PUBLISHED ON : ஆக 26, 2018

கே.அனுசூயா, தேனி: கல்வித் திட்டம் எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
மனப்பாடம் செய்து, அதை வாந்தி எடுப்பது என்ற முறை கூடாது. நல்லவனாக, உண்மையே பேசுபவனாக, அகிம்சையை கடைப் பிடிப்பவனாக இருக்க வேண்டும்; பெற்றோர், ஆசிரியர், போலீஸ் மீதுள்ள பயம் காரணமாக இவற்றை கடைப்பிடிக்காமல், 'இந்த நற்பண்புகள் என் இயல்பு' என்று ஒவ்வொரு மாணவனும் எண்ணும் அடிப்படையில் அமைய வேண்டும் கல்வித் திட்டம்!
கே.ஆனந்தப்ரியா, பழனி: மூங்கில் ஒரே நாளில், மூன்று அடி உயரம் வளரும் என்கிறாளே என் தோழி... நம்ப முடியவில்லையே...
நம்பலாம்; ஆனால், எல்லா வகை மூங்கிலும் அல்ல. ஆயிரத்திற்கும் அதிகமான மூங்கில் வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை, ஒரே நாளில், மூன்று அடி உயரம் வளரும் தன்மை கொண்டவை; புல் வகையைச் சேர்ந்தவை மூங்கில்கள். இவற்றில் மருத்துவ குணம் உண்டு; உணவாகவும் பயன்படுகிறது.
பி.வெங்கடரமணன், அவினாசி: உமது சொத்துக் கணக்கு எவ்வளவு... உமது ஓட்டை சைக்கிளை அசையும் சொத்தாக எடுத்துக் கொள்ளவும்...
ஓ.கே., அசையும் சொத்து அது ஒன்றே! அசையா சொத்து ஒன்றுமில்லை. இது போக, ஒரு பேனா, கொஞ்சம் மூளை உண்டு!
த.கிருஷ்ணன், சென்னை: எனக்கு மனசாட்சி இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படி கண்டு கொள்வது?
தெரிந்தே ஒரு தப்பை நீங்கள் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... அப்போது, உடனடியாக உங்களை உங்கள் மனம் கண்டிக்குமானால், உங்களிடம் மனசாட்சி உள்ளது எனக் கண்டு கொள்ளலாம்!
அ.காயத்ரி தேவி, புதுச்சேரி: இதுவரை இன்ஜினியரிங் படித்து முடித்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்து விட்டதா?
ஓ! ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாய் கிடைத்தால் கூட போதும் என்ற மனம் கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரிகள் பணியில் உள்ளனர்; அதற்கு மனம் இல்லாதவர்கள் பல ஆண்டுகளாக, வி.ஓ., (வெட்டி ஆபிசர்) பதவி வகித்து வருகின்றனர்!
* வ.முருகன், திருவள்ளூர்: என் நண்பர்கள் அனைவரும் என்னை எப்போதும் புகழ்கின்றனரே...
பொதுவாக பண ஓட்டம் அதிகமாக இருப்பவர்களிடம் நெருக்கமாக பழகி, அவர்களை முகஸ்துதி செய்து, தம் காரியங்களை சாதித்துக் கொள்ளவே இவ்வாறு நடந்து கொள்வர். முகஸ்துதி செய்பவர்களை நம்பி விடாதீர்கள்; உங்களை மோசம் செய்யவே இந்த புகழ் மாலை!
* எஸ்.பாஸ்கர், சிதம்பரம்: என்னைச் சுற்றியுள்ளவர்களில் பலரும் கெட்டவர்களாக உள்ளனர். நான் மட்டும் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்?
நல்லவர்களாக இருந்தால் தடையற்ற திருப்தியும், கலையாத அமைதியும் கிட்டும்; துன்பங்களையும், துயரங்களையும் கடந்து செல்ல முடியும். நல்லவர்களாக இருப்பவர்களுக்கு, அவர்களின் எல்லை எதுவென்று தெரியும். அதனால், உண்மையுடனே நடந்து இன்புற முடியும்!
