தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆடி போற்றுதும்!

ஆடி போற்றுதும்!

ஆடி போற்றுதும்!


PUBLISHED ON : ஜூலை 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 17, ஆடி மாத பிறப்பு

ஆடி மாதத்தை, அம்மனுக்கு உரிய மாதமாக கொண்டாடுகிறோம்.

பொதுவாக, அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள், அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் துவங்கியது.

அந்த காலத்தில், அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்து, கொத்து கொத்தாக மனித உயிர்களை பலி வாங்கும். அது எப்படி வருகிறது, எப்படி பரவுகிறது என்று அறியாமலே, அப்பாவித்தனமாக உயிர்களை இழந்தனர், அன்றைய மக்கள். அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாக தோன்றியதுதான், அம்மன் வழிபாடு.

'அம்மை நோயிலிருந்து தங்களை காப்பாற்றுவது, மாரியம்மன் தான்; காலரா நோயிலிருந்து காப்பாற்றுவது, காளியம்மன் தான்...' என்று முடிவு செய்து, அதற்கான உருவை அமைத்து, வழிபாடு செய்து வேண்டிக் கொண்டனர்.

காளியம்மன், மாரியம்மன் என்று துவங்கி, பிறகு, துர்க்கையம்மன், நாகாத்தம்மன், வேம்புலியம்மன், பச்சையம்மன், புலியீஸ்வரியம்மன் என, ஆடி மாதத்தில், அம்மன் வழிபாடு தொடர்ந்தது. அதிலும், விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில், உற்சவங்களை நடத்தினர்.

சித்திரையில் அறுவடை முடிந்து, வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழை தொழிலாளர்கள், ஆடியில் அது தீர்ந்து, உணவுக்கு தடுமாறுவர். பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. அந்த பஞ்சத்தை தீர்க்கவும், இந்த ஆடி மாத வழிபாடு உதவியிருக்கிறது.

அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ் தான். அந்த கூழ் கிடைக்காமல் பட்டினி கிடப்போருக்கு ஆடி மாதத்தில், கோவிலில் விழா வைத்து கூழ் ஊற்றினர்.

நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது.

மிகுந்த சத்துள்ள தானியம், கேழ்வரகு. கம்பு, குளிர்ச்சியை தரக்கூடியது. சத்தையும், குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில் தான் கூழ் காய்ச்சி ஊற்றினர். பஞ்சத்தை போக்குவதோடு, வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்கும்.

கூழுடன் கொடுக்கும் சின்ன வெங்காயம், மிகப்பெரிய மருத்துவ பலன்களை கொண்டது. அதேபோல், கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை மற்றும் மாங்காய் என, எல்லாமும் மருத்துவ குணங்களை கொண்ட பொருட்கள் தான்.

இப்படி சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களை கொண்ட உணவுதான் கூழும், கஞ்சியும். எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை கடைப் பிடித்திருக் கின்றனர், நம் முன்னோர்.

தமிழகத்தில், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளியில், அம்மன் கோவில்களில், புற்றுக்கு பால் தெளித்து, அம்மனை வழிபடுவர். ஆடி தபஸ், ஆடி தீமிதி, ஆடிப்பூரம் மற்றும் பதினெட்டாம் பெருக்கு போன்றவை, அம்மனுக்கு விசேஷமான நாட்களாகும்.

அன்றைய தினம், அம்பாளுக்கு மாவிளக்கு போடுவர். இல்லத்தரசிகள், குத்துவிளக்கு பூஜை செய்வர். துர்க்கைக்கு, எலுமிச்சை தீபம் ஏற்றுவர்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீஅபிராமி அந்தாதி பாடல்கள், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, பூஜை செய்தால், பெண்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

- பி. வைஷ்ணவி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us