
பா. கார்த்திகேயன், உளுந்துார்பேட்டை: ஆம் ஆத்மி கட்சி, தமிழகத்தில் வளருமா?
நல்லவேளை, ம.பி., - உ.பி., மற்றும் வட மாநிலங்களில், தி.மு.க., வளருமா எனக் கேள்வி கேட்காமல் விட்டீர்களே!
ஆர். பிரசன்னா, திருச்சி: பல்லாயிரம் கோடி செலவு செய்து, நான்கு வழி, எட்டு வழிச் சாலைகளை தேசம் முழுவதும் அமைப்பதால் பலன்கள் உண்டோ?
கண்டிப்பாக உண்டு. ஏராளமான உயிர் சேதங்களை தவிர்க்கலாம். அத்துடன், நாம் செல்ல வேண்டிய ஊருக்கு குறிப்பிட்ட நேரத்தில் அடைந்தும் விடலாம்!
ஓ.என். ராமநாதன், மதுரை: பா.ம.க., ராமதாஸ், 'நிழல் பட்ஜெட்' தயாரித்துள்ளாரே... இதனால் யாருக்கு லாபம்?
அவரது படமும், அறிக்கையும் ஊடகங்களில் வரவேண்டும்... மக்கள் தம்மை மறந்து விடக்கூடாது என்பதால் தான், இதுபோன்ற செய்கைகளில் ராமதாசும், அவர் மகனும் ஈடுபடுகின்றனர்!
பா. ஜெயக்குமார், வந்தவாசி: காஷ்மீர் பண்டிட் என்பவர்கள் யார்?
காஷ்மீரைச் சேர்ந்த பிராமணர்கள்... அவர்கள் அனைவரும் அங்கு நடந்த இஸ்லாமியர் - ஹிந்து பிரச்னையால் அகதிகளாக மற்ற மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து, அங்கேயே இன்று, 'செட்டில்' ஆகி விட்டனர்!
* எம். பாண்டுரங்கன், விழுப்புரம்: உக்ரைன் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்க, இந்திய மாணவர்கள் ஆசைப்படுவது ஏன்?
இங்குள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகளில் வசூலிக்கப்படும் லட்சக்கணக்கான பணத்தை கொடுக்க முடியாமல், தங்களால் முடியும் அளவுக்கு மட்டுமே வெளிநாடுகள் வசூலிப்பதால் அங்கே செல்கின்றனர்!
லதா மோகன், சென்னை: நான் ஏழ்மையான குடும்பத்தவள்... என் மகளுக்கு திருமணமாகப் போகிறது... 'நிதி நிலை சரியான பிறகு தான் பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய்...' என்று, நிதி அமைச்சர் கூறி விட்டாரே...
கவலைப்படாமல், பெண்ணுக்கு திருமணம் செய்து வையுங்கள். இவர்களது ஆட்சி தொடரும் வரை நிதி நிலை சரியாகப் போவதில்லை... அதனால், 1,000 ரூபாயை எதிர்பார்க்காதீர்கள்...
* எஸ். வைத்தியநாதன், மதுரை: 'மருத்துவ கல்வியை தமிழில் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்...' என, சுகாதார அமைச்சர் கூறியுள்ளது சாத்தியமா?
நிச்சயமாக சாத்தியம் இல்லை... இதுபோன்ற பேச்சுக்கள், அறிக்கைகள் எல்லாம் வீண் தான்... தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்!

