PUBLISHED ON : ஜூலை 16, 2023

''எனக்கு அவளை சுத்தமாக பிடிக்கலை,'' அழுத்தம் திருத்தமாய் சொன்னான், ரவி.
''இப்படி சொன்னா எப்படிடா... கொஞ்சம் பொறுத்துக்க, போகப் போக சரியாயிடும். நீதானேடா பெண், 'மாடர்னா' இருக்கணும்; எங்களை மாதிரி, கட்டு பெட்டியா இருக்கக் கூடாதுன்னு சொன்னே. அதனால் தான், எங்க எதிர்பார்ப்புக்கு இல்லாட்டாலும் உனக்கு பிடிச்சா சரி, ஓ.கே.,ன்னு சொன்னோம். இப்ப போயி, உன் மனைவி மலரை பிடிக்கலைன்னா என்ன பண்றது?'' கோபமாய் கேட்டாள், அக்கா வசுமதி.
''ஆமாம், நான் தான், என் மனைவி, 'மாடர்னா' இருக்கணும்ன்னு நிபந்தனை போட்டேன். அதுக்காக இப்படியா... மலர், பெண் இல்லை பிசாசு.''
''என்னடா சொல்ற?''
கை நடுங்க பாக்கெட்டில் தேடினான். கிடைக்கவில்லை. விறுவிறுவென நடந்து, மலரின் அறைக்கு சென்றான்.
''என்னடா தேடற, பர்ஸா?''
''இல்லை சிகரெட்!''
''முட்டாள்... சிகரெட்டை போய் மலர் அறையில் தேடற?'' வசுமதி கிண்டலடிக்க, மலரின் 'ஹேன்ட் பேக்'கிலிருந்து ஒரு பாக்கெட், 'டன்ஹில்' சிகரெட்டை எடுத்து வந்தான்.
வாய் பிளந்தாள், வசுமதி.
''என்னடா இது, மலர், சிகரெட் பிடிப்பாளா?''
''சூப்பரா... காலை எழுந்ததும், நீ என்ன செய்வே?''
''பல் தேய்ச்சுட்டு, கோலம் போடுவேன். ஏன் கேட்கற?''
''காலையில பல் தேய்க்காமலே, மலர், 'தம்' அடிப்பா.''
''அட கண்றாவியே... பொம்பளையாடா அவ?'' வெறுப்பாய் கேட்டாள்.
''அவ, ஆம்பளை அக்கா. காலையில் அவள் காபி போட்டா, மாலையில் நான், டீ போடணுமாம். ஒருநாள் அவள் சமைச்சா, மறுநாள் நான் சமைக்கணுமாம். தகராறு பண்றா,'' என்றபடியே சிகரெட்டை பற்ற வைத்தான்.
''டேய், நீ, வீட்டில் சிகரெட் குடிக்க மாட்டியே... இப்ப என்ன புதுப்பழக்கம்?''
''அட போக்கா... அவள் சமையலறையிலேயே சிகரெட் பிடிக்கறா. நான் ஹாலில் பிடிக்கக் கூடாதா? அவள் சிகரெட் பிடிக்கற கண்றாவியை பார்த்து, நான் சிகரெட் பிடிக்கறதையே விட்டுடலாம்ன்னு இருக்கேன்.''
''அப்படியா, எப்பலேர்ந்து மலர் இப்படி இருக்கா?''
''சமீபமா ஒரு மாசமாத்தான். கல்யாணம் முடிஞ்சு, 20 நாள் தான் ஒழுங்கா இருந்தாள். நான் கூட முட்டாள்தனமா அவளிடம் போய், 'எனக்கு மாடர்னா இருந்தால் தான் பிடிக்கும். டிரஸ், மேக் - அப், நுனி நாக்கு இங்கிலீஷ், எல்லாம் ரொம்ப, 'அல்ட்ரா'வா இருக்கணும். ஆபீஸ் பார்ட்டி, ரிசப்ஷன், டான்ஸ், பெரிய ஹோட்டல், பப்னு போக வேண்டியிருக்கும்'ன்னேன்.
''சிரித்தபடியே, 'சரி'ன்னு தலையாட்டினாள். அப்ப எனக்கு புரியலை, இவ நியூவேவ் வெஸ்டன் டைப்,'' என்று சொல்லி அழுதான்.
''சரி, அழாத. நான் பேசி சரி பண்றேன்,'' என்ற வசுமதி, ''அவ எப்ப வேலை முடிஞ்சு வருவா... எனக்கு நேரமாகுது,'' என தவித்தாள்.
''இரவு, 8:00 மணிக்குத்தான் வருவா. ஏன், 'லேட்'ன்னு கேட்டால், ஐ.டி., கம்பெனி வேலைன்னா அப்படித்தான்கறா. வேற எங்கேயோ போயிட்டு வரான்னு நினைக்கிறேன். இவள் தப்பான பெண்,'' என, அடுக்கிக் கொண்டே போனான்.
''சே... ரொம்ப தப்பா நினைக்காத... அவள் நல்ல குடும்பத்து பெண். நான் பேசறேன் அவள்கிட்ட, அதுவரை பொறுமையா இரு,'' வசுமதி அமைதிப்படுத்த, காரில் வந்திறங்கினாள், மலர்.
''பார்த்தியா... தினம் இவனோட காரில் வரா,'' என, கிசுகிசுத்தான்.
காரிலிருந்து இறங்கியதும், காருக்கு, 'ப்ளையிங் கிஸ்' கொடுத்தாள்.
டென்ஷனானான், ரவி.
கண்ணாலேயே, 'சும்மா இரு...' என, ஜாடை காட்டினாள், வசுமதி.
வசுமதியை பார்த்ததும் வாயை பொத்தி, ''வாங்கக்கா... எப்ப வந்தீங்க?'' என்றபடியே உள்ளே சென்றாள், மலர்.
''தண்ணி போட்டிருக்கா. இவளோட எப்படி குடும்பம் நடத்தறது?'' சீறினான், ரவி.
மலரிடம் பேச சென்ற வசுமதி, அரை மணி நேரம் பேசிவிட்டு சிரித்தபடி வெளியே வந்து, ரவியிடம், ''நீ மாறணும். மாறிடுவே,'' என்றாள்.
''என்ன உளறுறே?'' என்றான், ரவி.
''போகப் போக தெரியும்,'' என்று சொல்லி கிளம்பினாள்.
''லுாசு. உன்னைப் போய் கூப்பிட்டேன் பாரு,'' என்று, வசுமதியை திட்டினான்.
இரண்டு வாரம் ரவியிடமிருந்து எந்த தகவலுமில்லை. ரவிக்கு போன் செய்தாள், வசுமதி.
''வாங்கக்கா... ரெண்டு பேரும் வீட்டில் இருக்கோம்,'' என்றான், ரவி.
குரலில் சந்தோஷமிருந்ததால், போய் பார்த்துட்டு வருவோம் என கிளம்பினாள், வசுமதி.
வீட்டு வாசலில் சிரிப்பு சத்தம் கேட்டது.
'வாங்கக்கா வாங்க...' என்று, மலரும், ரவியும், வசுமதியை வரவேற்றனர்.
மலர், புடவையிலும், ரவி வேஷ்டியிலும் மிளிர்ந்தனர்.
''என்ன இது, ஒண்ணாயிட்டீங்க போலிருக்கு. வெரிகுட். என்ன, 'மேஜிக்' நடந்தது?'' என்றாள், வசுமதி.
'முதலில் ஸ்வீட் சாப்பிடுங்க...' என, சாக்லெட்டை நீட்டினர்.
''தேங்க்ஸ்... சொல்லுங்க, என்ன அதிசயம் நடந்தது?''
''எல்லாமே பொய்,'' என்றான், ரவி.
''புரியலை!''
''நான் சொல்றேன்... இவர், 'மாடர்ன் மாடர்ன்'னு எல்லா கெட்ட பழக்கத்தையும் கத்து வைச்சுட்டு, தனி உலகத்தில் இருந்தார். 'மாடர்ன்'னா கெட்ட பழக்கம்ன்னு தப்பான முடிவிலிருந்தார்.
''கல்யாணமாகி கொஞ்ச நாள்ல, தன்னால திருந்துவார்ன்னு பார்த்தேன். திருந்தலை. திடீர்னு, நான், 'அல்ட்ரா மாடர்னா' நடிச்சேன். கிச்சனில், சிகரெட்டை பத்த வைச்சு, புகையை விட்டு, அதிகாலையில், நான், 'தம்' அடிக்கிறதா நம்ப வைச்சேன்.
''வெறுத்துப் போய், 'தம்' அடிக்கறதையே விட்டுட்டார். ஒருநாள் விட்டு ஒருநாள் சமைக்கணும்; ஆணும் - பெண்ணும் சமம்ன்னு சண்டை போட்டேன். கலங்கிட்டார். அடிக்கடி தண்ணி அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தார்.
''நீங்க வந்த அன்னைக்கு, காரில் எங்க ஆபீசரோட நானும் வந்திறங்கி, தண்ணி போட்டது போல் நடிச்சு, ஒரு படி மேலே போய், காருக்கு, 'ப்ளையிங் கிஸ்' கொடுத்தேன். உண்மையில் அந்த, 'கிஸ்' காரிலிருந்த ஆபீசரோட பெண் குழந்தைக்கு.
''இதையெல்லாம் பார்த்து பயந்து போயி சரண்டராகி, 'நீ நார்மலா இரு போதும்'ன்னார். 'நீங்களும் நார்மலாகணும்'ன்னு பிடிவாதம் பிடிச்சேன். ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாரையும் போல் நார்மலாயிட்டார்.
''பின் சாவகாசமா நான் செய்த, 'ட்ரிக்'கை சொன்னேன். 'அடிப்பாவி இவ்வளவு, 'ப்ராடா' நீ...' என, என்னிடம் மயங்கிட்டார். அதான் இந்த ஒற்றுமை, சந்தோஷமெல்லாம்,'' என்றாள், மலர்
''ஆடற மாட்டை ஆடி கறக்கறா மாதிரி, என்னை திருத்த நாடகம் போட்டுட்டா. கெட்டிக்காரி,'' என்று, மலரை கொஞ்சினான், ரவி.
''டேய் நானிருக்கேன்டா... ரொம்ப ஓவரா போறியே,'' என்று கிண்டலடித்தாள், வசுமதி.
மாதவி
