sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 03, 2022

Google News

PUBLISHED ON : ஏப் 03, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே



'பீச்' நண்பர்களின் அரட்டைக் கச்சேரி அரங்கேறிய ஒரு மாலை வேளை... பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, ரஷ்யா - உக்ரைன் போர் பற்றி திரும்பியது.

அவர்கள் பேசுவதை, வழக்கம்போல் நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

'ஏம்பா... ஒருங்கிணைந்த ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு தான், உக்ரைன். அப்படியிருக்க, இரண்டு நாடுகளும், விடாக் கொண்டன் கொடாக் கொண்டனாக மோதிக் கொண்டதற்கு என்னப்பா காரணம்...' என்று கேட்டார், ராமசாமி அண்ணாச்சி.

'ஓய், பெரிசு... அது மிக சிக்கலான பின்னணி கொண்டது. உமக்கு சொன்னா புரியாது...' என்று கடுப்படித்தார், லென்ஸ் மாமா.

'உனக்கு சொல்ல தெரியலன்னு சொல்லு...' என்று, அண்ணாச்சி உசுப்பேற்ற, 'உமக்கு புரியும்படியா லோக்கல் பாஷையில் விளக்குகிறேன்...' என்று, சொல்ல ஆரம்பித்தார், லென்ஸ் மாமா:

இருபது ஆண்டுகளுக்கு முன், உக்ரைன் சீமாட்டி, பக்கத்து வீட்டுக்காரனின் (அமெரிக்கா) துாண்டுதலால், தன் கணவனை (ரஷ்யா) விவாகரத்து செய்து, பாகம் பிரித்துக் கொண்டு சென்றாள். அப்போது, அவளுக்கு பல குழந்தைகள் இருந்தனர்.

மிகவும் இணக்கமாகவே பிரிந்து சென்றதும் அல்லாமல், அவளுக்கு நிறைய தன் குடும்ப சொத்துக்களையும் விட்டுக் கொடுத்தார், முன்னாள் கணவர். அதன் பிறகும், அவள் வாங்கிய, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களை, அவள் சார்பாக வட்டியுடன் திருப்பியும் செலுத்தினார்.

முன்னாள் கணவரைப் பிரிந்த பிறகு, உக்ரைன் சீமாட்டி, ஒரு மைனர் குஞ்சு (அமெரிக்கா) மற்றும் பல ஆண் நண்பர்களுடன் (மேற்கத்திய நாடுகள்) ஊர் சுற்றவும் துவங்கினாள். அவளின் காதலனான மைனர் குஞ்சு சொல்வதை கேட்டு, தன் முன்னாள் கணவனின் வீட்டுக்குள் குப்பையை போடுவது, அவனது உடைமைகளை அழிப்பது போன்ற பல தொல்லைகளைக் கொடுத்து வந்தாள். சமயத்தில், தன் காம்பவுன்ட் வேலியை, கணவனின் வீட்டை ஆக்கிரமிக்கும் விதத்தில், நகர்த்தியும் போட, மைனர் குஞ்சால் நிர்ப்பந்திக்கவும் பட்டாள்.

இதனால், மிகவும் கோபமடைந்தார், முன்னாள் கணவர். பலமுறை சமாதானமாக, 'மைனர் குஞ்சுவுடன் சேர வேண்டாம், நல்லதல்ல...' என, அறிவுரையும் செய்தார்.

கேட்டாளா அவள்? அவளது பிடிவாதம் இன்னும் அதிகமானது. மைனர் குஞ்சு, அவளை ஒரு அடியாள் கேங்கில் (நேட்டோ) சேரு, உன் கணவனை உதைக்கலாம் என்ற வஞ்சக எண்ணத்தை அவள் மனதில் விதைக்க, இளவட்டக்காரி அதற்கு மயங்கிப் போனாள்.

இப்படி பல குடும்ப பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன் (குவைத், ஈராக், லிபியா, ஆப்கான் மற்றும் வியட்நாம்) தான், அந்த மைனர் குஞ்சு.

அந்த மைனரின் பேச்சைக் கேட்டு, தன் முன்னாள் கணவன் ஜாடையில் இருந்த (ரஷ்ய மொழி பேசுவோர்) குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினாள். தன் ஒரு குழந்தையை மட்டுமாவது திருப்பித் தருமாறு கணவர் வலியுறுத்தினார். குழந்தையின் பெயர், கிரிமியா. அவள் தர மறுத்ததால், ஒரே இரவில், கிரிமியா பாப்பாவைத் துாக்கிக் கொண்டு வந்து விட்டார், கணவர் (2015).

முன்னாள் கணவர் மீது, அதீத வெறுப்பை உமிழத் துவங்கினாள், உக்ரைன் அழகி. திடீரென்று நேட்டோ குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள நேரம் பார்த்தாள், அவள். அதன் மூலம், முன்னாள் கணவரை மேலும் வருத்தமுறச் செய்து, மன அழுத்தத்தை உண்டாக்கினாள்.

தொடர்ந்து அவளது முன்னாள் கணவரைக் கொடுமைப்படுத்த மட்டுமே, அவளை பயன்படுத்த விரும்பினான், மைனர் குஞ்சு. இதனால், முன்னாள் கணவரின் மேலும் இரண்டு குழந்தைகள், அழுதுகொண்டே தங்கள் தந்தையை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காலாவதியான சில பொருட்களை (வெடி மருந்துகள்) மட்டும் அவ்வப்போது அனுப்பி, எப்போதும் அட்டூழியத்திற்குப் பக்கபலமாக இருந்தான், மைனர் குஞ்சு.

தனக்கு ஆதரவாக எல்லாரும் இருப்பதாக நினைத்து, மேலும், தன் முன்னாள் கணவரிடம் அதிக முரட்டுத்தனத்துடன் வன்மம் காட்டினாள், உக்ரைன் அழகி.

அவளது முன்னாள் கணவன் மூலம் பெற்ற இரண்டு மகன்களுக்கு, தாயின் சுயரூபம் தெரிய வரவே, தைரியமாக அவளிடம் சென்று, அப்பாவிடம் அனுப்பி வைக்குமாறு சண்டை போட்டனர்.

இதனால், அவள் மாற்றாந்தாய் போல மாறி, இரண்டு பிள்ளைகளையும் கொடுமைப்படுத்தத் துவங்கினாள்.

முன்னாள் கணவரால் இதைத் தாங்க முடியவில்லை. தன் குழந்தைகளைப் பார்க்க, அங்கு விரைந்தார். அந்த இரண்டு குழந்தைகளான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியோரைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்க, அவள் முரண்டு பிடித்தாள்.

இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் கணவர், தன் அடியாட்களோடு அவள் வீட்டிற்கு சென்று, தன் குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு வர, தற்போது முனைந்துள்ளார்.

இதற்கிடையே மைனர் குஞ்சு, 'எனக்கெல்லாம் உங்க ஏரியாவிலே சண்டை போட வராது; நான் சண்டை போட்ட பல இடங்களிலெல்லாம் தோற்றுத்தான் போயிருக்கிறேன். எனவே, செலவுக்கு கொஞ்சம் பணம் தர்றேன்; சமாளிச்சுக்க. கோர்ட், கேஸ் போன்றவற்றை நான் பார்த்துக்கிறேன்...' என்று, கை விட்டு விட்டார்.

மற்ற ஆண் நண்பர்களும், வடிவேலுவின் அடியாள் போலவே பின்னாலே இருந்து உக்ரைன் சீமாட்டியை உசுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

- இவ்வாறு கூறி முடித்த லென்ஸ் மாமா, 'இப்ப புரிந்ததா, போருக்கான காரணம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல் இருக்கிறதல்லவா? யார் பக்கம் நியாயம் உள்ளது?' என்றார்.

'ஓய் லெஞ்சு... இவ்ளோ விஷயங்களை தெரிஞ்சு வெச்சுருக்கிறியே... எங்கிருந்தாவது, 'சுட்டு' விட்டாயா?' என்று கலாய்த்தார், அண்ணாச்சி.

மாமா, நமுட்டு சிரிப்பை உதிர்க்க, சபை கலைந்தது.



'வெற்றிக்கு வழி இதுவே தான்' நுாலிலிருந்து:

வெட்க உணர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது, அது ஏன் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது என்பதை, ஆராய்ச்சி செய்தது, அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று.

முதலில், இரட்டையர்களை வைத்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. வெவ்வேறு இடங்களில் உள்ள இரட்டையர்களை தனித்தனியே சந்தித்து, அவர்கள் எவ்வாறு வெட்கப்படுகின்றனர் என்று கண்டறிந்தனர். புதியவர்களைக் கண்டபோது, வெவ்வேறு இடங்களில் இருந்தபோதும், ஒரே அளவிலேயே வெட்கப்படுகின்றனர் என்று கண்டறியப்பட்டது.

பெரியவர்களிடம் இந்த ஆராய்ச்சியை நடத்திய போது, மனிதர்களின் மற்ற அம்சங்களை விட, அவர்களின் பாரம்பரிய தன்மையே வெட்கத்தின் தன்மைக்கு காரணம் என்று தெரிய வந்தது.

பெண்களின் தாயார், பாட்டி ஆகியோர் எந்த அளவுக்கு வெட்கப்படுகின்றனரோ, அதே தன்மையில் வெட்கப்படுவதை காண முடிந்தது. இக்காரணத்தாலேயே, பல பெண்கள், வயதான பிறகும் வெட்கப்படுகின்றனர்.

இறுதியில், வெட்கப்படுவது என்பது, பரம்பரையை ஒட்டியே அமைகிறது என, கண்டறிந்தனர்.






      Dinamalar
      Follow us