PUBLISHED ON : ஜூலை 16, 2017

* இ.முத்தையா, விருதுநகர்: தம்மை தரக் குறைவாக திட்டிப் பேசியவர்களை கூட, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்கின்றனரே அரசியல் கட்சித் தலைவர்கள்...
சேர்த்துக் கொள்ளட்டும்... கட்சித் தலைவர்களுக்கு பயன் உண்டு; வெளியே இருந்து கண்டதையும் பேசி, மானத்தை வாங்காமல் இருப்பதற்காக சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால், நாம் இளிச்சவாயர்களாக இருக்கக் கூடாது; தேர்தல் வரும்போது, 'இதுகளுக்கு' பாடம் கற்பிக்க வேண்டும்.
எஸ்.நாராயணன், திருவள்ளூர்: இங்கிருந்து வேலை தேடி, வளைகுடா நாடுகளுக்கு செல்வோருக்கு எல்லாம், இன்னும், அது சொர்க்க பூமியாக இருக்கிறதே...
ஆம், 'டெக்னிக்கல் குவாலிபைடு' ஆசாமிகளுக்கு! மற்றவர்களின் பிழைப்பு சிரமம்தான். இதற்கு காரணகர்த்தாக்கள், நம்மூர், 'புரோக்கர்'கள். சம்பளத்தை குறைத்துக் குறைத்து, அவர்கள் கொழுத்தனர். அடுத்து, கிழக்காசிய நாட்டினரின் போட்டி! என்னதான் சிரமப்பட்டாலும், பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய் என்று ஊருக்கு அனுப்ப முடிகிறதே என்ற காரணத்தால், இன்னும் அங்கேயே இருக்கின்றனர், நம் மக்கள்; அங்கு செல்லவும் விரும்புகின்றனர்!
* வி.பாலமுருகன், காரைக்குடி: என் வயது, 70; என் மகன் வயது, 40. சுயமாக நிறைய சம்பாதிக்கிறான்; ஆனால், கண்டபடி செலவு செய்கிறான். அவனை ஊதாரி எனக் கொள்ளலாமா நான்?
இப்படிப்பட்டவர்களுக்கு நடைமுறை பட்டப்பெயர், ஊதாரி தான்; ஆனால், நிஜமான ஊதாரி யார் தெரியுமா... காலத்தின் அருமை தெரியாமல் நேரத்தை வீணடிக்கிறானே... அவன்தான் உண்மையான ஊதாரி. காசை கரியாக்கும் ஊதாரி, ஒரு நேரம் இல்லாவிட்டால், ஒரு நேரம் பொறுப்பு வந்து திருந்தி, காசை சம்பாதித்து விடலாம். ஆனால், காலத்தை கரியாக்கிய ஊதாரிக்கு, கண்கெட்ட நேரத்தில் பொறுப்பு வந்தாலும், பயன் இருக்கப் போவதில்லை. இழந்த காலத்தை மீண்டும் பெற முடியாதே!
ப.சதீஷ்குமார், விழுப்புரம்: நிருபர் பணி, எழுத்தாளர் பணி, பத்திரிகை ஆசிரியர் பணி, வாசகர் பணி - இவற்றில் கடினமானது எது?
இவர்கள் எல்லாருடைய பணிகளையும் விட, பத்திரிகை அதிபர் பணி கடினமானது; அவ்வளவு சிரமமாகி வருகிறது, பத்திரிகை தொழில்!
கே.பிரபாகரன், புதுச்சேரி: பெண்களை நம்பவே கூடாது என்கிறானே என் நண்பன்...
அப்போ, உங்கள் நண்பர் வாழும் இடம், சுடுகாடு போல அல்லவா இருக்கும்?
* கே.பத்மாவதி, தேனி: பணம் பொல்லாததா?
கத்தியால், மனிதனை குத்தியும் கொல்லலாம்; மாம்பழத்தை துண்டு போட்டு சாப்பிடவும் செய்யலாம். அதைப் போல பணம், தீவிரவாதிகளிடம் இருந்தால், குண்டு போட்டு அழிவை ஏற்படுத்த பயன்படுத்துகின்றனர்; தொண்டு நிறுவனங்களிடம் இருந்தால், ஏழை, எளியோர், வியாதியஸ்தர், ஆதரவற்றோரின் உயர்வுக்கு பயன்படுத்துகின்றனர். இருக்குமிடத்தைப் பொறுத்தது, பணத்தின் பயன்பாடு!
