PUBLISHED ON : அக் 06, 2013

சமீப காலமாக, தேசிய மனித உரிமைக் கமிஷன் பற்றி, பத்திரிகைகளில், பக்கம், பக்கமா செய்தி வந்துகிட்டு இருக்கு...
அதன் பின் தான், பலருக்கு மனித உரிமைன்னா என்னான்னு தெரிய ஆரம்பித்து இருக்கு. மனித உரிமைக் கமிஷன்கிட்டே ஒரு, 'இன்ட்ரஸ்ட்டிங்' புகார் வந்திருக்கு...
அந்த புகார் இது தான்:
நாங்க ஹோமோக்கள் - ஓரினச் சேர்க்கை பிரியர்கள். எங்களில், ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும், கணவன் மனைவி போல் இருக்க, உரிமை உண்டு. நாங்க இப்படி இருக்கிறதை, உலகம் பூரா அங்கீகரிச்சிட்டாங்க. இந்தியாவுல மட்டும் தான், சட்டம் பேசறாங்க.
இந்திய மனோதத்துவ சொசைட்டி தான், எங்களை அங்கீகரிக்கணும். அவங்க கிட்டே மனு கொடுத்த போது, 'இதெல்லாம் இந்திய பாரம்பரியத்துக்கு கேடானது. இதை அங்கீகரிக்க, நம்ம சட்டத்துல இடமில்ல, இவங்க எல்லாம் மனோவியாதி பிடித்தவங்க; பைத்தியம்ன்னு தான் சர்ட்டிபிகேட் தர முடியும்...'ன்னு சொல்லிட்டாங்க.
ஹோமோக்களை, அமெரிக்க மனோதத்துவ சொசைட்டி, 1973லேயே அங்கீகரிச்சிடுச்சு. 1981ல், ஐக்கிய நாடுகள் சபையின், உலக சுகாதார நிறுவனமும், எங்களை ஏத்துக்கிட்டாங்க. அப்படி இருக்கும் போது, நாங்க இப்படி ஹோமோக்களா இருக்கிறதை, இந்தியாவில்
மட்டும் ஏன் ஒதுக்கணும், எங்களுக்கு என்ன குறை!
ஒரு ஆணும் - பெண்ணும் தான் திருமணம் செய்துக்கணுமா... ஆணை - ஆண், பெண்ணை - பெண் திருமணம் செஞ்சுக்க முடியாதா... 'பிள்ளை பெத்துக்க முடியாது'ன்னு சொல்வீங்க. அதபத்தி கவலையில்லே. வாழ விடுங்க...
நாங்க யாருக்கு தொந்தரவா இருக்கோம்?
— இப்படி, தன் புகாரில் வாதிடுகிறார் டில்லியைச் சேர்ந்த, இளைஞர் ஒருவர். இவர், ஒரு ஆண் நண்பனுடன், ஐந்து ஆண்டுகளாக, கணவன் - மனைவியாக இருக்காராம்...
சேச்சே... என்ன கொடுமைன்னு நினைக்கிறீங்கல்ல... நம்ம சமுதாயம் எந்த ரூட்டில போயிக்கிட்டு இருக்குன்னு தெரிய வேண்டாமா? அதான், எழுதினேன்.
***
கி.வா.ஜ., எழுதிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில்...
வால்மீகி ராமாயணத்தை, ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஊர்க்காரர்கள், கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். கம்பர், ஒரு ஓரத்தில் இருந்தபடி, அதைக் கேட்டு வந்தார். அவர், கவிச் சக்கரவர்த்தி ஆகாத காலம் அது.
கதையில், சீதா பிராட்டியை, ராவணன் தூக்கிச் செல்லும் கட்டம். ராவணன், ஒரு கையால், சீதையின் தலையையும், மற்றொரு கையால் காலையும் பற்றி, தூக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர் பாடியிருப்பதை, கதை சொல்பவர், விரிவாக எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு நாளும், ராமனது கதையை @கட்கும் மக்கள், தம் வீட்டுக்குப் போகும் போது, தாம் கேட்டவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே போவர். முறையாக விமர்சனம் செய்ய அவர்களுக்குத் தெரியாவிட்டாலும், எந்த, எந்த பகுதி அவர்கள் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றி பேசுவர். அவர்களுடைய பேச்சையும் கவனிப்பார் கம்பர்.
அன்றும், கதை முடிந்தவுடன், கேட்டவர்கள், போகும் போது, பேசிக் கொண்டது, கம்பர் காதில் விழுந்தது... 'ராவணன், சீதையை அப்படித் தூக்கிக் கொண்டு போனானே... பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக் கூடாதா... சீதையை, அவனால் அணுகவே முடியாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்...' என்று, அவர்கள் பேசிக் கொண்டு போயினர்; அவர்கள் ஆசை அது.
வால்மீகி காலத்துக்குப் பின், பல துறைகளில் மக்களின் மனோபாவம் மாறி விட்டது.
பல காலமாகவே, வால்மீகி ராமாயணத்தை கேட்டுக் கேட்டுச் சுவைத்தவர் கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். தமிழில் ராமாயணத்தைப் பாட வேண்டும் என்ற ஆசை, அவருக்கு உண்டாயிற்று.
சங்க காலத்தில் இருந்த ராமாயணம் வழக்கொழிந்து போயிற்று. அதற்கு பின் தோன்றிய, ஜைன ராமாயணமும், மக்களிடையே நிலைத்து நிற்கவில்லை. அதனால், ராம கதையை, தமிழ் காப்பியமாக அமைக்கும் ஆர்வம், அவரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
அவர் காலத்துக்கு முன், ராமன் பலருக்கு உபாசனா தெய்வமாகி விட்டான். தனியே ராமனுக்கு கோவில்கள் எழுந்தன. ஆதலில், அவனை தெய்வமாக, லட்சிய நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப் பாடத் துவங்கினார்.
பல இடங்களில், காலத்துக்கு ஏற்ற வகையில், கதையில், சில சிறு மாற்றங்களைச் செய்தார். தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில் பொருத்தினார். சீதையை நிலத்தோடு ராவணன் பெயர்த்து சென்றதாக எழுதினார்.
வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில், கைம்மை நோற்புடையவளாக வாழ்கிறாள். சீதையின் மனதை மாற்ற, மாயாசனகனைப் படைக்கிறான் ராவணன். இப்படிச் சில மாற்றங்களை அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி, ஆறு காண்டங்களையும் பாடினார்.
'சரி, எதை எடுத்துக் கொள்வது... எதை விடுவது...' மனம் குழம்ப, 'உன் அறிவுக்கு எட்டாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறாய்...' என, இன்னொரு மனம் கேட்க... 'உண்மை தானே!' என்றபடி, புத்தகத்தை மூடினேன்.
***
