PUBLISHED ON : அக் 06, 2013

*ஆர்.பாலசுப்ரமணியம், சுருளிபட்டி:எப்போதும் கஷ்டங்கள் என்னை துரத்துகின்றனவே...
பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்; அது இல்லாமல் இருப்பது தான், பல கஷ்டங்களுக்கும் காரணம்!
***
**பி.மகுடபதி, கடலூர்: ஒரு திறமையும் இல்லாமல், கர்வத்துடன் அலைபவர்கள் பற்றி...
இவர்களிடம் உள்ள அடிப்படை பிரச்னையே, தாழ்வு மனப்பான்மை. தம்மிடம் எந்தத் திறமையும் இல்லையே... எதைத் தொட்டாலும் கரியாகிறதே என்ற குறை! இதை மற்றவர்களிடம் மறைக்க, ஏன் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள, 'கர்வ' போர்வையை போர்த்தியபடி, அலைகின்றனர்!
***
*எஸ்.சின்னச்சாமி, கோட்டூர்: என்னுடைய கடமையாக எண்ணி, நல்ல காரியங்கள் செய்ய நினைக்கிறேன்... என்ன செய்யலாம்?
சுயநலமிகளே நிறைந்துள்ள உலகத்தில், உங்கள் நல்லெண்ணத்திற்கு பாராட்டுகள்! மனிதராக பிறந்துள்ள ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டியது, பிறரின் துக்கங்களைத் துடைத்துக் கொண்டே இருப்பதாகும்... இன்றே செயலில் இறங்குங்கள்!
***
*பி.சிவசந்தர், பாண்டிச்சேரி: 'ஆயிரத்து ஒரு இரவுகள்' என்ற, கதைகளை எழுதிய ஆசிரியர் யாருன்னு சொல்லுங்களேன்...
ஒரு கதாசிரியரும் தன்னுடையது என்று சொல்ல முடியாதது, 1001 இரவுகள் - ஒரு கதைத் தொகுப்பு! கி.பி.,6ம் நூற்றாண்டு முதல் கி.பி., 10 நூற்றாண்டு வரை, மக்களிடையே வழி வழியாக வந்த செவிவழி கதைகளே இவை! இவற்றில் அரபு கதைகள் மட்டுமல்லாமல், பிற நாட்டுக் கதைகளும் உள்ளன!
***
**அ.சந்திரசேகர், மயிலாப்பூர்: என் நண்பன் ஒருவன் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறான் என்பது மறைமுகமாகத் தெரிய வருகிறது. அவனுக்கு தொடர்ந்து உதவி செய்யலாமா?
நன்றி கெட்டு வருகிறான் என தெரிந்து உதவுவீர்களானால், பாம்புக்கு பால் வார்த்த கதை தான்! நல்ல பாம்பிற்கு யாராவது பால் கொடுத்து வளர்ப்பார்களா... ஜாக்கிரதையாய் இருங்கள்!
***
*என்.மதுசூதனன், அனுப்பானடி: சீக்கிரமாக, குறுக்கு வழியில் நான் புகழ் பெற ஆசைப்படுகிறேன்; இதற்கு என்ன செய்ய வேண்டும்?
எந்த விஷயத்திலும் நெகட்டிவ் அப்ரோச் எடுங்கள்; எதை எடுத்தாலும் மறுத்துப் பேசுங்கள். தமிழில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எதுவும் இல்லை... தமிழில் தரமான சினிமாவே இல்லை. இனி நான் எடுத்தால் தான் உண்டு; எழுதினால் தான் உண்டு என்றும், தமிழகத்தில் மனிதர்களே இல்லை என்றும் தத்துவம் பேசுங்கள்... புகழ் அடைந்து விடலாம். ஆனால், எவ்வளவு காலத்திற்கு அது நிலைத்து நிற்கும் என்பது எனக்குத் தெரியாது!
***
* கா.அமுதன், தேனி : நியாயம், நேர்மை, நீதி, கட்டுப்பாடு, ஒழுக்கம், கைச் சுத்தம், வாக்கு தவறாமை என்பதையெல்லாம் பின்பற்றி வாழ்பவன் வெற்றி பெறாமல், வாழ்வில் தோல்வியுற்று, மனமுடைந்து நிற்கிறான். லஞ்சம், மோசம், ஏமாற்றுதல், பொய் பேச்சு, கேப் மாறித்தனம் இவற்றை கொண்டு வாழ்பவன் வெற்றியடைந்து, சுகமாக, சந்தோஷமாக இருக் கிறான். இதன் அர்த்தம் என்ன? தத்துவம் பேசாமல், வீண்வாதம் இன்றி, 'பிராக்டி கலாக' பதில் கூறுங்கள்...
எது இருக்கோ, இல்லையோ... இரவில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வர வேண்டும்... 'சுகமாக, சந்தோஷமாக இருக்கிறான்...' என, நீங்கள் குறிப்பிடும் பேர்வழிகள், உண்மையாகவே சந்தோஷமாக இருக்க மாட்டார்கள்; தூக்கம் வரவழைக்க, 'ஸ்லீப்பிங் டோஸ்' எடுத்துக் கொள்வர். போலீஸ் எப்போது பிடிக்குமோ, இன்கம்டாக்சில் மாட்டிக் கொள்வோமோ என, பல பிரச்னைகள் மண்டையை குடைந்து கொண்டே இருக்கும். இது, உடல் உபாதைகளில் கொண்டு விடும். கொள்ளையடித்து சேர்த்த காசெல்லாம், கடைசியில் டாக்டரிடம் போய் சேரும்! நியாயமாக வாழ்பவன், வாழ்வில் தோல்வி அடைந்ததாக நினைத்துக் கொள்வது, வெறும் மனப்பிராந்திதான்!
***
