PUBLISHED ON : செப் 05, 2021

தனுஷுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி!
ஆரம்ப காலத்தில் இருந்தே, பல படங்களில் தனக்காக பின்னணி பாடியிருக்கிறார், நடிகர் விஜய். ஆனால், மற்ற நடிகர்களுக்காக விஜய், பின்னணி பாடியதில்லை. விஜய் போலவே, தனுஷும் தான் நடிக்கும் படங்களில், சில பாடல்களை தானே எழுதி, பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், 'விஜய், தற்போது நடித்து வரும், பீஸ்ட் படத்தில், அவருக்காக ஒரு பாடலை எழுதி, பின்னணி பாடப் போகிறேன். அதோடு, விஜயின் குரலுக்கேற்ப என் குரலை மாற்றி பாடவும் முயற்சி எடுக்கப் போகிறேன். இந்த படத்தில், விஜய்க்கு பாடல் எழுதி, பாடுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது...' என்கிறார், தனுஷ்.
சினிமா பொன்னையா
'யூத் இமேஜை' கட்டிக்காக்கும், வரலட்சுமி!
குணசித்ர வேடங்களாக நடித்து வரும், வரலட்சுமியை, பெரும்பாலும் மெச்சூரிட்டியாக காண்பித்து, வயதான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர், இயக்குனர்கள். அதனால், அந்த, 'இமேஜை' மாற்ற வேண்டும் என்பதற்காக, தன், 'சோஷியல் மீடியா'வில், 'ஷாட்ஸ், டீ- - சர்ட்' அணிந்த, 'செம ஹாட்' புகைப்படங்களை, 'அப்டேட்' கொடுத்து, தன் இளமையான, 'இமேஜை' கட்டிக்காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், வரலட்சுமி. அதோடு, ரசிகர்கள் கேட்கும், 'கிளுகிளு' கேள்விகளுக்கும், 'கிக்'கான பதில்களை கொடுத்து, தெறிக்க விடுகிறார்.
— எலீசா
ராஷ்மிகாவுக்கு, 'ஷாக்' கொடுத்த, பூஜா ஹெக்டே!
தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையான, ராஷ்மிகா மந்தனா, கோலிவுட்டிலும் கொடி நாட்ட வந்தார். ஆனால், நடித்த முதல் படமே, 'அவுட்' ஆனதால், யாரும் கண்டு கொள்ளவில்லை. அதையடுத்து, இப்போது பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்துள்ளார்.
ஆனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கோலிவுட், டோலிவுட்டில் உள்ள முன்வரிசை, 'ஹீரோ'களின் படங்களை மின்னல் வேகத்தில் தட்டித்துாக்கி, தற்போது, தென் மாநில சினிமாவின் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்து விட்டார், பூஜா ஹெக்டே. குறிப்பாக, டோலிவுட்டில், ராஷ்மிகாவின் நம்பர்- ஒன் இடத்தை சைக்கிள் கேப்பில், 'கேட்ச்' செய்து, அவருக்கு பலத்த, 'ஷாக்' கொடுத்து விட்டார். கரும்பு உள்ள போதே, ஆலை கட்டிக்கொள்!
— எலீசா
இயக்குனர்களை திருப்பி அனுப்பும், அரவிந்த்சாமி!
'செகன்ட் இன்னிங்சில்' வில்லனாக, 'என்ட்ரி' கொடுத்து, தன், 'சாக்லேட் ஹீரோ இமேஜை' மாற்றிக் கொண்ட, அரவிந்த்சாமி, தற்போது, தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டும் கதைகளில் ஆர்வத்தை திருப்பியிருக்கிறார். குறிப்பாக, 'கெட் - அப்'பை பெரிய அளவில் மாற்றி, தன் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று, அதற்கேற்ற கதைகளை தேடுகிறார். அதனால், மீண்டும், 'ரொமான்ஸ்' கதைகளுடன் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம், 'இனிமேல் நான், 'டூயட்' பாடினால், என்னை ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனரோ இல்லையோ, என் பசங்களே கிண்டல் செய்வர். உங்களை மாதிரி இயக்குனர்கள் மட்டுமே, 50 வயதுக்கு பிறகும், எங்களை, 'ரொமான்டிக் ஹீரோ'வாகவே ஏன் பார்க்கிறீர்கள்...' என்று சொல்லி, திருப்பி அனுப்பி விடுகிறார், அரவிந்த்சாமி.
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
நடிகர் திலகத்தின் பேரன் என்ற பெருமையோடு கலைத்துறைக்கு வந்த, கும்கி நடிகரின் மார்க்கெட் சரிந்து கிடக்கிறது. அதனால், 'நெகடீவ் ரோல்'களில் நடித்து, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளுமாறு சிலர் கூறுகின்றனர். 'அப்படி நடிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், 'ஒரு மெகா சினிமா குடும்பத்தில் இருந்து வந்த நடிகர், 'ஹீரோ'வாக ஜெயிக்க முடியாமல் இப்படி சோடை போய் விட்டாரே...' என்று மற்றவர்கள் விமர்சிப்பர். அதனால், 'ஹீரோ' வாய்ப்பு இல்லை என்பதற்காக வில்லனாக நடித்து, குடும்ப இமேஜை கெடுத்துக் கொள்ள மாட்டேன்...' என்று, தனக்கு, 'அட்வைஸ்' கொடுத்த அபிமானிகளிடத்தில் கூறி விட்டார், பெரிய குடும்பத்து வாரிசு.
இரு நண்பர்கள்...
'டேய் விக்ரம்... இன்னும் எத்தனை நாளைக்கு சும்மாவே இருக்கிறது... படிச்ச படிப்பு வீணாக்கலாமா? ஏதாவது ஒரு, 'ஸ்டார்ட் - அப்' கம்பெனியாவது துவங்கி நடத்தலாம்டா...'
'போடா இவனே... என் குடும்பமே பிசினஸ் குடும்பம்டா... ஏழெட்டு தொழில்களில் ஈடுபட்டு, சமூகத்துல கவுரவமா வாழ்ந்துட்டு வர்றோம். எனக்கு வேலை இல்லேங்கிறதுக்காக, புதுசா தொழில் துவங்கி நடத்தினா, என் குடும்ப பெருமையை நானே குலைத்து விடுவது போல் ஆகாதா... எனக்கு இன்னும் பொறுப்பு வரட்டும்ன்னு என்னை சும்மா விட்டு வச்சிருக்காங்க. காலம் கனியும்போது, நான் யார்ன்னு நிரூபிப்பேன்...' என்றான், விக்ரம்.
சினி துளிகள்!
* குண்டு நடிகை என்று அனைவராலும் கிண்டல் செய்யப்பட்டு வந்த காமெடி நடிகை, வித்யூலேகா, தற்போது, 20 கிலோ எடையை குறைத்திருப்பவர், 'ஹீரோயினி ரேஞ்சு'க்கு ஒரு, 'போட்டோ ஷூட்' நடத்தி, அசத்தியுள்ளார்.
* தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், 'மல்டி ஹீரோ' கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார், விக்ரம் பிரபு.
* ஆர்யா, விஜய்சேதுபதியைத் தொடர்ந்து, ஜெய்யும், சுந்தர்.சி நாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!
