PUBLISHED ON : செப் 03, 2023

ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்: 'மது பானங்களின் விலை பட்டியலை, 'டாஸ்மாக்' கடைகளில் வைக்க வேண்டும்...' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதே...
அந்த விலை பட்டியலைப் பார்த்து, மது கேட்டால் கிடைக்காது; 'டாஸ்மாக்' விற்பனையாளரின் வாய் தான், மதுவின் விலையை நிர்ணயம் செய்யும். அதற்கு, உற்சாகபான பிரியர்கள் அடிபணிவர்!
கே.எஸ். ஹரிஹரன், சென்னை: விஜயகாந்தின் வாரிசு, சினிமா அல்லது அரசியல், எதில் வெற்றி பெறுவார்?
இரண்டிலுமே இல்லை... முதல் சினிமாவே வெற்றி பெறவில்லை; அரசியலிலும் இதே கதி தான். இவரது அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை அனுபவித்தபடி, தன் காலத்தை ஓட்டட்டும்!
க. கதிரேசன், சென்னை: 'தமிழகத்தில் இருந்து, 'நீட்' தேர்வு, முற்றிலும் ஒழிக்கப்படும்...' என, தமிழக முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன், அமைச்சர் உதயநிதியும் கூறுகின்றனரே... முடியுமா?
முடியவே முடியாது. 'நீட்' தேர்வை வைத்து அரசியல் நடத்துகின்றனர்... ரத்து தொடர்பாக, ஜனாதிபதிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி, ஒரு மாதம் ஆகியும், அவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லையே!
அ. லோகசுந்தரி, திண்டுக்கல்:மணி... விவசாயம் செய்த அனுபவம் உங்களுக்கு உண்டா?
உண்டே... நெல் நாற்று நட்டிருக்கிறேன்; களை எடுத்து இருக்கிறேன்; அறுவடை செய்திருக்கிறேன். எல்லாம் பள்ளி நாட்களில், தாத்தாவின் வயலில்!
* மு. அழகுராஜா, நெல்லை: ஒரு மனிதனின் அழகு என்று, எதைச் சொல்லலாம்?
செடியின் அழகு, மலர்கள்... மரத்தின் அழகு, பழங்கள்... காற்றின் அழகு, தென்றல்... பதவிக்கு அழகு, பணிவு... மனிதனின் அழகு, ஒழுக்கம்!
எஸ். நாதன், துாத்துக்குடி:'பரம விரோதிகள்' என்றால் என்ன?
பணமும், மகிழ்ச்சியும் பரம விரோதிகள்... ஒன்றிருக்கும் இடத்தில், மற்றொன்று இருப்பதில்லை!
* வி. ராகவன், துாத்துக்குடி: நான் நல்ல குணங்களுடன் வாழ நினைக்கிறேன். இதனால் பலன் கிடைக்குமா?
'வெரி குட்!' நல்ல குணங்கள் இருந்தால், உங்களது பேச்சு, செயலில் நற்பண்புகள் வெளிப்படும். அன்பு, கருணை மற்றும் மனதில் சாந்தம் இருக்கும். இதனால், பல நன்மைகள் கிடைக்கும்!
