PUBLISHED ON : நவ 05, 2017

சுதந்திர போராட்ட வீரர்களை, ஆங்கிலேயர், தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்த செல்லூலர் ஜெயிலுக்குள் நுழைந்தோம். அப்போது, ஒரு எருமை கன்றும் நுழைந்தது என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா...
அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்...
மைய கோபுரத்தில் இருந்து ஏழு பிரிவுகளாக, மூன்று மாடி, 690 கொட்டடிகளாக கட்டப்பட்ட இச்சிறைச்சாலை, தற்போது, நான்கு பிரிவுகளுடன் காட்சியளிக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் அரசின் ஆளுமைக்கு இத்தீவு வந்த போது, நேதாஜியின் படை வீரர்கள் இதன் இரண்டு பிரிவு கட்டடங்களை இடித்து நொறுக்கி விட்டனர். நாடு சுதந்திரம் அடைந்த பின், ஒன்று இடிக்கப்பட, தற்போது, நான்கு பிரிவுகள் மட்டும், அங்கு நிகழ்ந்த அநியாயங்களை உலகுக்கு உணர்த்தும் சாட்சியாக நிற்கின்றன.
ஒவ்வொரு பிரிவு கட்டடமும், மற்ற கட்டடத்தின் பின்புறத்தை நோக்கி இருக்குமாறு சக்கர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும், 13.5 அடி நீளமும், 7.5 அகலமும் கொண்டதாகவும், வெளிப்புறத்தில் இருந்து பூட்டும் விதமாக, கனமான இரும்பு தாழ்பாள் உள்ளது. 3 அடி நீளமும், 1 அடி அகலமும் கொண்ட இரும்பு கம்பிகளாலான சிறிய ஜன்னல் தான், அறைக்குள் வெளிச்சம் மற்றும் காற்று வருவதற்கான ஒரே வழி.
அனைத்துப் பிரிவுகளின் வராந்தாக்களும் மைய கோபுரத்துடன் இணைக்கப்பட்டு, இரும்பு கதவால் பூட்டப்பட்டுள்ளது.
அந்த சிறை அறைகளுக்குள் நுழைந்து பார்த்த போது, ஒவ்வொரு சுவரும், ஆயிரக்கணக்கான நம் நாட்டு இளைஞர்களின் உதிரம் சிதறிய கதையை, மவுனமாக நம்மிடம் கதைக்கிறது.
நுழைவு வாயிலை ஒட்டி, வட கிழக்கு மூலையை நோக்கிய பிரிவில், மூன்றாவது மாடியில் உள்ள கடைசி அறையோ, நம்மிடம் எத்தனையோ கதைகளை சொல்ல துடிக்க, அதன் மவுன பாஷையை அறியாமல் மற்ற பகுதிகளை பார்க்க சென்று விட்டோம்.
பின், அங்கு காண்பிக்கப்படும் ஒளி - ஒலி காட்சி, மாலை, 6:30 மணிக்கு என்று அறிந்து, கார்பியன் பீச்சுக்கு கிளம்பினோம்.
ஏழு பேரும் இரு குழுக்களாக பிரிந்து, இரு மோட்டார் படகுகளில் ஏற, சுற்றிலும் பார்வையை சுழல விட்டேன். மோட்டார் படகுகளும், ஜெட்ஸியும், கடல் நீரை பிளந்து சீறிப் பாய்வதைப் பார்த்ததும் உள்ளுக்குள் பரவசம்.
எங்களுக்கு முன் சென்ற படகில், உடன்பணியாற்றும் பானுமதி, கோகிலாவின் மகள் ஸ்வேதா, ஒருங்கிணைப்பாளர் கல்பலதா போன்றோர், ஆரவார குரல் எழுப்பியவாறு சென்றனர். நாங்கள் ஏறிய படகோ, அதிகப்படியான பாரம் ஏற்றிய மாட்டு வண்டியைப் போல், படகோட்டி எவ்வளவு தள்ளினாலும் நகர மறுத்து, எங்கள் பொறுமையை சோதித்தது. முன்னால் சென்ற டீம், உற்சாகமாக கத்தியபடி கரைக்கு திரும்பியும் விட்டனர். ஆனால், நாங்கள் அமர்ந்திருந்த படகோ, பாறையில் முட்டி, நகரக் காணோம். பின், வேறு இருவர் வந்து தள்ளியதில் மெதுவாக நகர்ந்து வேகமெடுக்க ஆரம்பித்தது.
ஆகா... கடலில், காற்றைப் போல் சீறும் படகில், ஒரு த்ரில்லான அனுபவம் கிடைக்கப் போகிறது என்ற ஆனந்தத்தில் நாங்கள் இருக்க, பாசின் பி.ஏ., கலா, இந்தியில், 'தம்பி... வேகமாக போகாத; மெதுவா போ...' என்று கூற, அவர், இதுதான் சாக்கு என்று ஆமை வேகத்தில் படகை நகர்த்த, வெறுத்து நொந்து போனோம்.
சிறிது தூரத்தில், கடலில், களி மண்ணைப் பிடித்து வைத்தது போன்று, 'வைப்பர் ஐலண்டு' தென்பட்டது. அதில், எந்த வித தாவரங்களும் இல்லை; வெறும் பாறை. வளைந்து, நெளிந்த குறிப்பிட்ட தூரம் வரை பரந்து விரிந்திருந்தது.
அதன் அருகில் படகை கொண்டு போன படகோட்டி, 'இது தான், ஸ்னேக் தீவு நல்லா பாத்துக்கங்க...' என்றார். ஸ்னேக் தீவு என்றதும், 'ஆங்கிலப் படங்களில் வருவது போன்று விதவிதமான ராட்சச பாம்புகள் இங்கு இருக்கும் போலிருக்கு...' என எனக்குள் கற்பனை விரிய, 'தம்பி... இங்கு நிறைய பாம்புக இருக்குமோ...' என்று கேட்டேன்.
'பாம்பெல்லாம் இல்ல; பாம்பு மாதிரி இந்த தீவு வளைந்து நெளிந்து காணப்படுவதால், அப்படி சொல்வாங்க...' என்றவன், அப்படியே வந்த வழியே கரைக்கு படகை திருப்பினான்.
கரையில் அமர்ந்திருந்த எங்கள் குழு, 'எப்படி இருந்தது...' என்று கேட்க, செல்வி, 'எங்க... அலுங்காம, குலுங்காம அப்படியே போயி இப்படியே திரும்பி வந்தோம்... ஒரு த்ரிலும் இல்ல; அதுதான் கலா, 'ஸ்பீடு பிரேக்கர்' போட்டாச்சே...' என்றதும், கலாவின் முகம் வாடியது. 'அடடா... நம்மால் இவர்கள் உற்சாகம் கெட்டு விட்டதே...' என்ற கவலை அதில் தென்பட்டது.
உடனே, கல்பலதா, 'சரி விடுங்க... நாளைக்கு ஹவ்லாக் தீவு போறோம்ல்ல... அங்க வச்சுக்குவோம் நம்ம ஆட்டத்தை...' என்று கூறி, எங்களை கிளப்பினார்.
மறுபடியும் செல்லூலர் ஜெயில்!
நாங்கள் சென்ற போது, முதல், 'பேட்ச்' ஒளி - ஒலி காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தது. அதுவரை, எதிரில் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்தோம். அங்கு, விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலையாக பார்த்தவள், கம்பீரமாக நின்ற அந்த சிலையைப் பார்த்ததும், உள்ளுக்குள் சிலிர்ப்பு. பெயரைப் பார்த்தேன்; வீர் சாவர்க்கர் என்று இருந்தது. மீண்டும் எனக்குள், 'யார் இந்த வீர் சாவர்க்கர்...' என்ற கேள்வி தொற்றிக் கொண்டது.
சரியாக, 7:30 மணிக்கு ஒளி, ஒலி காட்சிக்கு அனுமதிக்கப்பட்டோம். அந்த இருளில், விளக்கு ஒளியினால் ஆங்காங்கே வட்டமிட்டு காட்டி, அந்த சிறை கொட்டடிகளில் நம் நாட்டு இளைஞர்கள் பட்ட, சொல்லண்ணா துன்பங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் உணர்ச்சி பொங்க விவரித்த போது, துக்கத்தில் நெஞ்சு விம்மியது.
இந்நிலையில், விளக்கு ஒளி, வட கிழக்கு மூலையை நோக்கிய பிரிவில் மூன்றாவது மாடியில் உள்ள கடைசி அறைக்கு சென்றது. அது, மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகில், பாகுர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விநாயக் தாமோதர் என்ற வீர சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால், 50 ஆண்டுகள், தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அறை என்று அறிந்த போது, இதயத்தை ஈட்டியால் குத்தியது போலிருந்தது.
இந்திய சுதந்திர போராட்டத்தில், இவரைப் போல், 50 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் யாருமில்லை.
அதைவிடக் கொடுமை... அதன் நேர் கீழ் தரைத்தள அறையில் அவரது சகோதரர், 11 ஆண்டுகள் சிறையில் இருந்ததைக் கூட, அவர் அறிந்திருக்கவில்லை என்பது!
பின், ஓட்டலுக்கு திரும்புமுன், கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்றோம்.
அனைவருக்கும் முன் துள்ளிக் குதித்தபடி ஓடியது அதே எருமைக்கன்று... அட, இந்த வாரமும் அந்த எருமைக் கன்றைப் பற்றி சொல்ல முடியவில்லையே... கண்டிப்பாக அடுத்த வாரம் முடியுமா பார்க்கிறேன்... காத்திருங்கள்...
— தொடரும்.
அந்தமானில் மொத்த நிலப்பரப்பு: 8,249 சதுர கி.மீ.,
மக்கள் தொகை: 3,79,944.
மொழி: தமிழ், வங்காளி, இந்தி மற்றும் மலையாளம்
கல்வியறிவு: 86.27 சதவீதம்
ஆண் - பெண் விகிதம்: 1000:878
தலைநகர்: போர்ட் பிளேயர்
மொழி: தமிழ், வங்காளி
மக்களவை இடங்கள்: 1
துணைநிலை ஆளுநர்: தேவேந்திர குமார் ஜோஷி.
- செவன் சிஸ்டர்ஸ்
