தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சன்னிதியில் புகுந்த ஆன்மா!

சன்னிதியில் புகுந்த ஆன்மா!

சன்னிதியில் புகுந்த ஆன்மா!


PUBLISHED ON : ஜூன் 28, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகப்பட்டினத்தில், 260 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது:

அம்பலவாணர் - சிவகாம சுந்தரி தம்பதியருக்கு, வைகாசி விசாகத்தன்று, ஆண் குழந்தை ஒன்று அவதரித்தது. அழகுமுத்து என, பெயரிட்டனர்.

நாகப்பட்டினம், தெற்கு தெருவில் உள்ள குமரகோவில் எனும், மெய்கண்ட வேலாயுதர் கோவிலில், மெய்க்காவலராக வேலை பார்த்து வந்தார், அம்பலவாணர்.

சிறுவயது முதலே, நோய் வாய்ப்பட்டிருந்த, அழகுமுத்து, கல்வி கற்கவில்லை. ஆனால், கல்வியின் பயன் நல்லொழுக்கம் என்பதற்கு ஏற்ப, அதில் தலைசிறந்து விளங்கினார். சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை, மனதிற்குள்ளாகவே உருவேற்றி வந்தார்.

நாளடைவில், தந்தையார் பார்த்து வந்த மெய்க்காவலர் வேலை, அழகுமுத்துவிற்கு கிடைத்தது. இரவு வழிபாடு முடிந்து, பிரசாதம் பெற்று, உண்டபிறகே வீடு திரும்புவார்.

ஒருநாள், குளிர் மிகுதியாலும், நோய் தொல்லையாலும், பசியின் கொடுமையாலும், மனம் நொந்த அழகுமுத்து, வாகனங்கள் வைக்கும் இடத்தில் படுத்து உறங்கி விட்டார்.

இரவு பூஜை முடிந்து, பிரசாதம் கொடுப்பதற்காக அழகுமுத்துவை தேடிய குருக்கள், அவரை காணாமல், வீட்டிற்கு போய் விட்டதாக எண்ணி, கோவிலைப் பூட்டி கிளம்பி விட்டனர்.

நள்ளிரவு தாண்டியது. விழித்தெழுந்தார், அழகுமுத்து. நடந்ததைப் புரிந்து கொண்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. மறுபடியும் படுத்தவர், துாங்கி விட்டார்.

சற்று நேரத்தில், மடப்பள்ளி பணியாளர் வடிவில், பிரசாத தட்டோடு வந்து, அழகுமுத்துவை எழுப்பி, அவருக்கு உணவளித்தார், முருகப்பெருமான்.

ஆர்வத்தோடு அதை உண்ட அழகுமுத்து, மறுபடியும் படுத்து உறங்கி விட்டார். அவரின் கனவில் காட்சியளித்த, முருகன், 'அன்பனே, அழகுமுத்து... எம் மீது பாடல்கள் பாடுவாயாக...' என்று உத்தரவிட்டார்.

'ஐயா, ஆறுமுகா... படிப்பறிவு இல்லாத அடியேன், உன்னை எப்படி பாடுவது...' என, தழு தழுத்தார்.

'பாடுவாய்...' என்று அருளியபடி மறைந்தார், முருகப்பெருமான்.

கனவு கலைந்தது. அழகுமுத்துவுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவரை அறியாமலே பாடத் துவங்கினார். இதற்குள் பொழுது விடிந்தது.

கோவில் கதவுகளைத் திறந்து, உள்ளே வந்த குருக்கள் முதலானோர், அழகுமுத்துவிடம் விசாரித்து, நடந்ததை அறிந்து கொண்டனர். நோய் நீங்கி, பளபளத்த திருமேனியோடு பைந்தமிழில் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அழகுமுத்துவுக்கு, 'அழகு முத்து புலவர்' என, பெயர் சூட்டினர்.

அதன்பின், நாகையை விட்டுப் புறப்பட்ட, அழகுமுத்து, சிவத்தல யாத்திரை மேற்கொண்டார்.

காசி சென்று திரும்பியவர், சீர்காழியில் ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார். சித்திரை சதயத் திருநாளன்று, தன் உடம்பை விட்டு, ஆறுமுகன் திருவடிகளை அடைந்தார்.

அழகுமுத்து, தன் உடம்பை உகுத்த அதே வேளையில், நாகப்பட்டினம், தெற்கு தெரு, மெய்கண்ட வேலாயுதர் கோவிலில், மாலை, வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அங்கே கருவறையில் நுழைந்தார், அழகுமுத்து. கந்தன் திருவடிகளில் கலந்து மறைந்தார்; அனைவரும் திகைத்தனர்.

சன்னிதியில் அழகுமுத்து புகுந்து மறைந்த அதேவேளையில், சீர்காழியில் சித்தி அடைந்ததாக தகவல் கிடைத்தது.

அழகுமுத்துவுக்கு நோய் நீக்கி, அருள் வழங்கியதைப் போல, நமக்கும் நோய் நீக்கி, அருள் புரியுமாறு வேண்டுவோம்.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us