PUBLISHED ON : செப் 05, 2021

மருத்துவரிடம் சென்றால், எல்லாருக்கும் ஒரே விதமான மருந்துகளை, அவர் கொடுப்பது இல்லை. அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப, மருந்தை தான் கொடுப்பார். அதுபோல, அவரவர் மனப் பக்குவத்திற்கு ஏற்ப, தெய்வம் அருள் புரிகிறது -என்பதை விளக்கும் கதையிது:
கண்ணன் எனும் வியாபாரி, யார் என்ன கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பார். அவரைப் பொறுத்தவரை, எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
'நம் கையில் நிறையப் பணம் இருந்தால், இன்னும் நிறையப் பேருக்கு தானம் செய்யலாமே...' என எண்ணினார், கண்ணன்.
நல்லவர் நினைப்பைத் தெய்வம் முடித்து வைக்காமல் போகுமா?
அடியார் வடிவில் கண்ணன் முன் தோன்றினார், இறைவன்.
'கண்ணா... நீ செய்யும் தர்மத்தின் பலனாகத்தான், உன் முன் தோன்றியுள்ளேன். நீ இன்னும் நிறைய தான,- தர்மம் செய்ய, நான் உதவ முடியும்.
'தினமும் காலையில் என் தலையில், ஓர் அடி வை. நான் மயக்கம் போட்டு விழுந்து, தங்கமாக மாறுவேன். நீ அதை எடுத்து தான,- தர்மம் செய்யலாம். நான் மறுநாள் உயிருடன் வந்து விடுவேன்...' என்றார்.
மறுத்தார், கண்ணன்.
அடியாராக வந்த தெய்வமோ வற்புறுத்தி, கண்ணனைச் சம்மதிக்க வைத்தது. அதன்படி, அடியாரின் தலையில் ஓர் அடி வைத்தார். அடியாரும், தாம் ஏற்கனவே சொன்னதைப் போல, மயங்கி விழுந்து, தங்கமாக மாறினார்.
இருந்தாலும், கண்ணன் மனது நிலைகொள்ளவில்லை. மறுநாள், அந்த அடியாரை உயிருடன் பார்த்த பின் தான், திருப்தி அடைந்தார்.
இப்படியே தொடர்ந்து நடந்தது. பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தார்.
'ஆஹா... அடியார்களை தலையில் அடித்தால், அவர்கள் தங்கமாக மாறுவர் போலிருக்கு... நாம் அதை எடுத்து வைத்துக் கொள்ளலாம்...' என, பேராசை கொண்டார்.
ஊரிலுள்ள அடியார்களை எல்லாம் அழைத்து உணவிட்டார். எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும், அவர்களையெல்லாம் வரிசையாக உட்கார வைத்து, ஒரு பெரிய உலக்கையால் ஒவ்வொருவர் தலையிலும் அடிக்க ஆரம்பித்தார். விபரமறிந்த பலர் ஓடி விட்டனர்; சிலர் மட்டும் அடி வாங்கினர்.
பேராசை கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், தண்டனை பெற்றார். பக்குவம் பெற்ற கண்ணனோ, தெய்வ அருளால் தொடர்ந்து தான, தர்மங்கள் செய்து வந்தார்.மக்களை, நல்வழிப்படுத்தவே, முன்னோர் சொன்ன பழங்கதைகளில் ஒன்று இது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
சித்திரை, வைகாசியில், செண்பகப் பூவை முருகனுக்கு சாற்றினால், உணவிற்கு குறைவு ஏற்படாது.
