/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
95 வயது ஆன்மிக எழுத்தாளர், ஸ்ரீநிவாஸாச்சாரியர்!
/
95 வயது ஆன்மிக எழுத்தாளர், ஸ்ரீநிவாஸாச்சாரியர்!
PUBLISHED ON : டிச 20, 2020

பெரியவர் ஒருவர், 95வது வயதில், ஒரே ஒரு கண் பார்வையுடன் கோவிலின் ஆகம விதிகளை கற்றுக் கொடுப்பதுடன், அது குறித்து பல்வேறு புத்தகங்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய புத்தகங்கள் தான், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் விற்பனை செய்யப்படுவதுடன், கடைப்பிடிக்கவும் படுகிறது.
சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர், ஸ்ரீநிவாஸாச்சாரியர்.
செங்கல்பட்டு மாவட்டம், அழகிய செய்யூரை பூர்வீகமாகக் கொண்டவர். சமஸ்கிருத பண்டிதர் குடும்ப பின்னணி காரணமாக, இவரும், சமஸ்கிருதத்தில் அன்றைய உயர் படிப்பான சிரோன்மணி வரை படித்தார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள, வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில், 28 ஆண்டுகள் முழு நேர அர்ச்சகராகவும், தற்போது கவுரவ அர்ச்சகராகவும் இருந்து வருகிறார்.
கோவிலில் இவர், பூஜை செய்யும் நேர்த்தியையும், மந்திரம் சொல்லும் அழகையும் பார்த்தவர்கள், 'இதே முறையை மற்ற கோவில்களுக்கும் கொண்டு செல்லலாமே...' என்று ஆலோசனை தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கோவிலில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள், தெளிவுற தெரிந்து கொள்வதற்கும், பொதுமக்கள், தங்கள் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது போன்ற காரியங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் விளக்கி, இதுவரை பல்வேறு தலைப்புகளில், 16 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
'ஸ்ரீ ராகவ சிம்ஹம் பிரஸ்' என்ற பெயரில், சிறிய அளவில் அச்சகம் துவங்கி, தான் எழுதும் புத்தகங்களை அச்சிட்டு, வெளியிட்டு வருகிறார். புத்தகமாக்கினாலும், பெரிதாக மக்களிடம் போய்ச் சேரவில்லை.
உலகம் கம்ப்யூட்டர் மயமானபோது, கம்ப்யூட்டரில் டைப் செய்யவும், 'பேஜ் - மேக்கிங்'கை, 86வது வயதில் கற்றுக் கொண்டார்.
அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, இவரைப்பற்றி கேள்விப்பட்டு, அழைத்து பேசியிருக்கிறார்.
'இவரைப் போன்ற புத்திமான்கள் எழுதிய புத்தகங்கள் பொக்கிஷம் போன்றவை. ஆச்சாரங்கள், ஆகமங்கள் பற்றி சொல்வதற்கே ஆள் இல்லாத சூழ்நிலையில், இவ்வளவு ஆராய்ச்சி செய்து, இவர் எழுதிய புத்தகங்கள், அனைவரையும் சென்றடைய வேண்டும்...' என்று, உத்தரவு போட்டார்.
அதன் காரணமாக, 'கோவில் அர்ச்சகர்களாக வர விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்...' என்று, தமிழக இந்து சமய அறநிலையத்துறை, இவரது புத்தகங்களைத் தான் முன்வைத்துள்ளது.
தற்போது உத்தியோகத்தில் இருக்கும் பேரன்கள், இவரை பார்த்துக் கொண்டாலும், உழைப்பை கைவிடக்கூடாது என்பதற்காக, அச்சகத்திற்கு நாள் தவறாமல் வந்து செல்கிறார்.
உடல் நலத்துடன் இருந்தாலும், வலது கண் பார்வையை வைத்தே, அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
இப்போது புத்தகம் எழுதாத சூழ்நிலையில், திருமண பத்திரிகை அடிப்பது போன்ற வேலைகளை செய்து தருகிறார். புத்தகங்களை விற்பனை செய்கிறார். பல்வேறு மடாலயங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள், இவருக்கு பலவித பட்டங்கள் கொடுத்து கவுரவித்துள்ளது. ஆனால், அரசு சார்பில் இதுவரை எவ்வித கவுரவமும் இவருக்கு கிடைக்கவில்லை.
ஸ்ரீநிவாஸாச்சாரியர் எழுதிய புத்தகங்கள் தேவைப்படுவோர், அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 044 - 24641225.
எல். எம். ராஜ்