
வி. தியாகராஜன், கோவை: போன ஆண்டு தீபாவளி, 'போனஸ்' பணத்தை வைத்து, ஆடித் தள்ளுபடியில் துணிமணி வாங்குவீர்கள் தானே...
போன ஆண்டு தீபாவளி, 'போனஸ்' அப்போதே காலியாகி விட்டது... இந்த ஆண்டு, ஜூன் மாதம் கடைசியில், எல்லாம் 30 என, வாங்கி விட்டேன்... சம்பள காசில் இருந்து தான்... ஜூலை 1ம் தேதி பிறந்த நாள் ஆயிற்றே... ஒரு ஆண்டுக்கு ஓர் ஆடையை, 12 முறை தான் அணிவேன்.
* பா. பரத்வாஜ், நாகை: 'பணியில் இருக்கும் நேரத்தில் போலீசார், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது...' என்று, டி.ஜி.பி., உத்தரவு இட்டுள்ளாரே... பலன் தருமா?
இவரும், மற்ற மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும், போலீஸ் ஜீப் அல்லாமல் தனியார் கார்களில் நகரை சுற்றி வந்தால் தான், போலீசாரின், மொபைல் போன் பயன்பாட்டை தெரிந்து கொள்ள முடியும்... அதன் பிறகு மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்!
* க. லதா, சென்னை: பொது சிவில் சட்டத்தில் என்ன தான் பிரச்னை?
ஒரு பிரச்னையும் கிடையாது... சரியான சட்டம் தான்... வெள்ளைக்காரர்கள் ஆண்ட போது, தமக்கு எதிராகி விடுமோ என்ற பயத்தில், அப்போது இருந்த இந்த சட்டத்தை மாற்றினர்... இப்போது அதை திரும்பக் கொண்டு வருவதை புரிந்து கொள்ளாத, சில கட்சியினர் தான், அதை எதிர்க்கின்றனர்!
செ. குமார், பாண்டி: 'யாரிடம் நம்பிக்கை வைப்பது...' என, என் நண்பன் கேட்கிறானே... என்ன பதில் சொல்வது?
'ரொம்ப சிம்பிள்' அன்பு, அறிவு, செயல் செய்வதில் கலங்காமை, ஆசை இல்லாமை ஆகிய நான்கும் உடையவனுடன் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள்!
க. புகழேந்தி, சேலம்: வாழ்வில் ஆனந்தம் பெறுவது எப்படி?
அன்பு தான் முக்கியம்... அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும், ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்!
ஆர். ஜெயகுமார், மதுரை: யாரை நம்ப வேண்டும்...
ஒருவரை ஆராயாமல் நம்பக் கூடாது... நம்பிய பிறகும் அவர் மீது சந்தேகம் கொள்வது, நீங்காத துன்பத்தைத் தரும்!
ஏ. ராஜேந்திரன், திருப்பூர்: கோவை பெண் பேருந்து ஓட்டுனருக்கு, திடீரென, கார் பரிசளித்திருக்கிறாரே நடிகர் கமல்ஹாசன்...
வரும் லோக்சபா தேர்தலில் கோவையில் நிற்க முடிவு செய்துவிட்டார் போலும்... அதனால் தான் இந்த முன்னேற்பாடுகள்!

