PUBLISHED ON : ஜூன் 18, 2017

அன்று, வழக்கமாக நண்பர்கள் கூடும் இடத்திற்கு, முன் கூட்டியே சென்று விட்டோம் நானும், லென்ஸ் மாமாவும்!
குறிப்பிட்ட நேரமாகாததால் நண்பர்களின் கார், பைக் எதையுமே காணோம். ஆனால், எங்களது பகுதியைத் தாண்டி, தூரத்தில், ஒரு கார் நின்றிருந்தது.
கார் முழுவதும் அடிபட்ட தடங்களும், கோடுகளும் இருக்கவே, அது அறிமுகம் உள்ள அன்பரின் கார் தான் என்பதை புரிந்து கொண்டேன். அந்த அன்பர், அரசு துறைகளில் ரொம்ப இன்புளுயன்ஸ் உள்ள நபர்; எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், இவரது வேலை சுலபமாக நடக்கும்.
அரசின் டெண்டர்கள், 20 கோடியில் ஆரம்பித்து, 200 கோடி ரூபாய் வரை பெரிய பெரிய கம்பெனிகளுக்காக பிடித்துக் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர். டெண்டரின் மதிப்பு மற்றும் அதன் சிரமத்திற்கு ஏற்ப, 1 முதல் 3 சதவீத கமிஷன் வாங்குவார்.
ஆண்டிற்கு இது போல மூன்று, நான்கு வேலைகள் முடித்துக்கொடுத்து நான்கு, ஐந்து கோடி ரூபாய் சம்பாதித்து விடுவார். சம்பாத்தியத்தை எல்லாம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து விடுவார். தனக்கென ஆடம்பரக் கார்கள் ஏதும் வைத்துக் கொள்ளமாட்டார்.
செகண்ட் மற்றும் தேர்ட் ஹாண்ட் கார்களை வாங்கி பயன்படுத்துவார்; அப்படி வாங்கப்பட்ட கார்களில் ஒன்று தான் அந்த கார்.
'இந்தக்காரை, ஏ.சி.யுடன், 33 ஆயிரம் ரூபாய்க்கு தான் வாங்கினேன். கேஸ் கனெக் ஷனுக்கு, 12 ஆயிரம் செலவு செய்தேன். இப்போ இரண்டு லட்ச ரூபாய் அளவுக்கு ஓட்டிட்டேன்.
'இதுவே, 15 லட்சம் ரூபாய் போட்டு புதுக்கார் வாங்கினால், எவனாவது சைடுல வந்து உரசிடுவானோ, ஆட்டோ வந்து இடித்திடுமோ என, டென்ஷனிலேயே கார் ஓட்டணும். குறுகிய தெருக்களில் தைரியமாக செலுத்த முடியாது.
'பழைய, விலை குறைந்த கார்ன்னா இந்த பயம் எல்லாம் தேவை இல்ல. உரசுறியா, உரசிக்கோ... இடிக்கிறியா இடிச்சிக்கோ. மேடு பள்ளமான ரோடா... நோ ஒர்ரி...' இப்படி ஒரு லாஜிக் சொல்வார்!
இந்த அன்பர் கொஞ்சம் ஷோக்கு பேர்வழி; ஆள் அழகாக, டிரிம்மாக இருப்பார். பார்க்க, 43 வயது ஆசாமி போல இல்லாமல், 35 வயதுக்குள் தோற்றமளிப்பார். அதற்கு, அவர் அணியும் டி - ஷர்ட்டும் ஒரு காரணம்.
கம்மிங் பேக் டு த பாயின்ட்...
அந்தக் கார் மேற்படி அன்பரின் கார் தானா என்பதை உறுதி செய்ய, அருகே செல்லும் போது, மொபைல்போன் அழைத்தது. பேசியவர், மேற்படி அன்பரே தான்...
'மணி... நான் தான் பேசுறேன்... இங்கே, காருக்குள் ஒரு தோழியுடன் இருக்கிறேன்; இன்னும் கொஞ்ச நேரத்தில் நானே அங்கு வர்றேன்...' என்றார்.
கறுப்பு நிற கார் கண்ணாடிக்குள் இருந்து, நான் அவர் காரை அணுகுவதைப் பார்த்து போன் செய்திருக்கிறார்.
'ஓ.கே.,' என்று என் இடத்திற்கு திரும்பவும், நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில், அந்த அன்பரை மறந்தே போனேன்.
அரை மணி நேரம் சென்று இருக்கும்... பத்து நண்பர்களுக்கும் மேல் வந்து விட்ட நிலையில், மேற்படி அன்பர் கும்பலில் கலந்து, என் புறங்கையை சுரண்டி, தன்னுடன் தனியே வரும்படி சைகை செய்தார்.
நண்பர்களுக்கு சந்தேகம் வராத வகையில் நைசாகக் கழன்று, அந்த அன்பருடன், அவர் கார் நோக்கிச் சென்றேன். காரின் முன்பக்க இடது டோர் கண்ணாடி இறக்கப்பட்டிருந்தது. காரினுள் அழகான, 23 வயதுப் பெண் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அப்பெண்ணிடம், 'ஹி இஸ் மணி... மை பிரெண்ட்...' என, அன்பர் அறிமுகம் செய்ய, அப்பெண் தன் வலது கரத்தை காரின் வெளியே நீட்டி, 'ஷேக் ஹேண்ட்' கொடுக்கும் விதமாக, 'அயம் ரேஷ்மா...' என்றாள். நான், கை கூப்பி வணக்கம் சொன்னேன்.
ஒரே வினாடியில், அவளை அவதானித்தேன்... கழுத்து வரை சுருள் சுருளான கேசம், கண்ணில் பவர் கிளாஸ், மீடியமான தேகம் மற்றும் களையான முகம்!
பின்னர், 'பீ சீட்டட்... ஐ வில் கம்...' என, அப்பெண்ணிடம் கூறி, என்னை தனியே அழைத்துச் சென்றார்.
'மணி... நம்பவே முடியாத சம்பவம்ப்பா... சாயங்காலம், 7:00 மணி அளவில், டீ - ஷர்ட் வாங்க, எங்க ஏரியாவில் இருக்கிற ஷாப்பிங் மாலுக்கு போயிருந்தேன். கடைமுன் நின்று, 'டிஸ்ப்ளே' செய்யப்பட்டிருந்த, டீ - ஷர்ட்டுகளின் விலை விவரத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, யாரோ என்னை முறைச்சு பார்ப்பது போல ஒரு பீலிங் வரவே, திரும்பிப் பாத்தேன்.
'இந்தப் பெண் ரேஷ்மா... வைத்த கண் எடுக்காமல் என்னையே பாத்துட்டு இருந்தா. நான் திரும்பிப் பாத்ததும், பார்வையை மாற்ற, தன் மொபைல் போனை பார்க்க ஆரம்பிச்சா.
'இரண்டு நிமிடத்துக்கு பின், அவ, என்கிட்ட வந்து, என், இ - -மெயில் முகவரி கேட்டா... ஏன், எதற்குன்னு கேட்காமலேயே, என் மெயில் முகவரியைக் கொடுத்தேன்.
'அவள் எனக்கு தகவல் அனுப்பியிருக்கா; அது எனக்கு வரலை என்பதை அறிந்ததும், என்னிடம் திரும்ப வந்து, 'யாகூ ஐ.டி., ஏதும் இருக்கா... அதைக் கொடுங்க...' என்றாள்; கொடுத்தேன்.
'யாகூவில் நுழைந்து, பர்சனல் சாட்டுக்கு வரும்படி என்னை அழைத்தாள். பர்சனல் சாட்டில் நுழைந்ததும், 'நீ ரொம்ப அழகா இருக்கே... உன்னுடன் நேர்ல தனியா பேசணும் போல விருப்பம் இருக்கு. வெளியே போகலாமா... உன்னிடம் கார் இருக்கா...' எனக் கேட்டாள்.
'இவ்வளவு அழகான இளம் பெண், 'தனியே பேசணும் வா'ன்னு கூப்பிட்டா, எந்த ஆண் மறுத்தாலும், நான் மறுக்க மாட்டேன். இருந்தாலும், அவள், 'புரொபஷனலா' நல்ல பெண்ணான்னு தெரிஞ்சுக்க விரும்பி, 'நீ யார்... என்ன செய்யுறே; படிக்கிறியா, வேலை பார்க்கிறியா, சொந்த ஊர் எது?'ன்னு கேட்டு, பதில் மெயில் அனுப்பினேன்.
'உடனே அவளிடமிருந்து பதில் வந்தது... தன் பெயர் ரேஷ்மா என்றும், வயது 23, எம்.பி.ஏ., பட்டதாரி; இன்பர்மேஷன் டெக்னாலாஜி நிறுவனம் ஒன்றில் பணி, சம்பளம், ரூ.60 ஆயிரம் ரூபாய்; சொந்த ஊர் திருவனந்தபுரம், சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி இருப்பதாகவும் தகவல் அனுப்பினாள்.
'சரி... இவள் தொழில் முறை பெண் அல்ல என்பதை உறுதி செய்து, 'அருகே உள்ள தெருவில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ணு... என் கார் நம்பர் இது தான்...' என, தகவல் அனுப்பினேன்.
'அடுத்த, 15வது நிமிடத்தில் அப்பெண்ணை பஸ் ஸ்டாப்பில் இருந்து, 'பிக் - அப்' செய்தேன். காரில் ஏறியது தான் தாமதம்... அப்படியே என் தோளில் சாய்ந்து, கட்டி அணைத்தாள்.
'பின், பீச்சுக்குப் போகச் சொன்னாள்... இங்கே வந்து வழக்கமான இடத்தில் நிறுத்திக் கொண்டேன். 'மேஜர்' விஷயம் தவிர, மற்றவை அனைத்தும் முடிந்தது... 'அதற்கு' அனுமதிக்க மறுக்கிறாள்...' என்று அவர் முடித்ததும், பண்பாட்டு சீரழிவை நினைத்து, எனக்கு பயங்கர கல்சுரல் ஷாக்!
அந்தப் பெண்ணின் முகம் கண்ணில் வந்து போனது... 'இந்தப் பெண்ணா... இந்தப் பெண்ணா...' என நினைத்து, மனம் குமைந்து, நெஞ்சு பாரமானது.
அடுத்த அரை மணி நேரமும் இதையே நினைத்து மனபாரமாகி, தலை சுற்றுவது போன்ற உணர்வுடனேயே இருந்தேன்.
கும்பலில் பெரியசாமி அண்ணாச்சி, ஜிஞ்சர் சிக்கனை, 'டிஞ்சர் சிக்கன்' என்று சொல்ல, எல்லாரும் விழுந்து சிரித்து, அண்ணாச்சியை கிண்டலடிக்க, வலுக்கட்டாயமாக அதில் கலந்து, இதை அப்போதைக்கு மறந்தேன்!
இருந்தாலும், சமுதாயத்தின் பண்பாட்டுச் சீரழிவை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை!
