
''ஏய்... ஒரு முறை சொன்னா, வௌங்காது உனக்கு... நல்ல மாட்டுக்கு ஒரு சூடுடி.''கணவனின் சுடுசொல், 'சுர்'ரென்றது சங்கரிக்கு. தலை நிமிராமல், அவன் முன் இருந்த தட்டில், இட்லியை வைத்தாள். ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு, முந்தியில் விழுந்ததை பார்த்தான் மணி. அவனுக்கு மனசு சுரீரென்றது. 'இதுவரை ஒரு சொல் கேளாமல் வளர்ந்தவள்; கல்யாணம் முடிந்த சுவடு மாறுமுன், அவளுடன் இப்படி ஒரு பிணக்கு வேண்டுமா...' என்று நினைத்தவனுக்கு மனம் வாடியது. மனமில்லாமல் இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டான்.
'இவ என்னத்த பெருசா கேட்டுட்டா... அந்த விரிசல் விழுந்த பழைய கதவ மாத்துன்னு கேக்குறா. அவ்ளோ தானே' என்று நினைத்து, நேற்று தன் அப்பா மணியக்காரர், தென்னை ஓலையில் ஈர்க்குச்சி சீவிக் கொண்டிருந்த போது, மெல்ல பேச்சை துவங்கினான்.
'அப்பா... இந்த வாசக் கதவ மாத்திடலாம்ன்னு...'
மணியக்காரர் குரல் பிசிறடைந்திருந்தாலும், தெளிவாய் வந்து விழுந்தது. 'ஏன் தம்பி... நல்லாத்தான இருக்கு?'
தன் புது மனைவி அதை மாற்ற சொல்கிறாள் என்று, தந்தையிடம் சொல்ல அவனால் முடியவில்லை.
பாதி இட்லி தொண்டையிலேயே இருக்க, கை கழுவியவன் சுவரில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்தான். மணி, 8:32.
'இன்னிக்கு சீனியர் இன்ஜினியர் வேற வர்றாரு; சீக்கிரம் போகணும்...' என்று முணுமுணுத்தவாறு கிளம்ப முற்பட்டான்.
சங்கரி சலனமில்லாமல், அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவ்வப்போது மூக்குறிதலில் இருந்து அவள் அழுவது தெரிந்து, மணிக்கு மனசு வலித்தது. கல்யாணமான இந்த ரெண்டு மாசத்தில், தான் வேலைக்கு போகும் போது, வாசல் வரை வந்து வழியனுப்புவது அவளது வழக்கம்.
சட்டென்று திரும்பி, 'விடுவிடு'வென வெளியேறினான். ஏனோ அப்பாவின் மீது கொஞ்சம் கோபம் வந்தது.
'இந்த பழங்கதவுல என்ன பொக்கிஷமா பொதஞ்சு கெடக்கு?' மனசுக்குள் கறுவியபடி சைக்கிளை மிதித்தான்.
வாசலில், தென்னை மட்டை முடைந்தபடி இருந்தார் மணியக்காரர். மகனின் கால் சவுட்டுகளில் அவனின் கோபம் புரிந்தது. போகும்போது சொல்லிக் கொள்ளவில்லை.
அவர் பெருமூச்செறிந்தார்.
''மாமா,'' மருமகப் பெண்ணின் குரல் விளித்தது.
''ஏன் ஆச்சி?'' திரும்பாமலேயே குரல் கொடுத்தார்.
''சாப்புட வரீங்களா?''
''திண்ணையில வச்சுடும்மா,'' என்றார்.
மருமகளுக்கு தன் மேல் கோபமிருக்கும் என்று தெரியும். சங்கரியை ரொம்ப பிடிக்கும் மணியக்காரருக்கு. ஒத்த அறையும் இந்த சமையல்கட்டும் தான் அவர்களது வீடு; பின்புறம் பெரிய கொல்லை. சங்கரி வாழ்க்கைப்பட்டு வரும் போதே, தனியா ஒரு அறை கட்டிடணும்ன்னு தான் இருந்தார்.
கையிருப்பு போதவில்லை. மணியை கடன் வாங்க சொல்லும் எண்ணமில்லை அவருக்கு. மணிக்கு, இப்போ தான் மின் வாரியத்தில், லைன் மேன் உத்தியோகம் கிடைத்திருக்கிறது. பெண் வீட்டாரே வலிய தேடி வந்த கல்யாணம்.
அவர் மனைவி வெள்ளமுத்து, மணிக்கு, 22 வயதிருக்கும்போதே போய் சேர்ந்து விட்டாள். அவனுக்கென்று பெரிதாக சொத்து ஒன்றும் இவர் சேர்த்து வைத்து விடவில்லை. இந்த வீடும், கழுமலை வாய்க்கால் ஓரமாக, 152 சென்ட் நிலமும் தான் இருப்பு. அதுல சாகுபடி செய்வதற்கு சும்மா இருக்கலாம். பல நேரம் கடனில் இழுத்து விட்டுவிடும்.
மகனும், மருமகளும் சேர்ந்து வாழ ஏதுவாக, திண்ணைக்கு வந்து விட்டார்.
அப்பா திண்ணைக்கு வந்ததை, மணியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அப்பா மீது உள்ள பாசம் பாதி என்றாலும், ஊருக்கு தான் அதிகம் பயந்தான். 'இந்த பொண்ணுங்க என்னத்த தான் ஓதுவாளுங்களோ... அப்பன அதுக்குள்ளே திண்ணக்கி கொண்டு வந்துட்டான்...' என்று பேசுமே!
மாலையிலும் சங்கரியிடம் எந்த மாற்றமும் இல்லை. இரவு அப்பா காலுக்கு, நீலகிரி தைலம் தேய்த்து விடும்போது மெல்ல பேச்செடுத்தான். ''ஏங்கப்பா... நீங்க ஏன் இப்புடி திண்ணையில கெடக்கணும்... பின்னாடி கொஞ்சம் கல்லு, மண்ணு கொழச்சி பூசிட்டா, மேலே மொடஞ்ச மட்டையை போட்டு, கூர கட்டிடலாம்; ஒரு ரூமா போய்டுமில்ல,'' என்ற மணியை பார்க்காமலேயே, ''செய்யலாம்ய்யா,'' என்று அத்துடன் அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
காற்றில் வைத்த கற்பூரம் மாதிரி, புதுமணத் தம்பதியரின் பிணக்கு அதிக நேரம் நீடிக்கவில்லை. பொழுது சாயும் போதே, பிணக்கும் சாய்ந்து விட்டது. பொத்தல் விழுந்த கதவின் மீது, பழைய போர்வையைக் கட்டி தொங்கவிட்டான் மணி. புதுபெண்டாட்டியை ஆசையாக கட்டிக் கொள்ள சென்றவனின் காதுகளில் சங்கரியின் விசும்பல் சத்தம்தான் கேட்டது,
''ஏன் கண்ணு... ஏன் அழுவுற... வூட்டு ஞாபகம் வந்துடுச்சா?''
அவள், அவன் மார்பில் முகம் புதைத்தபடி, இல்லை என தலையாட்டினாள்.
''அப்புறம்?''
''நாங்க மூணு பொம்பளப் புள்ளங்க என்கிறதால எங்க அப்பா, வீட்டு பம்படியில, நாலாபக்கமும் சுவரெழுப்பி, மேல ஆஸ்பெஸ்டாஸ் போட்டு, குளிக்கிற ரூம் கட்டினாரு. ஆனா, அங்க கூட நான் மாராப்பு கட்டிக்கிட்டு தான் குளிப்பேன்,'' என்றாள். மணிக்கு பேச்சின் போக்கு புரிந்தது. தெரு விளக்கின் வெளிச்ச கீற்றை ஒருமுறை பார்த்தான். ''அதான் திரை போட்டுருக்குல்ல...'' என்றவனை முறைத்தாள் சங்கரி.
''மாமா கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு, திரையை காலைல கழட்டி வச்சிட்டு, ராத்திரி மாட்டிகிறது கேவலமா இருக்கு,'' என்றவள், ''இதுக்கு முன், இங்க திரையா தொங்குச்சி... என்ன நினைப்பாங்க? இது எதுக்குன்னு பெரியவங்களுக்கு புரியாதா... தம்பட்டம் அடிக்கணுமா... அந்த பாழா போன கதவ மாத்தி தொலைச்சா தான் என்ன?''
அவள் கேள்வியில், நியாயம் இருப்பதாக பட்டது. அப்படி என்ன கொட்டி கிடக்கிறது இந்த பழைய கதவில்? அப்பாவின் பிடிவாதத்தை நினைத்து கோபம் வந்தது. ஒரு முடிவுடன் தூங்கிப் போனான்.
வழக்கமாக, காலை, 5:00 மணிக்கு எழுந்து விடுவார் மணியக்காரர். கூச்சம் பார்க்காமல் வீட்டிற்கு முன், வீதியை பெருக்கி அள்ளுவார். இப்போதெல்லாம் மருமக பெண்ணே அந்த வேலையை செய்வதால், வாயில் வேப்பங்குச்சியுடன் கழுமலை வாய்க்கால் பக்கம் போய்விட்டு வருவார்.
அதே போல் இன்றும் சென்றவர், வாய்க்காலில் குளித்து விட்டு வீட்டுத் திண்ணையில் வந்து அமரும் போது பார்த்து விட்டார் அந்த பழைய போர்வையை!
மணி வேலைக்கு கிளம்பும் போது, ''தம்பி... ஆசாரிய பாத்தா வரச் சொல்லு; வீட்டு பொழக்கடைல பூவரசன் மரக்கிளை ஒண்ணு கெடக்கு; எழைச்சா, நல்ல கதவு செய்துடலாம்,''என்றார்.
மணிக்கு ஒரு பெரிய பிரச்னை தீர்ந்தது போலிருந்தது.
மதியமே ஆசாரி வந்து விட்டார். இரண்டு நாளில் கதவு இழைத்து தயார் செய்த ஆசாரி, ''மணியக்காரரே... நாள மறுநாள் வளர்பொற... அன்னிக்கே வாசக்கால் நட்டுடுவோம்...'' என்று சொன்னதை, பழைய கதவை பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் மணியக்காரர்.
மூன்றாவது நாள் கதவு பெயர்க்கப்படும் போது, மணியக்காரர் அங்கு இல்லை; வெளியே கிளம்பினார்.
மகனுக்கு ஏதோ உறுத்தியது. ''ஏம்பா... எங்க கிளம்பிட்டீங்க?''
''நீ இருந்து பாத்துக்க... கதவ ஒடச்சிபுடாதீங்க; பத்திரமா எடுத்து வையி,'' என்றார்.
வாசக்கால் நடும்போது வந்து விட்டார்.
''ஆச்சி... மஞ்சள் பூசி, பொட்டு வச்சி, நம்ம குல சாமி சீதாள மாரியம்மனை வேண்டிக்கிட்டு நடு தாயி,'' என்று மருமகளை நட சொன்னார்.
வாசக்கால் நட்டவுடன், ''அந்த பழைய கதவ அப்படியே திண்ணையிலேயே வச்சிட சொல்லு,''என்றார்.
அவர் தலைமாட்டருகே கதவு வைக்கப்பட்டது.
மாலை -
நடுக்காலுக்கு கற்பூரம் காண்பித்தாள் சங்கரி. அவள் முகத்தில் திருப்தியை கண்ட மணியக்காரருக்கு, சந்தோஷமாக இருந்தது.
இரவு, கோவில் ஆலமரத்து மேடையில் அமர்ந்திருந்த போது, ''பாவம்... அந்த புள்ள வாய் விட்டு சொல்ற விசயமா இது! ரெண்டு மூணு வாட்டி கதவ மாத்தணும்ன்னு சொன்னப்பவே எனக்கு புரிஞ்சிருக்கணும்,'' என்று, தான் நண்பர் மேலானல்லூராரிடம் புலம்பினார்.
''சரி விடுங்காணும்... இத போய் பெருசா பேசிக்கிட்டு. கூட்டு குடுத்தனத்துல, நாம எல்லாம் புள்ள பெத்துக்கலயா?'' என்றார்.
சிறிது நேரத்தில் மணியக்காரர் என்னவோ போல் முழித்தார். அவரின் முக மாற்றத்தைக் கண்ட மேலானல்லூரார், ''என்னங்காணும்... என்ன ஒரு மாதிரி மூஞ்சி வெளுருது?''என்று கேட்டார்.
சமாளித்துக் கொண்ட மணியக்காரர், ''ஒண்ணுமில்ல. மதியம், ஆச்சி, வாசக்காலு நடறதுக்கு, கொஞ்சம் தடபுடலா சமைச்சிடுச்சு. அதுதான், ஏப்பம் வராம எத்துது,''என்றார்.
மேலானல்லூராருக்கு கொஞ்சம் பயம் வந்து, ''நா வேணா வூடு வர வரவா?''என்று கேட்டார்.
''விடுய்யா... வூடுவரைக்கும் நடந்தா சரியா பூடும்,''என்று கூறி, மெல்ல எழுந்து நடந்தவரின் நெஞ்சில், ஏதோ உருள, வீடு வந்து சேர்ந்து, திண்ணையில் உட்கார்ந்தார். குண்டு பல்பை போடாமல், தலை மாட்டிலிருந்த சிம்னி விளக்கை ஏற்றினார்.
மணியக்காரருக்கு அயற்சியாக இருந்தது. அம்மா, அப்பா, மனைவி என்று பழக்கப்பட்ட விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக, அவர் வாழ்விலிருந்து காணாமல் போய் விட்டது. அம்மா உபயோகித்த ஆட்டுக்கல், ஓரமெல்லாம் மழுங்கி போய் இன்று திண்ணையோரம் கிடந்தது.
தலைமாட்டில் சாத்தியிருந்த பழங்கதவைப் பார்த்தார். அப்பா, இந்த பனந்தட்டி மாத்தி கதவைச் செஞ்சு மாட்டியது முதல், வீட்டின் மதிப்பு கூடி போனது. கதவோடு சேர்ந்து திண்ணையும் எழுப்பப்பட்டது. ஊர் பஞ்சாயத்து, கச்சேரின்னு எல்லாமே இந்த திண்ணையில் தான். இந்த கதவுதான், வீட்டின் முதல் அடையாளம்.
யாராவது வீட்டை தேடி விசாரித்துக் கொண்டு வந்தால், ஊர்க்காரர்கள் கூறும் அடையாளம், 'வாசலுல திண்ண கட்டி, பூண் வச்ச மரக்கதவு இருக்கும். அந்த வூடு தாங்க...' என்பர்.
சிம்னி விளக்கை தூக்கிப் பார்த்தார்.
கழட்டி வைத்த அந்த கதவு முழுவதும் அவர் பார்வை, ஓடியது.
அதன் மேல் செதுக்கப்பட்டிருந்த அந்த எழுத்துகள் அவருக்கு பரவசமூட்டியது. கத்தியால், தான் செதுக்கிய அந்த எழுத்துகள், 'ரஞ்சிதம் இல்லம்!'
அவர் அப்பாவுக்கு படிப்பு வாசமே கிடையாது; மணியக்காரர் மூலம் தான் படிப்பு வாசனையே, அவ்வீட்டிற்குள் வந்தது.
டவுனுக்கு, அப்பா கூட தர்மகர்த்தா வீட்டிற்கு போனபோது, வீட்டின் முகப்பில் சிமென்ட்டால், 'சுப்பிரமணியம் இல்லம்' என்று செதுக்கியிருந்ததைப் பார்த்தவர், திரும்பி வரும்போது அப்பாவிடம் கேட்டார்.
'நம்ம வீட்டு பேர் என்னாங்கப்பா?'
அப்பாவிற்கு உடனடியாக பதில் சொல்ல தெரியவில்லை.
'பாட்டி பேரை வச்சுக்குவோம்...' என்றார்.
மகன் கத்தியால் செதுக்குவதை, அப்பா விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தார். 'இதுல பாட்டி பேர் எதுய்யா?' என்று கேட்டார். முதல் வரியை சுட்டிக்காட்ட, அப்பா அதை தடவி, கண்ணில் ஒற்றிக் கொண்டது இப்போதும் நினைவுக்கு வந்தது.
'இன்னிக்கி தான்ய்யா அவங்க பேர எழுதி பாத்துருக்கிறேன்; இது வரைக்கும் கேட்டதோட சரி...' என்று அப்பா சொன்னதும், அன்று சிவாமிருதம் என்று அறியப்பட்ட மணியக்காரர், பூரித்துப் போனார்.
இன்று அந்த எழுத்துகள் வெளியே கிடக்கும் ஆட்டுக்கல்லை விட, மழுங்கி போயிருந்தது. 'ரஞ்சிதம் இல்லம்' என்ற பெயர், கதவில் மட்டும் தான் எழுதி இருந்தது. ஊர்காரர்களைப் பொறுத்தவரை அது, திண்ணவூடு! அந்த எழுத்துகள் தான், மணியக்காரருக்கு தன் அப்பாவின் அருகாமையை சம்பாதித்து கொடுத்தது.
அதன் பின்தான், 'கொடுக்கல், வாங்கல் எதுவானாலும் எழுதி வச்சிக்கணும்ய்யா...' என்பார் அப்பா. அப்பாவுக்கு எழுத போய், ஊருக்கே பத்திரமெழுதும் தொழிலாக ஆனது.
சிவாமிருதம், அந்த ஊருக்கு நாட்டாமையும் கிடையாது, மணியக்காரரும் கிடையாது. எழுத, படிக்க இருந்த ஒரே மனுஷன் சிவாமிருதம். அதனால், மரியாதையுடன் மணியக்காரர் என்றது ஊர்.
தானும், ஊரும் மறந்து விட்ட பெயரை, கதவின் குறுக்கு கட்டையில், ஆணியால் தான் எழுதிய, சிவமணி - சிவாமிருதம் மட்டும், கூவிக் கொண்டே இருந்தது.
மெல்ல எழுந்து, அந்த எழுத்துகளை தடவினார்.
'சிவமணி' என்ற பெயரை படித்த போது, கண்ணில் நீர் கட்டியது.
பதினைந்து வயது சிவமணி, மணியக்காரருக்கு மூத்தவன். ஒருநாள், கிணற்றில் குளிக்க, இருவரும் சென்றிருந்த போது, கிணற்றிற்குள் குதித்த அண்ணன் சிவமணி மூழ்கி செத்துப் போனான்.
அப்போது தான், மணியக்காரருக்கு முதன் முதலில் சாவு என்பதன் அர்த்தம் புரிந்தது. சற்று முன் வரை விளையாடிக் கொண்டிருந்தவன், இனி எழவே போவதில்லை என்பதை நம்ப, கடினமாக இருந்தது. சிவாமிருதத்துக்கு, சிவமணி அண்ணன் தான் எல்லாம். தென்னை ஈர்க்கில் சுருக்கு செய்து ஓணான் பிடிப்பது, மரமேறுவது, நீச்சல் என எல்லாம், சிவமணி கற்றுத் தந்தது தான். சிவமணியின் கையை பிடித்துக் கொண்டே தான் சுற்றுவார். சிம்னி விளக்கு நிழலில், சிவமணி சொல்லும் பேய்க்கதைகளை நடுக்கத்துடன் கேட்டுக் கொண்டிப்பார்.
அப்போது, போட்டோ பிடித்து வைக்கும் வழக்கம் குடும்பத்தில் இல்லாததால், அமாவாசைக்கு அமாவாசை, நடு வீட்டில் வட்டமாய் பூசிய மஞ்சளில், மூன்று குங்குமக் கோடும், பொட்டுமாகி போனான் சிவமணி.
சகோதரன் அற்ற தனிமை, தாயையும், தந்தையையும் இழந்த பின், இன்னும் அதிகம் உறைத்தது.
அவர்கள் வீட்டில் மேசை, நாற்காலின்னு எதுவும் இல்லை. அவருக்கென ஆழ பதிய இருந்த கல்வெட்டு, இந்த கதவு மட்டும் தான். மணியக்காரருக்கு வரைய தெரியாது; எழுத மட்டும் தான் தெரியும். அதனால், சிவமணி என்ற பெயரை கதவில் எழுதியவர். கூடவே தன் பெயரையும் சேர்த்துக் கொண்டார். என்னவோ அண்ணன் கூடவே இருப்பது போலிருந்தது அவருக்கு.
மணியக்காரருக்கு திருமணமாகி, மனைவி வெள்ளமுத்து வந்த போது தான், வீட்டிற்கு சந்தோஷமும் திரும்பி வந்தது. மாமனார் - மாமியாரை தலையில் வைத்து தாங்கினாள் வெள்ளமுத்து. அவர்கள் மேல் உள்ள பாசமா என்று தெரியாது; ஆனால், கணவன் முகம் வாட, பொறுக்க மாட்டாள்.
அவள் என்ன செய்கிறாள் என்று, அந்த கதவு சொல்லிவிடும். அரையாக சாத்தியிருந்தால், கொஞ்சம் கண்ணயர்ந்திருக்கிறாள். முழுவதுமாக சாத்தி இருந்தால் துணி மாற்றிக் கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம். மணியக்காரர் வெளியே போய் விட்டு, பொழுது சாய்ந்து வந்தால் அவர் வரும் வரை, கதவில் சாய்ந்தபடியே அமர்ந்திருப்பாள். அவள் மேல் அத்தனை காதலிருந்தது மணியக்காரருக்கு. ஆனால், பிள்ளை மட்டும் ஒன்று தான். இரண்டாம் கரு, பாதியில் கலைந்தது. அதன் பின், அவள் கரு தரிக்கவில்லை. ஆனால், புற்றுநோயில் போய் விட்டாள்.
கதவில் வட்டமாய் மஞ்சள் பெயின்ட் பூசி, அதில் சிவப்பு பெயின்டில், மூன்றாக கோடிழுத்திருந்தது. அந்த கோடுகளை தடவினார்; அந்த கோடுகள், வெறும் கோடுகளாய் அவருக்கு தோன்றியதில்லை. அது, வெள்ளமுத்துவின் விரல்கள். அதை, மெல்ல அவர் தடவும் போதே, கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. 'கதவில் மஞ்சள் தான் பூசுவேன்; பெயின்ட்டெல்லாம் பூசக் கூடாது...' என்று, அன்று எவ்வளவு வாதாடினாள்.
எட்டு வருடம் கழித்தும், நேற்று பூசியது போல மின்னியது அந்த சிகப்பு பெயின்ட் விரல்கள். கன்னத்தை அதில் ஒட்டிக் கொண்டு, வாஞ்சையுடன் முத்தமிட்டார்.
மணியக்காரருக்கு வயிற்றை புரட்டி, வாந்தி வருவது போல் இருந்தது. அருகிலிருந்த சொம்பிலிருந்து தண்ணீர் குடித்தார்.
காலோடு போய்விடும் போல வந்தது. வெளியே வந்து தொட்டியிலிருந்து, தண்ணீர் எடுத்து, கொல்லைப் பக்கம் போனார்.
விடிவதற்குள், மூன்று முறை கொல்லைக்குப் போய் வந்தார்.
உடல் நடுங்கத் துவங்கியது. மகனை எழுப்பலாம் என்று எண்ணியவர், அந்த எண்ணத்தை தவிர்த்தார். கதவில், மின்னிய சிவப்பு விரல்களை தடவினார். இந்த விரல்கள் தானே இவ்வளவு காலத்தை கடத்த உதவியது.
மீண்டும் வயிற்றை புரட்டியது. இப்போது மணியக்காரருக்கு திராணி இல்லை. கதவை பிடித்துக் கொண்டு எழ முற்பட்டார். கால் தட்டி சொம்பு கவிழ்ந்தது. உள்ளிலிருந்து மணி, ''என்னங்கப்பா?''என்று கேட்டான்.
ஒன்றுமில்லை என்று சொல்லத் தோன்றியது; ஆனால், முடியவில்லை.
எதிரே, 'பரக் பரக்' என, வாசல் பெருக்கும் சத்தம் கேட்டது.
எதிர்வீட்டுக்காரி பெருக்கிக் கொண்டிருந்தாள்.
மீண்டும், ''என்னங்கப்பா,'' என்று கேட்டுக் கொண்டே மணி வெளியே வந்தான்.
மணியக்காரர் தன் முழு பலத்தையும் திரட்டி, எழுந்து அமர முயன்று தோற்றார். திண்ணை விளக்கை போட்ட மணி, மணியக்காரர் கண்கள் சொருகக் கிடப்பதை பார்த்து, ''அப்பா,'' என்று அலறினான்.
''அப்பா... என்னங்கப்பா ஆச்சு,'' கதறும் மணியின் பின் நின்று அழத் துவங்கினாள் சங்கரி.
எதிர்வீட்டுக்காரர் ஓடி வந்தார்.
''என்னா மணி?''
''சின்னண்ணே! ஒத்தக்கட மொனையில, அம்பாசடர் நிக்கும் கூட்டியாங்களேன்,'' குரல் உதற அரற்றினான் மணி. அவன் வாக்கியம் முடிவதற்குள், சைக்கிளில் போய் விட்டார் அவர்.
மணியக்காரருக்கு நினைவு தப்பிக் கொண்டிருந்தது. மகனின் கையைப் பற்றி, கடைசியாக தன் முழு பலத்தையும் சேர்த்து, பிசிறடித்த மெல்லிய குரலில், ''தம்பி... அந்த கதவ பொளந்து, என் கூட வச்சி எரிச்சிடு,'' என்றார்.
''ஒண்ணும் ஆகாதுங்கப்பா,'' தலையில் அடித்துக் கொண்டு அழுதான் மணி.
தெரு ஆட்கள் கூடிவிட்டனர்.
மணியின் கையைப் பற்றியபடி சத்தியம் செய்வது போல், ''அந்த கதவ பொளந்து, என் கூட வச்சி எரிச்சிடு,'' என்றார் கடைசியாக!
இறந்து விட்ட தன் தகப்பனிடம், 'ஏம்ப்பா... அப்படிச் சொன்னீங்க...' என்று புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தான் மணி. அவர் இருந்திருந்தால் சொல்லி இருக்கக்கூடும்... 'அதுல எழுதி இருக்கற எதுவும், ஒனக்கு புரியாதுப்பா; அது, எனக்கு மட்டுமே புரியும் மொழி என்று!'
சி.மோ.சுந்தரம்
வயது: 40.
பணி: முன்னாள் ராணுவ வீரர், தற்சமயம், திரைப்பட எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் இணையதள எழுத்தாளர். இவர் எழுதிய சிறுகதை ஒன்று, கல்கி சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது.

