PUBLISHED ON : மே 23, 2021

* இ. நாகராஜன், சாத்துார்: புதிய ஆட்சி அமையும்போது, தலைமைப் பதவியில் இருக்கக் கூடிய ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்படுகின்றனரே... ஏன்?
தமக்கு ஜால்ரா தட்டக் கூடியவர்களைத் தேர்வு செய்கின்றனர்; அதனால் தான் இந்த மாறுதல்கள்!
என். கலைச்செல்வி, புளியங்குடி: எனக்கு திருமணமாக இருக்கிறது. பெரிய குடும்பம்; மூத்த மருமகளாக நான் செல்கிறேன். உங்கள், 'அட்வைஸ்' என்ன?
புத்திசாலித்தனத்துடன் அன்பாக நடந்து கொள்ளுங்கள்; மனித இயல்பை புரிந்து கொள்ளுங்கள். உரிய சிறப்பு கிடைக்கும்!
* எஸ்.நாராயணன், பாபநாசம்: என்னிடம் இருக்கக் கூடாத, 'கேரக்டர்'கள் என்னென்ன என்பதை, தீர்மானிக்க முடியவில்லையே...
மிகக் கொடுமையான மூன்று, 'கேரக்டர்'கள் இருக்கக் கூடும்; அவை: முதலாவது, சோம்பல்... இரண்டாவது, ஞாபகமறதி... மூன்றாவது, கவன குறைவு!
நீங்கள் மனது வைத்தால், இந்த மூன்று கொடூரமும் ஓடிப்போகும்!
ஆர். ஜெயந்தி, சென்னை: என் வாழ்வு தொல்லை மிகுந்ததாக உள்ளது. நான் எப்படி வாழ வேண்டும்?
நம்பிக்கை தான் வாழ்க்கை! அதை மறந்து வெம்பி வாழ்வது, தொல்லை மிகுந்து தான் இருக்கும்!
எம். விவேக், கடையநல்லுார்: எனக்கு மன அமைதி இல்லாமல் இருக்கிறதே...
பிறரை விரோதிகளாக நினைக்கிறீர்களா... மன நிம்மதி போய் விடும்; யாரையும் விரோதிகளாக்கிக் கொள்ளாதீர்கள். எந்த நேரத்தில் என்ன செய்வானோ என அஞ்சுகிறீர்கள்... இப்படியே இருந்தால், முன்னேறவே முடியாது!
* முருகு. செல்வகுமார், சென்னை: திராவிடக் கட்சிகளை தொடர்ந்து ஆட்சியில் அமர வைக்கின்றனரே தமிழர்கள்... இது ஏன்?
தமிழர்களை ஈர்க்கும் அளவிற்கு தேசிய கட்சிகளில் தலைவர்கள் இல்லை; அதனாலேயே திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன!
பி.சரண், தஞ்சாவூர்: காலையில் எழுந்ததும், உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டா?
பல் விளக்கிய பின், காபி ஏதும் அருந்தாமல், 20 நிமிடம், 'யோகா' பயிற்சி செய்து விடுவேன்; அடுத்த, 20 நிமிடம், 'பிசியோதெரபிஸ்ட்' கற்றுக் கொடுத்த, கைகளுக்கான, பயிற்சி செய்து விடுவேன்!
உங்கள் கேள்விக்கு பதில், பா.கே.ப., எழுத வேண்டும் அல்லவா... அதனால், கைகளுக்கு இந்த பயிற்சி!
வெ. ராதாகிருஷ்ணன், சென்னை: தபால் கார்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, தாங்கள் பதிலளிப்பது இல்லையாமே?
யார் இந்த, 'டுபாக்கூரை' அள்ளி விட்டது... சரி, அவரை மறந்து விடுங்கள். இந்த பதில் கூட நீங்கள் அனுப்பிய அஞ்சல் அட்டையிலிருந்து தேர்வு செய்தது தானே!
ஆனால், இப்போது, அஞ்சல் அட்டைக்கு சமமாக, 'இ - மெயிலி'லும் கேள்வி வருகிறது. ஒன்று விடாமல் படித்து விடுகிறேன்.
