
எஸ்.வசந்தா, சென்னை: நானும், என் கணவரும் எந்தவிதமான கருத்து வேற்றுமையோ, சந்தேகப் பார்வையோ இல்லாமல் குடும்பம் நடத்துகிறோம். ஆனாலும், தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை, அடிக்கடி வீட்டுக்கு வரச்சொல்லி, ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். அதை எப்படி நிறுத்துவது?
வீட்டிற்கு கூட்டி வந்துதானே பேசுகிறார்... பயத்தை விடுங்கள்; ரொம்ப கண்டிஷன் போடப் போட, வெளியில் சந்திக்க ஆரம்பித்து விடப்போகின்றனர்.
* எல்.ரவி, கோவை: பெண்களையே எப்போதும், 'சப்போர்ட்' செய்து எழுதுகிறீர்களே... என்ன காரணம்?
எவ்வளவோ படித்து முன்னேறியும், இன்னும் பெண்களை அடக்கியே வைத்திருப்பதை எண்ணித்தான்! இதோ, கேரளாவைப் பாருங்கள்... 100 சதவீதம் கல்வி பெற்ற மாநிலம்... ஆனாலும், 2001ல் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து 338. இதுவே, 653 ஆண்கள் மட்டுமே அந்த ஆண்டில் இந்த ஆபரேஷன் செய்துள்ளனர். ஆண்கள் ஆபரேஷன் ஈஸி; பெண்களுக்கு, சில சமயம் பின் விளைவுகள் உண்டு. இது கொடுமை தானே!
* தி.ராஜன், திருப்பூர்: பொறுப்பான பதவியில் இருக்கிறேன்... இருப்பினும், திரைப்படத் துறையின் மீது தீராத மோகம். ஜோசியம் பார்த்ததில், 'குரு மேடு இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால், மணிரத்னம், பாரதிராஜா போல் ஆகியிருப்பாய்...' என, அந்த எண்ணத்தில் சிறிது மனத்தளர்வை ஏற்படுத்தி விட்டார், ஜோதிடர். தொடர்ந்து கனவுத் தொழிலுக்கு முயற்சிக்கலாமா அல்லது இருப்பதே போதுமென்று இருந்து விடவா... மனம் அலைபாய்கிறது; உங்களின் ஆலோசனை என்ன?
சினிமா ஒரு புதைக்குழி; வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுச் சுழி, - சிக்கினால் அவ்வளவுதான்! நீங்கள் வேலை வெட்டி இல்லாதவர் என்றால் கல்லை எறிந்து பார்க்கலாம்; விழுந்தால் மாங்காய், இல்லையேல், நஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால், பொறுப்பான பதவியில் இருப்பதால், சினிமா ஆசையை குழி தோண்டி புதைத்து விடுவது தான் நல்லது!
அ.மகேஸ்வரி, திருவண்ணாமலை: 'நம் நாட்டில் இளம் பெண்களுக்கு, 'கலர்' பார்ப்பதற்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை; திருட்டுத்தனமாகத் தான் செய்ய வேண்டியுள்ளது...' என்கிறாளே என் தோழி...
'இளம் பெண்கள், திருட்டுத் தனமாக நம்மை காண்பதில்தான், 'கிக்'கே இருக்கிறது; நேருக்கு நேர் கண்ணோடு கண் நோக்கினால், 'சே' என்றாகி விடும்...' என்கிறார், இக்கலையில் தேர்ச்சிப் பெற்ற கல்லுாரி மாணவர் ஒருவர்!
* வி.மூர்த்தி, காஞ்சிபுரம்: வருமானத்திற்கு தக்கவாறு செலவை வைத்துக் கொள்ள வேண்டுமா... செலவுக்கு தக்க வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமா?
முதல் வகையினர், புத்திசாலிகள்; இரண்டாம் வகை ஆசாமிகள், சாமர்த்தியசாலிகள்... இரண்டும் இல்லாமல் கடன் வாங்கி செலவு செய்வோர் ஊதாரிகள், ஏமாளிகள்; தற்பெருமை பிடித்து அலைபவர்கள்!
எஸ்.பாஸ்கர், செங்கல்பட்டு: அனைவரும் நம்மை மதித்து நடக்க என்ன வழி?
நீங்களும், அவர்களை மதித்து நடக்க வேண்டியது தான்!

