PUBLISHED ON : ஜூன் 11, 2023

எம். கல்பலதா, சென்னை: 'லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்...' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே...
அவருக்கு, மத்திய அமைச்சர் ஆகும் ஆசை இல்லை போலும். கவர்னராக மட்டுமே எண்ணம் இருக்கிறது போலும்.
* ஆர். சண்முகம், திருப்பூர்: நமது நாளிதழில், தி.மு.க.,வை தாக்கி, அதிக செய்திகள் வருகிறதே... அது ஏன்?
உண்மையான தவறுகளை சுட்டிக் காட்டி செய்திகள் வெளியிடுவது தவறா... உண்மையின் உரைகல், 'தினமலர்' என்பது உங்களுக்குத் தெரியாதா?
என். ஜெயம், மேல்புவனகிரி: நம் அரசியல்வாதிகள் அடிக்கடி வெளிநாடு பறக்கின்றனரே... உண்மையிலேயே, அது, தொழில் முதலீடுகளை ஈர்க்கத்தானா?
இல்லை... ஊழலில் சம்பாதித்த பணத்தை, அங்கே முதலீடுசெய்வதற்கு தான்!
* முருகு. செல்வகுமார், சென்னை: 'பிரதமர் பதவி மீது ஆசையில்லை. தேர்தலில் போட்டியிடப் போவதுமில்லை...' என்கிறாரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்?
அவருக்கு வயதாகி விட்டது, ஒரு காரணம்; எதிர்க்கட்சி தலைவர்களிடம், பிரதமர் பதவிக்கு போட்டி அதிகமுள்ளதால், தனக்கு வாய்ப்பில்லை என்பது, அடுத்த காரணம்!
டி.ஜெ. சிங், சிங்காநல்லுார்: நதிநீர் பிரச்னையில், தமிழக காங்கிரஸ், கர்நாடகாவுக்கு ஆதரவா... தமிழகத்துக்கா...
தமிழகத்துக்கு ஆதரவில்லை என்றால், தி.மு.க., கூட்டணி உடைந்து விடும். ஆதரவு என்றால், கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுவிடும். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
ஜி. மூர்த்தி, நெல்லை: முதல்வர் ஸ்டாலின், எதிர்பார்த்தது போல, தி.மு.க., மந்திரிகள் நடந்து கொள்கின்றனரா?
அவர் தான், மந்திரிகளின் பேச்சுக்களால், நடவடிக்கைகளால், இரவில் துாக்கம் வரவில்லை என்று, நாசுக்காக சொல்லி விட்டாரே. இதை மந்திரிகள் புரிந்து கொண்டால், நல்லது. முதல்வருக்கு துாக்கம் வரும்!
கு. மூர்த்தி, மதுரை: துணை புரியத் தகுந்த நண்பன் யாராக இருக்கும். அப்படிப்பட்டவனை தேர்ந்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் செய்ய வேண்டியது... நன்மையும், தீமையும் ஆராய்ந்து பார்த்து, தீமையை விலக்கி, நன்மையை மட்டுமே விரும்பும் இயல்புடையவனே, துணை புரிய தகுதியானவன். அப்படியே பார்த்துக் கொள்ளுங்கள்!
