PUBLISHED ON : ஜூலை 16, 2023

கறிவேப்பிலை செடியை வீட்டில் வளர்ப்பது மிக அத்தியாவசியமானது. மரமாய் வளர்க்க வேண்டும் என்றில்லை. குறுஞ்செடியாய் ஒரு தொட்டியில் வைத்து பராமரித்தால் போதும்.
இதில் மலை கறிவேப்பிலை, செங்காம்பு மற்றும் வெள்ளைக்காம்பு கறிவேப்பிலை போன்ற வகைகள் உள்ளன.
கறிவேப்பிலை பழத்திலிருந்து விதைகளை எடுத்து காய வைத்து செம்மண், எரு, மண்புழு உரம், மக்கிய குப்பை கலந்த கலவையில் விதைத்து விட்டால், 10 நாட்களில் முளைத்து துளிர் விட ஆரம்பித்துவிடும்.
பெரிய மரம் இருக்கும் இடத்தில், அதன் கீழேயே விதைகள் விழுந்து செடிகள் முளைத்திருக்கும். அதையும் வேருடன் பிடுங்கி வந்து வளர்க்கலாம். ஒரு சின்ன செடியாக நர்சரியில் வாங்கி வந்து, மண் கலவை தயார் செய்து, நட்டு வைப்பது எளிதாகும்.
இச்செடிக்கு இரு வேளையும் நீர் விட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில், 1 மி.லி., வேப்ப எண்ணெயை சேர்த்து தினசரி தெளித்து வந்தால், பூச்சிகள் அண்டாது. பஞ்சக்காவ்யாவை தண்ணீரில் கலந்து தெளித்து வந்தாலும் செடி செழிப்பாய் வளரும்.
சுவையின்மை, பசியின்மை, செரிமான பிரச்னை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கமறல் ஆகியவை நீங்க, கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதை தொடர்ந்து உட்கொண்டால் கண் பார்வையில் தெளிவும், இள நரையும் மறையும்.
பொடி, துவையல், குழம்பு, தேநீர் என, பல வடிவங்களில் கறிவேப்பிலையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள், காலையில் 10, மாலையில் 10 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்து விடும். ரத்தத்தில் வெள்ளை, சிவப்பு அணுக்களை அதிகரிக்கும்.
வாந்தி, வயிற்றுபோக்கு, சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு மற்றும் சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.
ஒரு கப் கொதிக்கும் நீரில், 40 கறிவேப்பிலை இலைகளை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி, இரண்டு மணி நேரம் அப்படியே வைக்க, அதன் சாறு முழுவதும் நீரில் இறங்கி நிறம் மாறியிருக்கும். பின் வடிகட்டி, வெதுவெதுப்பாக சூடு செய்து, தேன் கலந்து குடித்து வர, உடல் நலன் காக்கும்.
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து, சூடான நீரில் ஒரு முழு இரவு ஊற வைத்து விடுங்கள். காலையில் வடிகட்டி, கால் கப் கற்றாழை ஜெல், கால் கப் சோப்பு தண்ணீர் கலந்து ப்ரிட்ஜில் ஐஸ் தட்டில் வைக்கவும். ஐஸ் கட்டிகளாய் மாறியதை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் ஒரு கட்டி எடுத்து முகம், உடல் முழுவதும் தேய்த்து குளிக்க, பொலிவு கூடும். தலைக்கும் தேய்க்க, தலைமுடி உதிராது; நன்கு வளரும்.
கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து அரைத்து சாறாக்கி, 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி, தினசரி தலைக்கு தேய்த்து வந்தால், உடல் உஷ்ணம் குறையும்.
சுவையில் புளிப்பு தான். ஆனால், ரத்தத்தின் இனிப்பை குறைப்போம் என முந்தி நிற்கும், இன்சுலின் செடி அடுத்த வாரம்.
—வளரும் ம. வான்மதி
