PUBLISHED ON : மே 16, 2021

கோ.குப்புசாமி, சங்கராபுரம்: கமலஹாசனுக்கு, இனி, சினிமாவா, அரசியலா... எது, 'பெட்டர்?'
கூத்தாடிக்கு, கூத்து பட்டறை தான் சரியாக இருக்கும்!
அனும்மா, சென்னை: நீங்கள் எழுத துாண்டுகோலாய் இருந்தவர் யார்?
தலைவரும், குருவுமான, லேனா தமிழ்வாணன் தான்! ஒருநாள் என்னிடம், 'நீ ஏம்ப்பா பதில் எழுதக் கூடாது... நான் உதவுகிறேன்...' என்றார்.
'சரி' என்ற நான், அந்துமணி பெயரை உருவாக்கி, கேள்விகளை அனுப்பச் சொல்லி அறிவிப்பும் வெளியானது.
குவிந்ததே அஞ்சல் அட்டைகள் கேள்விகளுடன். அதை அப்படியே தலைவரிடம் கொடுத்தேன்.
'என்னால் முடியாதப்பா... நீயே பார்த்துக் கொள்...' என்று கூறி, கையை விரித்தார்.
அப்போது ஆரம்பமானது தான், இப்பகுதி!
* கே.கே. வெங்கடேசன், செங்கல்பட்டு: தமிழை நன்கு படித்தவர்கள் கூட, தமிழில் உள்ள, 'ழ'வை சரியாக உச்சரிப்பதில்லையே...
இவர்கள் தான், இந்தியா முழுவதும் பேசப்படும் ஹிந்தியை எதிர்க்கின்றனர். உலகிலேயே மூன்று மொழிகளில் தான், 'ழ' உள்ளது. அவை: மொழி பெயரிலேயே, 'ழ' கொண்ட தமிழ்; அடுத்து மலையாளம்; மூன்றாவது பிரெஞ்ச் மொழி!
இனியாவது, தமிழர்கள், 'ழ'வை உச்சரிக்க கற்றுக்கொள்ளட்டும்!
ஆர். கண்ணன், கோவில்பட்டி: வேலை செய்யாமலேயே பணம் சம்பாதிப்பவர் யார்?
இதில் என்ன சந்தேகம்; ஆட்சியில் உள்ளோர் தான் இப்படி சம்பாதிக்கின்றனர்!
* நெல்லை குரலோன், தென்காசி: 'கொரோனா' இரண்டாவது அலை தீவிரமானதற்கு, யார் காரணம்?
அரசியல்வாதிகளும், மக்களும் தான்!
தம் சுய லாபத்திற்காக, காசு கொடுத்து மக்களைக் கூட்டி, பிரசாரத்தில் ஈடுபட்டனர்; மக்களும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் பங்கு கொண்டனர்; இரண்டாவது அலை வந்து விட்டது!
மு.சுகுமாரன், மானாமதுரை: 'ஸ்டெர்லைட்' ஆலையில், ஆக்சிஜன் தயாரிப்புக்கு, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என, துணிச்சலான கருத்துகளை வெளியிட்ட, 'தினமலர்' நாளிதழ் பற்றி...
மக்களுக்கான நாளிதழ்... மற்ற பத்திரிகைகள் ஒன்றும் இதுபற்றி வாய் திறக்கவில்லையே!
ஜி. கலைவாணி, மறைமலைநகர்: நீங்கள் பதில் அளிப்பதற்கு, முதலில் தேர்ந்தெடுப்பது கேள்விகளையா அல்லது வாசகர்களையா?
உங்களது கேள்விகளுக்கு பதிலளித்து, சிறிது இடைவெளி விழுந்து விட்டது. நீங்களும் விடா முயற்சியாக பல்வேறு பெயர்களிலும், கேள்வி கேட்கிறீர்கள்... அதுவும் கையெழுத்தில் வித்தியாசம் காட்டி... எனக்குத் தெரியாதா? உங்களது கேள்விக்கு, விடை கிடைத்ததா இப்போது!
