PUBLISHED ON : ஜூன் 18, 2017

* ஜெ.ரமேஷ், திருவான்மியூர்: தொழிலாளர்களை நிர்வகிப்பதில் தகுதி பெற, எந்தெந்த புத்தகங்களைப் படிக்கலாம்?
எந்த புத்தகத்தையுமே படிக்கத் தேவையில்லை. 'கடுகடுப்பை கைவிட்டு, இன்முகம் காட்டுங்கள் போதும்; தொழிலாளர்களின் இதயத்தில் இடம்
பிடித்துவிடலாம்...' என்று கூறுகிறார், இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகிகளில் ஒருவர். முயன்று பாருங்களேன்!
கே.டி.ராதாகிருஷ்ணன், சென்னை: சுயசரிதை நூல்களை விரும்பிப் படிப்பதுண்டா?
ஓ... இப்போது கூட, 'பெருந்தகை பி.ஏ.சி.ஆர்., மற்றும் ஜி.கே.வி., ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். முதலாமவர், ராஜபாளையத்தின் ராஜா; பெரும் தொழில் அதிபர். நூற்பாலை முதல் சிமென்ட் தொழில் வரை தம் சிறகை விரித்த பெரும் தனக்காரர்;
கொடையாளி. இரண்டாமவர், ஜி.கே.வரதராஜுலு...'லட்சுமி' குரூப் ஸ்தாபித்தவர்.
பெரியோர், சான்றோர் பெற்ற அனுபவ பாடங்களை சல்லிக்காசு செலவில்லாமல், நாமும் கற்றுக் கொள்ள, வாழ்க்கை வரலாற்று நூல்கள் உதவுகின்றன.
ம.சுமந்திரன், விழுப்புரம்: சமீபத்தில் படித்த விரசமில்லாத, 'ஏ' ஜோக் ஒன்று சொல்லுங்களேன்...
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, அதிகாரி கேட்டார்... 'உங்கள் கணவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது என்கிறீர்களே... ஆனால், உங்கள் கையில் இரு சிறு குழந்தைகள் உள்ளனவே...' பொறுமையாக பதில் சொன்னார் அந்த பெண்... 'நான் இன்னும் சாகலியே!'
- இது, எப்படி இருக்கு!
* எம்.ஆர்.செல்வேந்திரன், மேட்டுப்பாளையம்: 'டிவி'யில் ஏகப்பட்ட, 'சேனல்'கள் வந்துவிட்ட இந்த சமயத்தில், நீங்கள் விரும்பி பார்க்கும், 'சேனல்' எது?
ஒவ்வொரு மணித்துளியும் பொன்னை விட மதிப்பு மிக்கதாக கருதுபவன் நான். இழந்த நேரத்தை எதைக் கொடுத்தும் திரும்பப் பெற முடியாது என்ற
உண்மையில், முழு நம்பிக்கை கொண்டவன். அதனாலே, 'டங்காமாரி... ஊதாரி... புட்டுகின நீ மாரி...' போன்ற பாடல் காட்சிகளை திரும்பத் திரும்ப பார்த்து, கேட்டு, என்னை முட்டாளாக்கிக் கொள்வதில்லை!
ஏ.சந்திரசேகர், திருவள்ளுர்:ஒவ்வொரு பத்திரிகையிலும் ராசி பலன் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதில் உள்ளது போல் நடப்பது இல்லையே...
தெரிந்து கொண்டீர்களா... 'வேஸ்ட் ஆப் டைம் அண்ட் எனர்ஜி' என்று! ராசி பலன்கள் எல்லாம் மனதை குழப்பி, மன அழுத்தத்தையும், வேதனையையும் தான் தரும். உத்தமமானது, அந்தப் பக்கத்தை உடனே புரட்டி விடுவது; செய்து பார்த்து எழுதுங்களேன்!
* என்.வேணுகோபாலன், உடுமலைப்பேட்டை: இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு, பல்கலைக்கழகங்கள் கல்வி கற்றுத் தருவதை விட, ஏதாவது கைத்தொழில் கற்று தந்தால் என்ன... பட்டத்தை வைத்து, கம்பெனி கம்பெனியாய் அலைவதை விட, கைத்தொழில் ஒன்றை கற்று, தொழில் செய்யலாமே...
காலையில் ஏட்டு கல்வி; மாலையில் தொழிற்கல்வி என, நீங்கள் கூறும் திட்டத்தை, அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினாராம். அப்போது, இந்த திராவிட கட்சிகள், 'குய்யோ முறையோ' எனக் கத்தி, பைசா பெறாத காரணங்களையும், ஜாதி வெறியையும் தூண்டி, இக்கல்வி முறையை தொடர விடாமல் தடுத்துள்ளனர்; பலனை இன்று அனுபவிக்கிறோம்!
