PUBLISHED ON : டிச 25, 2016

சரவணனுக்கும், அவனது அப்பா செல்வகுமாருக்கும் வியப்பாக இருந்தது. இதுவரை, அவர்களின் சொந்த ஊரிலிருந்து எவரும் வந்ததில்லை. இப்போது வந்து இருக்கின்றனர் என்றால், நிச்சயமாக, ஏதேனும் காரணம் இருக்கக்கூடும்.
'என்ன செல்வகுமார் இப்படி முழிக்கிறே... எங்கள தெரியலயா... நான் தான், நமச்சிவாயம்; இது சங்கரபாண்டி. நாம எல்லாரும், ஐஞ்சாம் வகுப்புல ஒண்ணா படிச்சோமே ஞாபகம் இருக்கா...' என்று, வந்தவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
செல்வகுமாருக்கு, அது எப்படி மறந்து போகும். எல்லாரும், ஒரே வகுப்பில் படித்த போதும், அவர்கள், செல்வகுமாரிடம் நட்பாக பேசியதோ, சமமாக நடத்தியதோ இல்லை.
''என்னப்பா இப்படி மலைச்சு போய் நிற்கிறே... வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டயா...'' பொய்யாக கோபித்தார், சங்கரபாண்டியன்.
''உள்ளே வாங்க,'' என்றார் செல்வகுமார்.
வரவேற்பறைக்குள் நுழைந்த போது, அங்கிருந்த சொகுசு இருக்கைகளும், அலங்கார வேலைப்பாடுகளும் அவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின.
ஏற்கனவே, வாசலில் இருந்த, 'டயோட்டா லான்சர்' ரக கார், அவர்கள் மனதில், பெரிய மதிப்பீட்டை தோற்றுவித்திருந்தது.
''இவ்வளவு வசதியோடு, மகன் இருக்கும் போது, ஏதும் இல்லாதவன் போல், கருப்பசாமி ஏன் நம்ம கிராமத்தில் கிடந்து, கஷ்டப்படணும்...'' என்று, தாழ்ந்த குரலில், சங்கரபாண்டியனிடம் கேட்டார், நமச்சிவாயம்.
''நிற்கிறீங்களே... உட்காருங்க,'' என்று சொன்னார், செல்வகுமார்.
வந்தவர்கள் மிகவும் உரிமையோடு, சோபாவை அடைத்து உட்கார்ந்தனர்.
செல்வகுமாருக்கு, தன் வீட்டில், அவர்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள் என்பது தெரியும்; எனினும், சம்பிரதாய உபசரணைக்காக, ''டீ, காபி ஏதேனும் சாப்பிடுறீங்களா...'' என்று கேட்டார்.
''எங்களுக்கு எதுவும் வேணாம்; உன் அப்பா, கருப்பசாமி எங்கே... அவனை, கையோடு ஊருக்கு அழைச்சுட்டு போக வந்துருக்கோம்,'' என்று, வந்த காரணத்தை சொன்னார், நமச்சிவாயம்.
''என்னது... அப்பாவ அழைச்சுட்டு போக வந்திருக்கீங்களா... அப்படின்னா, அவரை ஊரை விட்டு விலக்கி வைத்ததாக சொன்ன, ஊர் பஞ்சாயத்து தீர்ப்பு என்ன ஆச்சு...'' அதிர்ச்சியுடன் கேட்டார், செல்வகுமார்.
''பஞ்சாயத்து, அந்த தீர்ப்பை ரத்து செய்து, கருப்பசாமிய, உடனே அழைச்சுட்டு வரச் சொல்லி, எங்களை அனுப்பியிருக்காங்க,'' என்றார், நமச்சிவாயம்.
அவரை நிமிர்ந்து பார்த்த செல்வகுமார், ''எங்க அம்மாவையும், அப்பாவையும் கடைசி காலத்தில கஷ்டப்பட விடாம, நல்லா பாத்துக்கணும்ங்கிறது என்னோட ஆசை. எனக்கு வேலை கிடைச்சு, எத்தனையோ முறை சென்னைக்கு கூப்பிட்டும் வராமல், இப்பத் தான், அவங்க என்கூட வந்து தங்கியிருக்காங்க. நல்ல சாப்பாடு, துணிமணிகள், நாலு பேரோட அனுசரனையான பேச்சு; மொத்தத்தில், இப்பத் தான், அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சுகப்பட்டிருக்காங்க. அதனால, கொஞ்ச நாட்கள் கழிச்சு, நானே, அவரை ஊருக்கு அழைச்சுட்டு வந்து விடுறேன்,'' என்றார்.
''நீ சொல்றது எங்களுக்கு புரியுது; ஆனா, பஞ்சாயத்து தலைவருக்கு, என்ன பதில் சொல்றது... பஞ்சாயத்து கட்டளைய மீறி செயல்பட முடியுமா நீயே சொல்லு...'' என்று, எதிர்கேள்வி கேட்டார், நமச்சிவாயம்.
அதற்கு மேல், செல்வகுமாருக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை. அவருக்கு தெரியும் பஞ்சாயத்து தீர்ப்பு பற்றி! அதை மதிக்கவில்லை என்றால், ஊர் பக்கமே தலை காட்ட முடியாது; அதன்பின், அது சொந்த ஊர் என்பதையே, மறந்து விட வேண்டும். அதற்கு பயந்து, எவரும், பஞ்சாயத்து தீர்ப்பை மீறத் துணிவதில்லை.
செல்வகுமார் மவுனமாகி விடவே, பக்கத்தில் நின்றிருந்த அவரது மகன் சரவணனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தாத்தா கருப்பசாமியை, சென்னைக்கு அழைத்து வந்த போது, எதையோ சாதித்து விட்டது போல் உணர்ந்தவன் அவன். இப்போது, மறுபடியும் அவரை அங்கு அனுப்பி வைக்க அவனுக்கு விருப்பம் இல்லை.
அவனது திட்டம், இவ்வளவு சீக்கிரம் தவிடு பொடியாகும் என்று, அவன் கொஞ்சங் கூட, எதிர்பார்க்கவில்லை; இதற்காகவா அவன் அவ்வளவு கஷ்டப்பட்டான்?
பத்தாம் வகுப்பு, பரீட்சை எழுதி முடித்திருந்த நேரம் அது...
'தாத்தா, பாட்டியை பார்க்க, கிராமத்துக்கு போகட்டுமா...' என்று சரவணன் கேட்ட போது, நீண்ட யோசனைக்குப் பின், அனுமதியளித்தார், செல்வக்குமார்.
மிகுந்த குதூகலத்துடன் ஊருக்கு வந்தவனை, பஸ் நிறுத்தத்திலேயே, காத்திருந்து அழைத்துப் போனார், தாத்தா கருப்பசாமி.
அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில், எதிர்ப்பட்ட நபர்களுக்கெல்லாம், பணிவோடு கும்பிடு போட்டார், தாத்தா. ஆனால், பதிலுக்கு எவரும், அவருக்கு வணக்கம் செலுத்தவில்லை; ஒரு சிலர், அவரது வணக்கத்தை பொருட்படுத்தவேயில்லை.
'நாம், ஒருவருக்கு வணக்கம் சொன்னால், பதிலுக்கு வணக்கம் சொல்லுவது தான் மரியாதை; இது கூடவா இவர்களுக்கு தெரியாது... என்ன ஜனங்கள்...' என்ற சரவணனின் வாயை, பொத்தினார், கருப்பசாமி.
'சத்தம் போட்டு பேசாத... அந்த மரியாதையெல்லாம் அவர்களுக்கு தெரியும்; ஆனா, அதை நமக்கு தர மாட்டாங்க...' என்றார்.
'ஏன்?'
'அது ஏன்னு அப்புறம் சொல்கிறேன்...' என்று, அவன் கேள்விக்கு, முற்றுப்புள்ளி வைத்தார், கருப்பசாமி.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது, அவரது வீடு; வீட்டையொட்டி, இரண்டு சிறிய வீடுகள் இருந்தன; ஒரு வீட்டின் முன், வெள்ளாவி அடுப்பும், அதன் பக்கத்தில், இரண்டு கழுதைகளும் நின்றிருந்தன. இன்னொரு வீட்டின் அருகில், சிறுவன் ஒருவனுக்கு, முடி வெட்டிக் கொண்டிருந்தார் ஒருவர்.
பாட்டியும், பக்கத்து வீட்டு மனிதர்களும், சரவணனை வரவேற்று, அவனது அம்மா, அப்பாவை பற்றி நலம் விசாரித்தனர்.
பாட்டியிடம் பேசியபடி இருந்தான், சரவணன். கருப்பசாமி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, 'கருப்பா... ஏய் கருப்பா... கூப்பிடறது காதில விழல...' என்று, யாரோ அதட்டலாக கத்துவது கேட்டது. கருப்பசாமி சாப்பிட்ட கையுடன் எழுந்து வெளியே வந்தார். கூடவே, சரவணனும் வந்தான். வாசலில் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.
அவன், கருப்பசாமியிடம், 'வடக்கு தெரு பெரியவரின் செருப்பு அறுந்து போச்சாம்; அவர், 10:00 மணிக்கு டவுனுக்கு போகணுமாம். அதான், உன்னை உடனே, வர சொன்னார்; சீக்கிரம் புறப்படு...' என்று, அவசரப்படுத்தினான்.
'சரிங்க ஐயா... நீங்க போங்க; இதோ வாரேன்...' என்று சொல்லி, சாப்பாட்டுத் தட்டை அப்படியே மூடி வைத்து, சுவரில் தொங்கிய தோல் பையை தூக்கியபடி கிளம்பினார், கருப்பசாமி.
அவர் சென்று, 10 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது; அதற்குள் இன்னொருவர் வந்தார். அவருக்கு, கருப்பசாமியை விட வயது குறைவு தான் என்றாலும், ஏக வசனத்தில், 'கருப்பசாமி இல்லயா...' என்று, பாட்டியை பார்த்து கேட்டார். அவள் விபரத்தை கூறியதும், 'சரி சரி... கருப்பசாமி வந்ததும், நடுதெரு கடைக்காரர் வீட்டில், மாடு செத்து போச்சாம்; வந்து, தூக்கி போடச் சொல்லு; மறந்துடாதே... அப்புறம், ஊர் நாறி போயிடும்...' என்று சொல்லி, போனார்.
பாட்டியிடம் சரவணன், 'அவங்க வீட்டுல மாடு செத்து போச்சுன்னா, அவங்களே தூக்கி போட வேண்டியது தானே... ஏன் தாத்தாவ, தேடணும்...' என்றான் புரியாமல்!
'இந்த மாதிரி வேலைகளை எல்லாம், அவங்க செய்ய மாட்டாங்க... அதை, நாம் தான் செய்யணும்...' என்றவள், எதை எதையெல்லாம் தாங்கள் செய்யணும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் பற்றி கூறினாள்.
இதைக் கேட்ட போது, சரவணனுக்கு, மிகவும் வேதனையாக இருந்தது.
'இந்த ஊர், தாத்தாவையும், பாட்டியையும் இவ்வளவு தாழ்வாக நடத்துகிறதே... எப்படியாவது இவர்களை இந்த சிறுமையிலிருந்து விடுவிக்க வேண்டும்...' என்று நினைத்தவன், 'பாட்டி... நீயும், தாத்தாவும் ஏன் இந்த ஊர்ல இருந்து கஷ்டப்படணும்; பேசாம, என்னோடு புறப்பட்டு வந்துடுங்க...' என்றான்.
'நான் வர தயார் தான்; ஆனா, உன் தாத்தாவுக்கு பிறந்த மண்ணையும், பழகின ஆட்களையும் விட்டுட்டு வர இஷ்டமில்ல...' என்றாள், பாட்டி.
'அதற்காக, மற்றவங்க இழிதொழில்ன்னு தாழ்வாக கருதுற வேலைய ஏன் செய்யணும்...'
'இந்தக் கேள்விய உன் தாத்தாகிட்ட கேட்டுப் பாரு... செய்யும் தொழிலே தெய்வம்; எந்த தொழிலும், கேவலம் இல்லன்பார்...' என்றாள்.
இத்தகைய மனோநிலை கொண்டவருக்கு எப்படி புரிய வைப்பது என்று ஆயாசமாக இருந்தது, சரவணனுக்கு!
'அப்படின்னா, உங்கள தீண்ட தகாதவர்களாக கருதி, அடிமைகள் போல் நடத்துறத சகிச்சுக்கிட்டு தான் இருக்கப் போறீங்களா...'
'என்னப்பா செய்றது... தலைமுறை தலைமுறையாக செய்து வந்த தொழிலாச்சே...' என்று பாட்டி சொல்லவே, யோசனையில் ஆழ்ந்தான் சரவணன்.
அப்போது தான், அவனுக்கு அந்த எண்ணம், தோன்றியது.
மறுநாள், ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.
ஊர் பஞ்சாயத்து கூடி, 'சரவணன் குற்றவாளி...' என்று தீர்ப்பளித்தது.
'ஐயா... என் பேரன் பட்டணத்தில் வளந்தவன்; அவனுக்கு நம்ம ஊர் பழக்கவழக்கமெல்லாம் தெரியாது. அவனை மன்னிச்சுடுங்க...' என்று, கெஞ்சினார், கருப்பசாமி.
'அதெப்படி முடியும் கருப்பா... உன் பேரன் கோவிலுக்குள் நுழைந்தது சாதாரண குற்றமா... தெய்வ குற்றமாச்சே... பேசாம, தண்டனைய நிறைவேற்று...' என்றார், கண்டிப்புடன் பஞ்சாயத்து தலைவர்.
குற்றவாளியின் தலையில், மாட்டுச் சாண கரைசலை ஊற்றி, பிய்ந்து போன செருப்புகளால் செய்த மாலையும், எருக்கஞ் செடி தழைகளை கொண்டு செய்யப்பட்ட மாலையையும் கழுத்தில் அணிவித்து, தலையை மொட்டை அடித்து, உடம்பில், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி, தெரு தெருவாய், ஊர்வலமாக இழுத்து வந்து, குற்றவாளியை கேவலப்படுத்துவது தான், அந்த தண்டனை.
அதை, தன் பேரனுக்கு, எந்த தாத்தாவால் செய்ய முடியும்... கருப்பசாமி அமைதியாக நின்றார்.
'என்ன கருப்பா அசையாம நிற்கிறே... தண்டனைய நிறைவேற்று...' என்று, பலரும் குரல் கொடுத்தனர்.
'சாமி... என்னை மன்னிச்சிடுங்க; என்னால் முடியாது...' என்று, கண்ணீர் மல்க, எல்லாரையும் பார்த்து, கையெடுத்து கும்பிட்டார்.
'என்ன முடியாதா... பஞ்சாயத்து தீர்ப்புக்கு கட்டுப்படலன்னா என்ன தண்டனைன்னு உனக்கு தெரியுமில்ல...' என்றார், பஞ்சாயத்து தலைவர் கோபமாக!
'நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் சரி, அதை ஏற்கிறேன்...' என்றார், கருப்பசாமி.
சரவணனுக்கு, எல்லாம் தான் எதிர்பார்த்தபடியே நடப்பது கண்டு, உள்ளுக்குள் மகிழ்ந்தான்.
அதன்பின், பஞ்சாயத்தார், கருப்பசாமியையும், அவர் மனைவியையும் ஊரை விட்டு விலக்கி வைக்க, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விட்டான், சரவணன்.
பெற்றோர், தன்னோடு வந்து தங்கியது, செல்வகுமாருக்கு ரொம்ப சந்தோஷம். அலுவலகத்துக்கு, 'லீவு' போட்டு, அவர்களுக்கு சென்னையை சுற்றி காண்பித்தார்.
கிராமத்தை விட்டு, வேறு எங்கும் சென்று அறியாத கருப்பசாமிக்கும், அவர் மனைவிக்கும் புதுப்புது இடங்களையும், மனிதர்களையும் பார்க்கும் போது, தாங்கள் ஏதோ புது உலகத்துக்குள் வந்து விட்ட மாதிரி தோன்றியது. உள்ளூர் கோவிலுக்குள் நுழைய முடியாதவர்களுக்கு பெரிய பெரிய கோவில்களுக்குள் சென்ற போது, ஏதோ சாப விமோசனம் கிடைத்த மாதிரி இருந்தது.
வெகு சீக்கிரம் கருப்பசாமியும் அவர் மனைவியும் சென்னைவாசிகளாகி விட்டனர். நினைத்த இடத்திற்கு, தாங்களே சென்று வருமளவுக்கு, சென்னை வழித்தடங்கள், அத்துபடியாகி விட்டன.
அச்சமயத்தில் தான், கருப்பசாமியை ஊருக்கு அழைத்து போக வந்திருந்தனர், அவர் ஊர்க்காரர்கள்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென, சரவணனுக்கும், செல்வகுமாருக்கும் தெரியவில்லை.
தன் தந்தையை தனியே அழைத்த சரவணன், ''அப்பா... தாத்தாவை ஏன் அனுப்பி வைக்கணும்... இனிமே, அந்தத் தொழிலை செய்ய இஷ்டமில்லன்னு சொல்லிட வேண்டியது தானே...''
''சொல்லலாம் தான்; ஆனா, அதில ஒரு சிக்கல் இருக்கு. 25 வருஷத்துக்கு முன், பக்கத்து ஊர்க்காரர் ஒருவர் வந்து, தாத்தாவுக்கு போட்டியா தொழில் செய்த போது, தாத்தா ஊர்ப்பஞ்சாயத்தில் முறையிட்டார்; பரம்பரை பரம்பரையாக சொந்த ஊர்ல, நம்ம குடும்பம் இத்தொழிலை செய்து வந்த காரணத்தால், வெளியூர் நபருக்கு, தொழில் செய்யும் உரிமை மறுக்கப்பட்டது; அதனால தான் சொல்றேன்... முன்னறிவிப்பு இன்றி, சட்டென இதிலிருந்து விலகிட முடியாது,'' என்றார்.
''அப்படின்னா, தாத்தாவுக்கு பதில், வேறு யாரையாவது ஏற்பாடு செய்தால்...''
''பழைய ஆட்களை தவிர, இப்ப இந்த தொழிலை செய்ய யாரும் முன் வர்றதில்ல; இதுல, மாற்று ஆளுக்கு, எங்கே போறது...''
யோசிக்க யோசிக்க, சரவணுக்கு தலைவலியும், குழப்பமும் தான் மிஞ்சியது.
அப்போது, ஆட்டோவிலிருந்து, பட்டு வேட்டி, சட்டை அணிந்து, இடது கையில், தங்க நிற கடிகாரம், வலது கைவிரல்களில் ஜொலிக்கும் நவரத்தின கற்கள் பதித்த மோதிரத்தோடும் ஒருவர் இறங்கினார். நெற்றியில், 'பளிச்'சென்று பூசப்பட்ட திருநீறும், சந்தனமும், அவர் முகத்திற்கு தெய்வீக களையை கொடுத்தது. அவரின் பின், பட்டுப்புடவையில், அவர் மனைவி, அர்ச்சனை தட்டுடன் வந்தாள்.
வேலையாள் எதிர்கொண்டு, அர்ச்சனை தட்டை வாங்கினார்.
வாசலில், தங்கள் விலையுயர்ந்த காலணிகளை கழற்றி, வீட்டுக்குள் நுழைந்த அவர்களை பார்த்த, நமச்சிவாயமும், சங்கர பாண்டியனும் பிரமித்து போயினர்.
அவர்களது மன திரையில், வியர்வையில் நனைந்த அழுக்கு வேட்டி இடுப்பில் இருக்க, எண்ணெய் அறியாத பரட்டை தலையோடும், சட்டை இல்லாமல், கறுத்து, நலிந்த மேனியோடும், அக்குளில் துண்டை இடுக்கியபடி, எல்லாருக்கும், பணிவோடு கும்பிடு போடும், செருப்பு அணியாத, கருப்பசாமியின் பழைய உருவம், ஒரு கணம் தோன்றி, மறைந்தது.
''ஐயா நீங்களா... எப்போ வந்தீங்க... ஊர்ல எல்லாரும் நல்ல இருக்காங்களா...'' என்று ஆவலுடன் கேட்ட கருப்பசாமி, வேலையாளை அழைத்து, ''ஓடிப்போய் பக்கத்து கடையில் ரெண்டு கூல் டிரிங்ஸ் வாங்கிட்டு வா...'' என்றார்.
அவர்கள் பதில் சொல்லாமல் தன்னையே உற்றுப் பார்ப்பதைக் கண்டு, வெட்கத்தில், நெளிந்தபடி, ''கொஞ்சம் இருங்கய்யா... இந்த துணிமணிகளை கழற்றிப் போட்டுட்டு வர்றேன்,'' என்று சொல்லி, வீட்டுக்குள் சென்றார்.
சிறிது நேரத்தில் எளிமையான தோற்றத்தில் வந்தவர், அவர்களை நோக்கி, ''பஞ்சாயத்து தலைவர் என்னை அழைச்சுட்டு வரச் சொன்னாரா...'' என்று, ஆர்வத்தோடு கேட்டதும், இருவரும் நெகிழ்ந்து போயினர்.
சென்னைக்கு வந்து விட்ட போதும், கருப்பசாமியின் இயல்பு கொஞ்சங் கூட மாறவில்லை; அதே பணிவு, மரியாதை, சிறிதும் கர்வம் இல்லாத வெகுளித்தன்மை. 'திடீர் வசதி வாய்ப்புகள் கருப்பசாமிக்குள், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தல...' என்பதை அறிந்ததும், அவர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
கொஞ்ச நேரத்திற்கு முன், ஆட்டோவில் வந்து இறங்கிய கருப்பசாமியின் உருவமே, அவர்களின் கண்களில் நிலைத்து நின்றது.
'இப்படியொரு, புது அவதாரம் எடுத்து இருக்கும் கருப்பசாமியை மீண்டும் கிராமத்துக்கு அழைத்துச் செல்வதா...' என்று தமக்குள் யோசித்தனர்; மனதில் உறுத்தல் ஏற்பட்டது.
''சேச்சே... நாங்க வேறொரு வேலையா வந்தோம்; அப்படியே, உன்னையும் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம்,'' சட்டென சொன்னார், நமச்சிவாயம்.
அச்சமயம், வேலையாள் கூல் டிரிங்க்ஸ் வாங்கி வர, அதை வாங்குவதற்காக எழுந்து சென்றார், கருப்பசாமி.
அந்த இடைவெளியில், ''பஞ்சாயத்து தலைவருக்கு, என்ன பதில் சொல்றது...'' என்று, தாழ்ந்த குரலில் கேட்டார், சங்கரபாண்டியன்.
''அவர் கொடுத்த முகவரியில் யாரும் இல்ல; வீடு மாறிட்டாங்கன்னு சொல்லி விட வேண்டியது தான்,'' என்றார், நமட்டுச் சிரிப்புடன், நமச்சிவாயம்!
அதைக் கேட்ட சரவணனும், செல்வகுமாரும் 'அப்பாடா...' என்று, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆ.முத்துக்கிருஷ்ணன்
வயது: 66, ஊர் : சென்னை. பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில், துணை மேலாளராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நிறைய படிப்பதும், எழுதுவதும், இவரது விருப்பம்.
