
ஆர்.அம்பிகா, கவுண்டம்பாளையம்: தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தால், ஓய்வு என்று ஒன்று வேண்டுமே... உங்களது ஓய்வு அல்லது பொழுதுபோக்கு என்ன?
ஓய்வு, பொழுதுபோக்கு எல்லாமே என் வேலைதான்; என் வேலைகளில் விரும்பி ஈடுபடுபவதால் பொழுதுபோக்கு, ஓய்வு என்று வேறு ஏதும் இல்லை!
ஆர்.ருக்மாங்கதன், கோத்தகிரி: 'ஆயிரத்து ஒரு இரவுகள்' என்ற கதைகளை எழுதிய ஆசிரியர் யாருன்னு சொல்லுங்க சார்...
ஒரு கதையாசிரியரும் தன்னுடையது என்று சொல்ல முடியாதது, 1001 இரவுகள் கதைத் தொகுப்பு! கி.பி.,6ம் நூற்றாண்டு முதல், கி.பி., 10 நூற்றாண்டு வரை அரபு மக்களிடையே வழி வழியாக வந்த செவிவழிக் கதைகளே இவை! இவற்றில் அரபு கதைகள் மட்டுமல்லாமல், பல நாட்டுக் கதைகளும் கலந்து உள்ளன!
எஸ்.சதாசிவம்,மங்கலம்பேட்டை: தமிழன், உ.பா., அருந்திவிட்டால், ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விடுகிறான்; இங்கிலீஷ்காரன் உ.பா., அருந்தினால் என்ன மொழியில் பேசுவான்?
தெரியலையே... கேட்டுச் சொல்றேன்; இருந்தாலும் உங்க ஆராய்ச்சியை எப்படி மெச்சறதுன்னே தெரியல!
வி.எஸ்.காசிநாதன், திருத்தங்கல்: என் முயற்சிகள் எதுவுமே எனக்கு வெற்றி தேடித் தருபவையாக இல்லையே?
மரவேலை செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டு பலகைகளை இணைக்க ஆணி அடிப்பர்; அதை உள்ளே இறக்க ஒரு அடியுடன் நின்று விடுகின்றனரா? அதுபோலத்தான் முயற்சிகள் இருக்க வேண்டும்!
க.மலர், கடாலடி: முன்னேற துடிப்பவனிடம் இருக்கக் கூடாத விஷயங்கள் எவை?
நேரத்தைப் பற்றிய அக்கறை இன்மை, நீண்ட தூக்கம், சோம்பேறித்தனம், ஒத்திப் போடுதல் - இவற்றில் எது இருந்தாலும் முன்னேறுவது கடினம்!
ஏ.ஜோசப், சாயல்குடி: எவ்வளவு நேரம் தூங்குவீர்கள்? உங்களுக்கு என்ன மாதிரியான கனவுகள் வரும்?
மதியம் கணிசமான நேரத்தையும் சேர்த்து ஆறு மணி நேரம் தூங்குவேன். யாருக்கும் துரோகம் செய்வதில்லை; எவரிடமும் சண்டை இல்லை; கடன் வாங்கவில்லை. அதனால், கனவுகளும் வருவதில்லை!
வெ.கோவிந்தமணி, காமராஜ்நகர்: பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர் எல்லாம் இப்போது குண்டு குண்டாக இருக்கின்றனரே...
உண்மைதான்! பள்ளி செல்லும் பிள்ளைகளில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குண்டாக இருக்கின்றனராம்! இது, கருவுற்று இருக்கும் தாய்மார்களுக்கு அலோபதி டாக்டர்கள் கொடுக்கும் கண்ட கண்ட மருந்துகளால் ஏற்படும் கோளாறு என்கின்றனர். அதுவும் போக, குளிர்பானங்கள், சாக்லேட், உருளை சிப்ஸ், சீஸ் போன்றவைகள் சமீபத்தில் படையெடுக்கும், 'குண்டு'க்கு காரணிகளாக அமைகின்றன.
வி.கோபால், திருநகர்: மன வலிமையில் உறுதியானவர்கள் ஆண்களா, பெண்களா?
சந்தேகமே இல்லாமல் பெண்கள் தான். குடிகாரக் கணவன், விட்டு விட்டு ஓடிப் போய்விடும் கணவன் போன்ற கேரக்டர்களை மன வலிமையாலேயே சமாளிக்கின்றனர். கணவன் இறந்து போனாலும், உடனே அடுத்ததை, ஆண்களைப் போலத் தேடுவதில்லை. தன் பிள்ளை, குட்டிகளுக்காக மன வலிமையுடன் தனித்தே நிற்கிறாள்; மன வலிமையால் உடல் வலிகள் பலவற்றையும் அவளே தாங்குகிறாள்.

