
* தி.குமரா, பெங்களூரு: நம் நாட்டின் பிரதமராக இருந்தவர்களில், எவரும் செய்யாத ஒரு தவறை, மோடி செய்து வருவதை, கண்கூடாக பார்க்கிறேன். அதாவது, பொதுக் கூட்டங்களில் பேசும்போது, தன் ஆள் காட்டி விரலை வேகமாக அசைத்து, எச்சரித்து பேசுகிறாரே... இது, எதைக் காட்டுகிறது?
இதை, தவறு என, ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்... அவர், திரைப்பட சிரிப்பு நடிகர், வடிவேலுவின் அதி தீவிர ரசிகரோ என்னவோ... அவர் நடித்த படங்களை அடிக்கடி பார்ப்பதால், இப்படி செய்கிறார் போலும் என, எடுத்துக் கொள்வோமே!
(சிறு தகவல் ஒன்று: நான் எந்த கட்சிக்கும் சார்பில்லாதவன்!)
எம்.கண்ணன், புதுச்சேரி: வாசகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதில், என்றாவது, உங்களுக்கு சலிப்பு தட்டியது உண்டா?
அதை ஏன் கேட்கிறீர்கள்; தினமும் தான்! உங்களைப் போல், குண்டு குண்டான அழகான கையெழுத்துடன் வரும் கேள்விகளை படிப்பதில், ஒரு போதும் சலிப்பு தட்டியதில்லை... ஆனால், அதற்கு எதிராக வருபவை... வேறு வழியில்லை... சலிப்பாக இருந்தாலும், படித்துத்தானே ஆகவேண்டும்!
* எம்.சின்னப் பொண்ணு, சிவகங்கை: வைகோவால், ஏன் இன்னும் தன் கட்சியை பலப்படுத்த முடியவில்லை?
அவரது கவனமெல்லாம், கறுப்பு கொடி மற்றும் அதே நிற பலுான் மீதும், அதே நிறத்தில், தன் தோளில் போட்டுள்ள, 'துண்டை' துாக்கி விட்டுக் கொள்வதில் மட்டும் தானே உள்ளது!
எம்.லலிதா, சென்னை: 'யாருக்கு அதிக கஷ்டம் வரும்' என்று, என் தோழி கேட்கிறாள்... என்ன சொல்லட்டும்...
உங்கள் தோழியிடம் சொல்லுங்கள், தேவையில்லாமல் அடிக்கடி, வாயைத் திறப்பவர்களுக்கு என்று! தேவையான நேரத்தில், வாயை திறப்பவர்களுக்கு பிரச்னைகள் குறைவு!
* பி.என்.நரசிம்மமூர்த்தி, சென்னை: விளம்பரங்கள் வெளியிடாத, நாளிதழ்கள், 'டிவி' சேனல்கள் உண்டா?
ஒரே ஒரு நாளிதழ் உண்டு! ஆனால், அது, அமெரிக்காவில் இருக்கிறது... அதன் ஒரு பிரதி விலை, 100 ரூபாய்! நம்மூரில் இது போல் செய்ய முடியுமா? 'டிவி' சேனல்களில், 'சிறிய இடைவேளைக்கு பின்' என்றதும், அடுத்த,'சேனலுக்கு' சென்று விடுகிறீர்கள் அல்லவா?
ஆனால், அச்சிட்ட பத்திரிகையில் இதைச் செய்ய முடியாது!
'டிவி' சேனல்களில் விளம்பரம் செய்வோர், இதை உணர வேண்டும்!
எ.தீப்தா, சென்னை: அக்கிரமமான அரசியல்வாதி - ஆதாயத்திற்காக துணை போய், பங்குபெறும் அரசு அதிகாரிகள், இவர்களில் மிக மோசமானவர்கள் யார்?
அரசு அதிகாரியாக இருந்து, ஓய்வுபெற்ற உங்களுக்கே தெரியாதா, மிஸ்டர் ராமன்... உங்கள் பேத்தி பெயரில் கேள்வி கேட்டு எழுதி உள்ளீர்கள்... கையெழுத்தை பார்த்தால், கண்டுபிடித்து விடமாட்டானா இந்த அந்துமணி!

