்றான்.
அதிர்ந்து போனான் மூர்த்தி. வாக்குவாதம் ஏற்பட்டது. பின், பஞ்சாயத்து தலைவரிடம் சென்றனர். மூர்த்தி புகாரைச் சொன்னான்; மறுத்தான் மதன்.
சிறிதுநேரம் வாதங்களைக் கேட்ட பஞ்சாயத்து தலைவர், ''சரி... நீங்க வீட்டுக்குப் போயிட்டு, நாளைக்கு வாங்க...'' என்றார்.
இருவரும் கிளம்பினர்.
பஞ்சாயத்து தலைவர், அவர்கள் பின்னால் சில ஒற்றர்களை அனுப்பினார்.
வீட்டிற்குள் சென்றான் மூர்த்தி. அவன் தந்தை கேட்ட முதல் கேள்வி, 'உன் காதுல இருந்த கடுக்கனை எங்கே காணோம்...' என்பது தான்.
அதேபோல், மதன், வீட்டிற்குள் நுழைந்ததும், அவன் அம்மா கேட்ட கேள்வி, 'டேய்... ஏதுடா இந்த கடுக்கன்... ரொம்ப நல்லா இருக்கு...' என்பது தான்.
ஒற்றர்கள் பஞ்சாயத்து தலைவரிடம் நடந்ததை கூறினர். மதன் குற்றவாளி என்பது தெரிந்தது.
மறுநாள் -
மூர்த்தியும், மதனும் பஞ்சாயத்து தலைவர் முன் நின்றனர்.
''கடுக்கன் மூர்த்தியுடையது தான்; மரியாதையா கழட்டிக் கொடு; இல்லையென்றால், அரசரிடம் நிறுத்துவேன்; கடும் தண்டனை கிடைக்கும்...'' என்றார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டு, கடுக்கனை கழட்டி தந்து, மன்னிப்பு கேட்டான் மதன்.
குட்டீஸ்... பொய் சொல்வது, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு, அடைய நினைப்பதெல்லாம் ரொம்ப தப்பு... சரியா...
