
என். ராகவன், திருச்சி: என் நண்பன், தன் வாழ்வில் அதிர்ஷ்டம் வரும்... அதிர்ஷ்டம் வரும் என, நம்பிக் கொண்டிருக்கிறானே...
அதெப்படி வரும்? இனிப்பை மட்டுமே உண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? எல்லாரும் எப்போதும் அதை எதிர்பார்த்து இருப்பது தவறு! அது, யாருக்காவது, எப்போதாவது வரக்கூடியது!
சா.ஆ. மாரப்பன், கோவை: பத்திரிகைத் துறைக்கு நீங்கள் வராமல் இருந்திருந்தால், எந்த துறையில் இருந்திருப்பீர்கள்?
உப்பு வாரிக் கொண்டிருந்திருப்பேன். அப்போது, உப்பளங்கள் தான் குடும்பத் தொழிலாக இருந்தது!
* ம. வெங்கடபதி, நாகர்கோவில்: ஒரு தனி மனிதன் வாழ்க்கையில் இன்பம் அதிகமா, துன்பம் அதிகமா?
வாழ்க்கையை புரிந்து கொண்டவன், இன்பம் அனுபவிக்கிறான்; அதைப் புரிந்து கொள்ளாதவன் வாழ்வில், நீங்கள் கூறும் இரண்டாவது அதிகம்!
ஆர். லட்சுமிபதி, மதுரை:எனக்கு ரத்த அழுத்த நோய் வந்து விட்டது. இதற்கு காரணம் என்ன?
அதிகமாக கவலைப்படுகிறவர்களுக்கும், வாயில் கொட்டிக் கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறுவதாவது: மாமிசம், உப்பு - உறைப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் மற்றும் 'புகை'யை மறந்து விட்டால், இந்த நோய் அண்டாதாம்!
* எம். கருணாகரன், சென்னை: மத்திய அரசால் நிறைவேற்றப்படும் புது திட்டங்கள் எல்லாவற்றையுமே எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனவே...
ஆளும் கட்சி கொண்டு வரும் திட்டங்கள் எல்லாவற்றையுமே எதிர்க்க வேண்டும் என்பது தான், அவர்கள் திட்டம்; இதெல்லாம் எடுபடாது... மக்களிடம் எதிர்ப்பு இல்லையே!
ஆர். காமராஜ், காரைக்குடி: நரகம் என்று சொல்கின்றனரே... அது எங்கே இருக்கிறது?
நம் நாட்டிலேயே இருக்கிறதே! நகரம் என்பது எல்லாமே நரகம் தானே...
'கொரோனா' - சாக்கடை நாற்றம், மூட்டைப்பூச்சி, கொசுத் தொல்லை. மிகுந்த பொருள் செலவு இல்லாத இடம் இப்போது எங்கு உள்ளது? இது தானே நரகம்!
* கே. கணேசன், மறைமலைநகர்: எம்.எல்.ஏ., - எம்.பி.,கள், அமைச்சர்களுக்கு ஓய்வூதியம் அவசியமா?
அவர்கள் தொகுதியில் வேலையில்லாத இளைஞர்களுக்குக் கூட, மாத ஊதியம் அளிக்கும் அளவுக்கு, 'சம்பாதித்து' விட்டனரே... இவர்களுக்கு ஓய்வூதியம் தேவையா?
க. மதுசூதனன், புளியங்குடி: பயங்கரமான ஆயுதமாக - உலகத்திலேயே எதைக் கருதுகிறீர்கள்?
துட்டு தான்! இது இருந்தால், பயங்கர ஆயுதம் எதை வேண்டுமானாலும் வாங்கலாமே!

