
கே.அசோகன், திருவான்மியூர்: நிம்மதியான பிற்கால வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் உடல் நலத்தை பேண வேண்டும்; இதற்கு தீய பழக்கங்களை கைவிட வேண்டும். உடற்பயிற்சி மற்றும் பயனுள்ள சில பொழுது போக்குகளை பழகிக் கொள்ள வேண்டும். இது, வயதான காலத்தில் பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும். எல்லாவற்றுக்கும் கிரீடம் வைப்பது போல பணம் வேண்டும். அதற்கு, இப்போதிலிருந்தே சேமிக்க வேண்டும். பின், நிம்மதிக்கு குறைவேது?
என்.வித்யாசாகர், மங்கலம்பேட்டை: கலகலப்பாக பேசும் ஆண்களை நம்பி விடும் பெண்கள், 'ரிசர்வ்ட்' ஆசாமிகளை விரும்பாதது ஏன்?
பெண்களின் அடி மனதில் நகைச்சுவை உணர்வு புதைந்துள்ளது. கலகலப்பு ஆசாமிகள் அதை உணர்ந்தவர்கள். சிரித்துப் பேசி, இளகிய மனமுடைய பெண் இனத்தை, 'ஈஸி'யாக ஈர்த்து விடுகின்றனர். 'ரிசர்வ்ட்' ஆசாமிகளை முரடர்களாக சித்தரித்து விடுகிறது பெண்களின் இளகிய மனம். முரட்டுத் தனத்தை எவர் தான் விரும்புவர்!
எஸ்.சந்திரன், திண்டிவனம்: அதிகமாக யோசிப்பவர்களுக்கு வழுக்கை விழும் என்பது உண்மையா?
அப்படியானால் பெண்கள் எல்லாம் யோசனையே செய்யாதவர்களா... எல்லாப் பெண்களுக்கும் தலைமுடி இருப்பதை நீங்கள் பார்த்ததில்லையா?
டி.ஜேம்ஸ், நெய்வேலி: அடிக்கடி சிறு சேமிப்பை வலியுறுத்தி, சிக்கனத்தை கடைப்பிடிக்க சொல்கிறீர்கள். பர்சின் கனத்தை குறைத்து விடாதிருக்க, 'அட்வைஸ்' செய்கிறீர்கள்... இந்த உலகில் பணம் தான் முக்கியமா?
பணம் மிக முக்கியம் தான்; ஆனால், அதை விட மனிதர்கள் மிக முக்கியம். பணத்தை சம்பாதித்து பாதுகாப்பதுடன், மனிதர்களையும் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
என்.இப்ராஹிம், புதுச்சேரி: எதிர்காலத்தில் சவுகரியமாக, சந்தோஷமாக வாழப் போகிறவர்கள் யார்?
அடுத்தவன் நம்மை மதிக்க வேண்டும்; உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக ஆடம்பர செலவு செய்யாமல், எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போர் எல்லாம் சந்தோஷமாக, சவுகரியமாக இருப்பர். செலவை குறைத்துக் கொள்ள முடியாமல், கடன் வாங்கி செலவு செய்பவர்களின் வாழ்க்கை, தகிடுத்தத்தம் தான்!
எம்.எஸ்.நீலகண்டன், மதுரை: ஆண்கள் தங்கள் தொப்பையையும் பெண்கள், உடல் பருமனையும் குறைக்க முயற்சி செய்வதில்லையே... ஏன்?
'கல்யாணம் முடிஞ்சு, குழந்தை, குட்டி பெத்தாச்சே... இனி, யார் நம்மை கவனிக்க போகின்றனர்... எதற்காக உடலை வருத்தி உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்...' என்ற தவறான நினைப்பு தான் இதற்கு காரணம். 'சிக்' என்று இருந்தால், நோய்க்கான வாய்ப்பே இல்லை என்பதை, இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெ.சிவஎழிலன், திண்டுக்கல்: துன்பங்களே வாழ்க்கையாகி விட்டது. அவற்றை பொடிப் பொடியாக நொறுக்கித் தள்ள விரும்புகிறேன். வழி சொல்லுங்களேன்...
உங்கள் மனம் பலவீனப்பட்டுள்ள காரணத்தாலேயே, இவ்வாறு கூறுகிறீர்கள். மனம் பலவீனமாக இருந்தால், சிறு துன்பங்களும் பெரிதாக தெரிகிறது. மன பலவீனத்தை போக்குங்கள்... பூதாகரமான பிரச்னைகளை, துன்பங்களை கூட, தூள்தூளாக நொறுக்கித் தள்ளி விடலாம்!
வை.தாராசுந்தர், அம்மாபாளையம்: மச்ச சாஸ்திரப்படி, நாக்கில் மச்சம் இருந்தால் என்ன அர்த்தம்?
வியாதி என்று அர்த்தம்; மச்சக்காரர், மருத்துவரை பார்க்க வேண்டும் என்று பொருள். அவர், 'பேச்சுக்கு' ஆளாகி விடக் கூடாது. அவர் சாபம் பலித்து விடும் என்பதையெல்லாம் பத்தாம் பசலித்தனமாக நம்புவது, இளிச்சவாயத்தனம்!

