PUBLISHED ON : மே 07, 2023

ஆர். சிவகுமார், நெல்லை: 'போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்...' என்று, மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே...
'டாஸ்மாக்'கில் விற்பது எல்லாம், குடிகாரர்களின் உடல் நலத்திற்கு உதவும் சத்து, 'டானிக்' என்று நினைத்து விட்டார் போலும்!
* ஆர். சுப்பு, திருத்தங்கல்: 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட, தகுதியற்றவர்களாக அறிவிக்க வேண்டும்...' என, தேசியவாத காங்கிரஸ் கட்சியின், மூத்த தலைவர், அஜித்பவார் வேண்டுகோள் விடுத்துள்ளாரே...
எத்தனை மனைவியருக்கு, இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதை சொல்ல மறந்து விட்டாரே!
ஜி. அர்ஜுனன், செங்கல்பட்டு: ஒரு வாரத்தில் வரும், 300 கேள்விகளில், எட்டு கேள்விகளை மட்டும் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் அந்துமணியாரே... புரியாத புதிராகவே உள்ளதே.
அர்ஜுனன் சார்... புதன் கிழமை மட்டுமே, 200 கார்டுகள் வரும்; அவை ஒவ்வொன்றிலும், ஐந்து கேள்விகள் இருக்கும். மற்ற கிழமைகளில் எவ்வளவு கார்டு, இ - மெயில் வரும் என்பதை, கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இவைகளில், எட்டு கேள்விகளுக்கு மட்டுமே விடை அளித்து, கேள்வி - பதிலுக்கு ஒரு பக்கமே ஒதுக்கியுள்ளார், பொறுப்பாசிரியர். புரிந்து கொள்வீர்கள்தானே!
எம். ஜோசப், சென்னை: மகிழ்ச்சி... அது, என்னிடம் இல்லையே...
மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சி என்ன தெரியுமா? அது, அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான்!
மா. ராஜ், கோவை: ஒரு மகன், தன் தந்தைக்கு எப்படி புகழ் பெற்று தரவேண்டும்?
இந்த மகனை பெற என்ன தவம் செய்தேனோ என்று பாராட்டத்தக்க புகழை ஒரு மகன் ஈட்டித் தருவது ஆகும்!
அ. கமலா, சென்னை:அறிவு என்று சொல்கின்றனரே... அப்படி என்றால் என்ன?
அழிவு வராமல் காப்பாற்றும் கருவி, அறிவு. அது, பகைவராலும் அழிக்க முடியாதது!
மா. ராஜ், மதுரை: வாழ்க்கையின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்... என் சந்தேகத்துக்கு பதில் கூறுங்களேன்!
உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். பிறருக்கு உதவி செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாக கொள்ளுங்கள்; சந்தோஷம் கிடைக்கும்!
* வி.சி. கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு: 'ஸ்டாலினை தோளில் சுமப்பதில் வெட்கமில்லை...' என, அமைச்சர் துரைமுருகன் கூறுகிறாரே...
துரைமுருகனுக்கு, 80 வயதுக்கு மேலாகி விட்டது. அவரால், 70 வயதாகிய, ஸ்டாலினை தோளில் துாக்க முடியுமா? அவரது கனவில் வேண்டுமானால் சுமக்கலாம்!
