sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஒரு மகன் சிங்கப்பூர் போகிறான்!

ஒரு மகன் சிங்கப்பூர் போகிறான்!

ஒரு மகன் சிங்கப்பூர் போகிறான்!


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சைக்கிளை உருட்டியபடி, அந்த பெரிய வீட்டை கடந்து செல்லும் போது,''ரவி...'' என்று, ஒரு அதிகார குரல்! நிமிர்ந்தால், வீட்டு வாசலில், அருணின் அப்பா நின்றிருந்தார்.

''என்ன மாமா?''

''உள்ள வா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.''

சைக்கிளை ஓரங்கட்டி, உள்ளே நுழைந்தேன். நாற்காலியில் உட்கார சொன்னவர், ''உன் சினேகிதன், என்ன காரியம் செய்துகிட்டிருக்கான் தெரியுமா...'' என்றார்.

''ஏன் மாமா என்னாச்சு... அவன பாத்து, ரெண்டு நாளாச்சே...'' என்றேன்.

''கடைசியா பாத்தப்ப, என்ன பேசினான்?''

''பாஸ்போர்ட் ஆபிசுக்கு, அவசரமா போய்கிட்டிருக்கேன்னு சொல்லிட்டு, நிக்காம, 'பைக்'ல பறந்துட்டான்.''

''எதுக்கு, அவனுக்கு பாஸ்போர்ட்?''

''என்ன மாமா... தெரியாதவர் மாதிரி கேட்கறிங்க; பாஸ்போர்ட் எதுக்கு எடுப்பாங்க; வெளிநாடு போக தான்.''

''எதுக்கு வெளிநாடு போகணும்?''

''அதை, நீங்க அவன் கிட்டதான் கேட்கணும்...'' என்று சொல்லும் போதே, அறைக்குள் இருந்து வெளியே வந்த அருணின் அம்மா, ''ஏன் தம்பி... நீயாவது, அவனுக்கு எடுத்து சொல்லக் கூடாதா... அவனுக்கு இங்க என்ன குறை... அரண்மனை மாதிரி வீடு; கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நில புலன்; இதுபோக, 'ரைஸ்' மில்; பழ மண்டின்னு, ஏழு தலைமுறைக்கு சொத்து குவிஞ்சு இருக்கும் போது, உட்கார்ந்து, வரவு செலவு கணக்கு பாத்துகிட்டிருந்தா போதாதா... எதுக்கு, உடம்பை வருத்தி சம்பாதிக்கணும்; அதுவும், வெளி நாட்டுக்கு போயி!

''மூணு வருஷ, 'கான்ட்ராக்'டாம்; கருவேப்பில மாதிரி, ஒண்ணப் பெத்து, கண்ணுக்குள்ள வச்சி வளர்த்துகிட்டிருக்கோம். ஒருநாளைக்கு அவன பாக்கலன்னாலே, உயிர் நடுங்கி, ஏங்கி போகுது. எதை பத்தியும் யோசிக்காம, 'திடுதிடுப்பு'ன்னு வெளிநாடு போகப் போறத சொல்றான்,'' என்றாள், குரல் உடைய!

''அவன் மாமனுக்கு, எங்கள விட, ரெண்டு மடங்கு சொத்து அதிகம்; ஒரே பெண். உனக்கு தெரியுமே... திலகா இவனுக்காகவே, பொறந்து வளர்ந்து வர்றவ. இவன் படிப்பு முடிஞ்சதும், நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்ன்னு பேச்சு. டிகிரி முடிக்கணும்ன்னான்; மேல் படிப்பு படிக்கணும்ன்னான்; அப்புறம், படிப்புக்கு ஏத்த வேலை பாக்கணும்ன்னான்; இப்ப, சம்பளம் போதல; வெளிநாடு போறேங்கறான்.

''சம்பந்தம் பேச, மாமங்காரன் வர்ற நேரம், இவன் வெளிநாடு கிளம்பினா, அவங்க என்ன நினைப்பாங்க... பையனுக்கு, பெண்ணை பிடிக்கல போலிருக்கு; கல்யாணத்த தவிர்க்க தான், படிப்பு, வேலைன்னு இழுத்தடிச்சு, இப்போ, ஒரேயடியா நாட்டை விட்டு ஓடப்பாக்கறான்னு, நினைப்பாங்களா இல்லயா... 'அவ கழுத்துல, மூணு முடிச்சு போட்டுட்டு போ'ன்னு சொன்னாலும், 'அதெல்லாம் வந்து பாத்துக்கறேன்'னு சொல்றான். இதபத்தி, உங்கிட்ட ஏதும் பேசினானா...'' என்று கேட்டார், அருணின் அப்பா.

''இல்லையே மாமா...''

''ரவி... நீ தான், அவனுக்கு ரொம்ப நெருக்கம்; எங்ககிட்ட பேச முடியாத சங்கதிகள, அவன் உன்கிட்ட சொல்ல வாய்ப்பிருக்கு; அவன், ஊரை விட்டு கிளம்பறதுக்கு, நிஜமான காரணம் என்னன்னு நீ தான் கேட்டுச் சொல்லணும்... அவனுக்கு இங்க என்ன குறைன்னு தெரிஞ்சா, அதை தீர்த்து வச்சு, பயணத்த நிறுத்திடலாம்,'' என்றார், வேண்டுகோளுடன்!

அவர் சொன்னது உண்மை தான்; அருண், பணக்காரனாக இருந்தாலும், அவன் நெருக்கமாக பழகுவது, இந்த ஏழை சைக்கிள், 'வாலா'விடமே! அவனுக்கும், எனக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். பணத்தில் மட்டுமல்ல, படிப்பிலும் அப்படித்தான். அவன் மேல் படிப்பு முடிச்சிருக்கான்; நான், 10வது பெயில். இதெல்லாம், எங்கள் நட்புக்கு தடையாக இருந்ததில்லை.

இந்த நிமிஷம் வரை, அந்த குபேரனிடம், இந்த குசேலன் எதையும் எதிர்பார்த்ததில்லை. எங்களுக்கிடையே பொருள் ஊடாடததால் தான், நட்பு நீடிக்கிறதோ என்னமோ... ஆனால், எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்பவன், ஏன், வெளிநாடு போகும் விஷயத்தை மட்டும் சொல்லவில்லை என்று தெரியவில்லை.

'போதுமான அளவுக்கு சொத்து இருந்தும், ஏன் பணம் சம்பாதிக்க பறக்கணும்... அவர்கள் சந்தேகிப்பது போல், திலகாவை மணக்க விருப்பம் இல்லயா அல்லது குடும்பத்தில் ஏதும் பனிப்போரா...' என்று யோசித்தபடியே சைக்கிளை உருட்ட, தெய்வாதீனமாக, எதிரே பைக்கில் வந்தான், அருண். சைக்கிளை குறுக்கே நிறுத்தி, அவனை தடுத்து, ''ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...'' என்றேன்.

''நானும் தான்,'' என்றபடி, புங்கை மர நிழலுக்கு, தள்ளிக் கொண்டு போய், ''ரவி... அடுத்த வாரம் சிங்கப்பூர் போறேன்; எல்லா ஏற்பாடுகளும் தயார்,'' என்றான்.

''கேள்விப்பட்டேன்... அப்படி, என்ன தப்பு செய்துட்டு, சிங்கப்பூர்ல தலைமறைவாக பாக்கற?''

''கொஞ்சம் பணம் சம்பாதிச்சுட்டு வரப் போறேன்.''

''இதை, நான் நம்பணுமா... நீ எதுக்கு, ஏன் போறேன்னு தெரியும்... உனக்கு, திலகாவை பிடிக்கல; பெரியவங்க தொல்ல தாங்காம, 'எஸ்கேப்' ஆக பாக்கற சரியா?''

''இல்ல... திலகாவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு; அதனால தான் சிங்கப்பூர் போறேன்.''

''புரியல...''

''வெற்றின்னா என்னன்னு மேல் நாட்டு தொழிலதிபர் ஒருவரிடம் கேட்டாங்களாம்... 'தான் நேசித்தவளையே, கல்யாணம் செய்து, தன் முயற்சியால் உருவான தொழிற்சாலைக்கு அழைத்து போய், சுற்றி காட்டுவது தான்'னு அவர் சொன்னாராம்... அதுபோல, திலகாவை கல்யாணம் செய்து, என் சொந்த சம்பாத்தியத்தில், குறைந்தபட்சம், ஒரு தோட்டத்தையாவது வாங்கிப் போட்டு, அதை சுத்தி காட்ட போறேன். இங்கே, கிடைக்கிற சம்பளத்தில், வீடு வாங்குறதுக்குள்ள வாழ்நாளே முடிஞ்சிரும். ஆனால், இந்த, 'கான்ட்ராக்ட்'ல, மூணு வருஷம் போதும்... தேவையான பணம் கிடைச்சுடும்,'' என்றான்.

''கையில வெண்ணெய வச்சுகிட்டு, நெய்க்கு அலைவானேன்... அந்த மேல் நாட்டு தொழிலதிபருக்கு, அவங்க அப்பா ஏதும் சேர்த்து வச்சிருக்க மாட்டாரு; அதனால, கஷ்டப்பட்டு பாடுபட்டு, ஒரு, 'லேத்'தை வச்சு, காதலிக்கு, தொழிற்சாலைன்னு சொல்லி, 'புருடா' விட்டிருப்பாரு. உனக் கென்னடா தலையெழுத்து... இங்க தான், பணம் கொட்டிக் கிடக்குதே... பணத்தோட்டமே போடலாமே... பூந்தோட்டம் போடணும்ன்னு கேட்டால், ஒரு, 10 லட்சம் ரூபா கொடுக்க மாட்டாங்களா என்ன... அவங்க என்ன கொடுக்கறது... அத்தனையும் உனக்கு தானே, கஜானாவிலிருந்து எடுத்துக்க வேண்டியது தானே...''

''மடையா... மூணாம் மனுஷன் பேசுற மாதிரி பேசாத... பல வருஷம் என்னுடன் பழகிய நீயே இப்படி கேட்கலாமா... படிக்கிற காலத்திலேயே, என் தேவைக்கு, பகுதி நேர வேலை செய்து, சம்பாதிச்சவன் நான். சொந்த சம்பாத்தியத்தில் இருக்கிற சுகமும், கவுரவம் போல், வேறு எதிலும் வராது.

''என் முப்பாட்டன், அவர் காலத்தில் பாடுபட்டு, 10 ஏக்கர் நிலம் சம்பாதிச்சார்... அப்பா சம்பாதிச்ச நிலம் தான் இருக்கேன்னு, எங்க தாத்தா சும்மா இல்ல; அவர் தன் பங்குக்கு உழைச்சு, அரண்மனை போல், இந்த வீட்டை கட்டினார். முன்னோர் சம்பாதித்த வீடும், நிலமும் இருக்கேன்னு, என் அப்பா சும்மா உட்கார்ந்துடல. அவர் பாடுபட்டு, மண்டி, மில்லுன்னு உருவாக்கினார்; என் பங்குக்கு, நானும் எதையாவது சாதிக்க வேணாமா... வாரிசுங்கற முறையில, பெரியவங்க சம்பாதிச்சு வச்ச பணத்துல, உரிமை இருக்கலாம்; ஆனால், பெருமை இருக்கா... 'நீ என்ன சம்பாதிச்சே'ன்னு நாளைக்கு, என் சந்ததி கேள்வி கேட்டா, பதில் சொல்லணுமில்லயா...

''அதக் கூட விடு; ஊரு என்ன சொல்லும்... 'இவன், என்னத்த சம்பாதிச்சு கிழிச்சான்; அப்பன், பாட்டன் சேர்த்து வச்சதுல, வயிறு வளர்க்கறான்'னு சொல்லுமா இல்லயா... 'குந்தித் தின்றால் குன்றும் குறையும்'ன்னு சொல்வாங்க... ஏழு தலைமுறைக்குன்னு சேர்த்த சொத்து, முதல் தலைமுறைக்கே பயன்படாம போன கதையெல்லாம், இங்க நடந்திருக்கு. சொத்துக்கள மட்டுமே நம்பி இருக்காம, உழைச்சு சம்பாதிக்கவும் பழகிகிட்டா, எதிர்காலத்துக்கு அது ஒரு பாதுகாப்பா இருக்கும். இதையெல்லாம், மனசில் வச்சுகிட்டு தான், சிங்கப்பூர் பயணம் போக நினைக்கறேன்,'' என்றான்.

''இதை, பெத்தவங்க கிட்ட சொல்லி, சமாதானப்படுத்திட்டு, அப்புறம் கிளம்ப வேண்டியது தானே...''

''சொல்லலன்னா நினைக்கிறே... அவங்க காதுல வாங்கினா தானே... வெளிநாடு போறேங்கறதுல, அவங்களுக்கு கலவரம்... பாசம், பயம் அவங்கள தடுக்குது. பணத்தோடு, பணம் சேர்க்கறதில்ல என் ஆசை; அதற்கு பின்னால் இருக்கிற உணர்வு புரியல, என்ன செய்யட்டும்...'' என்று அவன் கேள்விக்கு, ''பயணத்துக்கு தயாராக வேண்டியது தான்,'' என்று, அப்பாவின் குரல் கேட்டது.

திரும்பி பார்க்க, அருணின் அப்பாவும், திலகாவின் அப்பாவும், ஒரு சேர நின்றிருந்தனர்.

''தம்பி... உன் சுய கவுரவம், உன் ஆசை இரண்டுமே புரிஞ்சு போச்சு; பெரியவங்க சம்பாதனையில், உட்கார்ந்து தின்பதில், சுகம் இருக்கலாம்; பெருமை இல்ல. சொந்த சம்பாத்தியம் தான் கவுரவம்ன்னு நினைக்கற பாரு, அது எனக்கு பிடிச்சிருக்கு... நீ, தாராளமா வெளிநாடு போய் வா... இத்தனை வருஷம் உனக்காக காத்திருந்த என் பொண்ணு, இன்னும் மூணு வருஷம் காத்திருக்க மாட்டாளா என்ன...'' என்றார் திலகாவின் அப்பா.

அருண் மனசுக்குள், சிங்கப்பூர் போகும், 'ப்ளேனின்' சத்தம் கேட்பதை, என்னால் உணர முடிந்தது. அவன் தோளில் தட்டிக் கொடுத்து, வாழ்த்தி, சைக்கிளை தள்ளிக் கொண்டு நடந்தேன். அவனும், பின்தொடர்ந்து வந்து, ''ரவி... நான் பெத்தவங்கள, திலகாவை மட்டும் பிரிஞ்சு போகலடா... உன்னையும் தான்,'' என்று, கண்கலங்கி, நெகிழ வைத்தான்.

''கவலைப்படாம சிங்கப்பூர் புறப்படு அருண்... என்னை பாக்கணும்ன்னா, ஒரு,'மிஸ்டு கால்' குடு. அடுத்த நிமிஷம், நான் அங்கே இருப்பேன்; என்ன பாக்கற... என்கிட்ட தான் சைக்கிள் இருக்கே,'' என்றேன்.

அவன் அழகான புன்னகை காட்டி, விடை பெற்றான்.

படுதலம் சுகுமாரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us